பதிவு செய்த நாள்
29
மே
2017
01:05
கரூர்: கரூர் - பசுபதிபாளையம் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தில், இரவு நேரத்தில் பெரும்பாலான மின் விளக்குகள் எரிவதில்லை. கரூர் மற்றும் பசுபதிபாளையம் நகரங்களை இணைக்கும் வகையில், அமராவதி ஆற்றின் குறுக்கே ஐந்து சாலை பகுதியில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. அப்போது, பாலத்தின் இருபக்கமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரத்தில் பாலத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் எரிந்ததால், அமராவதி ஆறும் வெளிச்சத்தில் திளைத்தது. தற்போது, பாலத்தில் உள்ள பெரும்பாலான விளக்குகள் எரியாமல் பழுதடைந்துள்ளது.
குறிப்பாக, ஒரு பக்கம் உள்ள அனைத்து விளக்குகளும் இரவு நேரத்தில், கடந்த சில நாட்களாக எரிவது இல்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும், அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இந்நிலையில், கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவையொட்டி, பாலம் உள்ள அமராவதி ஆற்றுப்பகுதியில் பொழுதுபோக்கு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வரும், 31ல், மாரியம்மன் கோவிலில் இருந்து, அமராவதி ஆற்றுக்கு கம்பம் செல்லும் விழா நடக்க உள்ளது. அப்போது, புதிதாக கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பொது மக்கள், கம்பம் செல்லும் நிகழ்ச்சியை பார்க்க உள்ளனர். இதனால், புதிய உயர் மட்ட பாலத்தில் உள்ள அனைத்து விளக்குகளையும் எரிய வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.