பதிவு செய்த நாள்
05
ஜூன்
2017
11:06
கீழக்கரை: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் 108 திவ்ய தேசங்களில் 44வதாக விளங்குகிறது. மே 31 யாகசாலை பூஜை தொடங்குவதற்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது. திருக்கல்யாண உற்சவமண்டபத்தினுள் யாக சாலை குண்டங்கள் அமைக்கப்பட்டன.
ஜூன் 1 முதல் கால யாக சாலை பூஜைகள் தொடங்கப்பட்டது. இதனையொட்டி ஆச்சார்யாள் அழைப்பு, எஜமான அனுக்ஞை, மகாசங்கல்பம், புன்யாகவாசனம், பகவத் பிரார்த்தனை, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம், வேதிகா அலங்காரம் உள்ளிட்டவைகள் நடந்தது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு நித்ய ஹோமங்கள், யாத்ராதானம், கும்பஉத்தாபனம், கடங்கள் புறப்பட்டு நடந்தது. ஐந்து நிலை ராஜகோபுரம், பத்மாஸனித்தாயார், ஆதிஜெகநாதர், பட்டாபிஷேகராமர், தர்ப்பசயன ராமர் உள்ளிட்ட சன்னதி விமானங்களில் ராணி சேதுபதி ராஜேஸ்வரி நாச்சியார் பச்சை கொடி காட்டியவுடன் காலை 7.50 க்கு கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்களால் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. வரலாறு தொடர்பான வர்ணனைகளை வரலாற்று ஆர்வலர்கள் செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணிக்கு விசேஷ தீபாராதனை, சாற்றுமுறை கோஷ்டிபாராயணம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8:00 மணிக்கு கருட சேவையில் பெருமாள் சேவை சாதித்தலும் நடந்தது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.