பூமாயி அம்மன் பூச்சொரிதல் விழா: பெண்கள் பூத்தட்டுக்களுடன் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2017 11:05
திருப்புத்துார்: திருப்புத்துார் பூமாயி அம்மன் கோயிலில் 83ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. திரளாக பெண்கள் பங்கேற்று பூக்களால் அம்மனுக்கு அபிேஷகம் செய்து வழிபட்டனர். தமிழகத்தில் சப்தமாதாக்கள் மூலவராக உள்ள முக்கியமான கோயில்களில் பூமாயிஅம்மன் கோயிலும் ஒன்று. சப்தமாதாக்களின் நடுநாயகமாக உள்ள வைஷ்ணவியை பூமாயி அம்மனாக இப்பகுதியினர் வழிபடுகின்றனர். திருப்புத்துாரின் தெற்கு எல்லைத் தெய்வமான பூமாயி அம்மன் கோயிலில் நேற்று அதிகாலை அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டுடன் விழா துவங்கியது. நகரின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் முளைப்பாரி, பால்குடம், பூத்தட்டுடன் ஊர்வலமாக வந்து அம்மனை பூக்களால் அபிேஷகம் செய்து வழிபட்டனர்.
காலையில் பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் பூத்தட்டுடன் வந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர். இன்று அதிகாலையில் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூச்சொரிதல் சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து இன்று இரவு 7:00 மணிக்கு மேல் அம்மனுக்கு கொடியேற்றி காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா துவங்குகிறது. தொடர்ந்து தினசரி இரவில் அம்மன் சர்வ அலங்காரத்தில் திருக்குள பவனி நடைபெறும். எட்டாம் நாளில் பால்குடமும், ஒன்பதாம் நாளில் அம்மன் ரத ஊர்வலமும், மே 25ல் பொங்கல் விழா நடைபெறும். பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தண்ணீர் பந்தல், இசைக்கச்சேரிகள், மின்னொளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.