நம்முடைய சாம்ப்ரதாயத்தில் மங்கள அனுஷ்டானத்தின் ஒரு பகுதியாக பெரியோர்கள் வாழ்த்துவர். அப்பொழுது நாடு நகரம் வீடு விளைச்சலோடு சுக சாந்தியினைப் பெற வேண்டும் என வாழ்த்துவர். அதோடு - வாழையடி வாழையாக -யுக யுகங்களாக - ஞானமே பொக்கிஷமாக வேதமும் நிலைத்திருக்க அருளாசி வழங்குவர்.
பகவான் ஸ்ரீநிவாசர் முதலில் எடுத்த மத்ச்யாவதாரத்தில் வேதங்களைக் கவர்ந்து கடலில் மறைத்த சோமுகாசுரனை மாய்த்து மீண்டும் வேதத்தை பிரம்மாவிற்கு அளித்தார். அந்த பிரம்மாவிடம் பரம்பரையாக வேதம் இருந்து வருகிறது.
வேதத்தை நம் முன்னோர்கள் வெறும் சப்தமாக மட்டும் பார்க்கவில்லை. பிரதி சப்தத்திற்கும் ஸ்வரங்களையும்- அனுராகங்களையும் சேர்த்து பாதுகாத்ததால் இன்றைக்கும் அதே வடிவத்தில் காலக்குறைப்பாடு இன்றி வேத கானம் தொடர்ந்து வருகின்றன. அதாவது தற்பொழுது நாம் கேட்கும் வேத கோஷம் சில யுகங்களுக்கு முன்னரும் இதே போன்று இருந்தன. இது நாம் கர்வம் கொள்ளக்கூடிய ஒன்று அன்றோ! இத்தகு வேத இலக்கியத்திற்கு வாரிசு நாம் என்னும்போது, உடல் புல்லரிக்கிறது. உள்ளம் புலகாங்கிதம் கொள்கிறது.
வேதம் இந்தியரின் ஞானக் கருவூலம். விஞ்ஞான சாகரம். குல, மத, வர்க, வர்ணங்களைக் கடந்து மனிதகுலம் சுகமாக, அமைதியாக, ஆனந்தமாக வாழ்வதற்கு வேண்டிய அனைத்து விஷயங்களும் வேதத்தில் உள்ளன. குடும்ப நல வாழ்க்கையிலிருந்து, இயற்கையை பாதுகாப்பதிலிருந்து, விஞ்ஞான விஷயங்கள், சுகாதார இரகசியங்கள் என அனைத்தும் வேதங்களில் உள்ளன என்றால் அதில் வியப்பொன்றுமில்லை. இன்றைக்கு தொழில் நுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்ட எத்தனையோ புதிய விஷயங்களின் அடிப்படை வேதத்தில் உள்ளது.
உண்மையில் நம் மஹரிஷிகள் பல ஆயிர வருட வருங்கால வாழ்க்கையினை, மானிடத் திறமையினை முன்னரே ஊகித்தனர். இன்று நாம் எங்ஙனம் வாழ்ந்தால் சுகமாக இருப்போமோ அதை அவர்கள் அன்றே குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும் அதை நாம் தெரிந்து கொள்வதில்லை. கடைபிடிப்பதும் இல்லை. எனவே தினமும் அமைதியின்றி வாழ்கின்றோம். தெரியாது வேகத்தில் அடித்து செல்கின்றோம். வேதத்தை தெரிந்துக் கொண்டால் நாம் எங்ஙனம் வாழ வேண்டும் என்பது தெரியும். அது உலக அமைதிக்கு ஆதாரமும் ஆகும்.
ஆகவே வேதத்தில் எது உள்ளதோ அதை தெரிந்துக் கொள்ள முயற்சிப்போம்!