நாளும் கோளும் நலிந்தவர்க்கில்லை என்கிறார்கள். நலிந்தவர்கள் என்றால், ஏழைகள் என்று ஏன் அர்த்தம் எடுத்துக் கொள்கிறீர்கள்? உடல் நலிந்தோர் என்று பொருள் கொண்டு பாருங்கள். அந்தச் சொற்றொடருக்கான அர்த்தம் புரியும். உடல் நலம் பாதிப்புற்றவர்கள், தாம் ஆரோக்கியமாக இருந்தபோது மேற்கொண்ட ஆன்மிகப் பணிதனை இந்தக் கட்டத்திலும் மேற்கொள்ள இயலாது என்பதால், அவர்கள் தாங்கள் உடல் பூரணமாக நலம் பெற்ற பிறகு, மீண்டும் அப்பணிகளில் ஈடுபடலாம். அதனால் உடல் நலிவுற்ற நாட்களில் அவர்கள் நாளையும் கோளையும் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள். உடல் நலிவுற்றவர்கள் மட்டுமின்றி, வயோதிகம் காரணமாக உடல் நலிந்தவர்களுக்கும் இறைவன் தானே தரிசனம் தருகிறான். ஆம், கோயில் உற்ஸவ காலங்களில் ஸ்வாமி ஊர்வலம் வரும். வீட்டில் இருக்கக்கூடிய இத்தகைய நலிந்தவர்கள் தம்மால் கோயிலுக்குப் போக முடியாவிட்டாலும் இறைவன் தம்மைத் தேடி வரும் பாக்கியம் பெறுகிறார்கள். இதுதவிர, அன்றாட வாழ்வுக்கே திண்டாடும் ஏழையான நலிந்தவர்களும் நாள், கோள் பார்த்தா ஆன்மிகக் கடமையை நிறைவேற்ற முடியும்? இவர்கள் வெறுமனே இறை நாமத்தை உச்சரித்தாலே போதுமே.