கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்திருக்கின்றன. நெம்மாரா, வல்லங்கி கிராமங்கள். நம் ஊரில் அறுவடை முடிந்து தை மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது போல் இந்தக் கிராமங்களில் அறுவடை முடிந்ததும், இரண்டு கிராம மக்களும் ஒன்று சேர்ந்து இந்த நெம்மாரா வல்லங்கி வேலா திருவிழாவை நடத்துகிறார்கள் (வேலா என்றால் திருவிழா).
நெம்மாரா கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் நெல்லிக்குளங்கரா பகவதி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும். இந்தத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர். விழாவின்போது, நெம்மாரா கிராமத்திலிருந்தும் வல்லங்கியிலிருந்தும் நெல்லிக்குளங்கரா பகவதி அம்மனின் உற்ஸவர் சிலையை அலங்கரிக்கப்பட்ட யானையின் மீது வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்வது வழக்கம்.
முப்பது யானைகள், விண்ணை முட்டும் அலங்காரப் பந்தல்கள் என களைகட்டும் நெம்மாரா வல்லங்கி வேலர் திருவிழாவின் ஒரு பகுதியாக இரண்டு கிராம மக்களும் தனித்தனியாக வெடிக்கட்டு என்ற பெயரில் வெடிகளை வெடித்து கொண்டாடுகிறார்கள்.