பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருமால் திருத்தலங்களில், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடைபெறும். ஆனால், திருமலை திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. அதற்கு பதில், முக்கோடி பிரதட்சண வாசல் திறப்பு விழா மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியின் முதல் நாளான தசமி அன்று திறக்கப்படும். வேங்கடாசலபதியைத் தரிசிக்க, பங்காரு வாயிலைக் கடக்க வேண்டும். கடந்ததும் ஸ்நபன மண்டபத்தைத் தரிசிக்கலாம். அதன் இடப்பக்கம் தென்கிழக்கு மூலையில் ராமர் மேடை உண்டு. இந்த ராமர் மேடைக்கு இடப்பக்கம் ஆரம்பித்து மூலவர் பெருமாளை வலம் வந்து, உண்டியல் இருக்கும் இடத்துக்கு அருகில் வெளிவருவது, முக்கோடி பிரதட்சண வாசல் வழிபாடு. தசமி அன்றும் ஏகாதசிக்கு மறுநாள் துவாதசி அன்றும் இந்த வாசல் திறந்தே இருக்கும். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சி. மேலும், வைகுண்ட ஏகாதசி அன்று திருமலையில் உள்ள ஸ்ரீசக்கரத் தீர்த்தத்தில் நீராடுவது புண்ணியம் என்று போற்றப்படுகிறது.