பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
11:06
மாடம்பாக்கம் : தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயிலில், பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செம்பாக்கத்தை அடுத்த மாடம்பாக்கம் பகுதியில், பழமை வாய்ந்த தேனுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தொல்லியல் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில், உலக பண்பாட்டு நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிரக, நாக தோஷம் உள்ளோர், இந்த கோவிலில் உள்ள சரபேஸ்வரரிடம் வேண்டி கொள்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை தோறும் ராகு காலத்தில், இந்த கோவில் துாணில் உள்ள சரபேஸ்வரருக்கு, உற்சவ புறப்பாடுடன் விசேஷ பூஜை நடக்கிறது.
கோவிலுக்கு என, தனியாக தேர் இல்லாததால், பல ஆண்டுகளாக தேர் திருவிழா நடை பெறவில்லை. ஏராளமான சொத்துக்கள், வருவாய் இருந்தும், இந்து சமய அறநிலையத்துறையினர், தேர் செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மாடம்பாக்கம் பகுதி பொதுமக்கள், பக்தர்கள் இணைந்து, தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு, புதிதாக தேர் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பொதுமக்கள் பங்களிப்புடன், 37 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் தற்போது வடிவமைக்கப்பட்டது. கோவில் பிரமோற்சவத்தை முன்னிட்டு, ஏழாம் நாள் திருவிழாவான இன்று(ஜூன்5ல்) தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.