பதிவு செய்த நாள்
22
ஜூன்
2017
12:06
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தேர், மழையில் நனைந்து, துாசி படிந்து வீணாகுவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதார தலமான, ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் உள்ளது. குண்டும், குழியுமான ஸ்ரீபெரும்புதுார் சாலையால், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் ராமானுஜர் உற்சவ விழாக்களின் போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய தேர் பயன்படுத்தப்படாமல், சிறிய தேர் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு விழா, கடந்த ஏப்ரல் மாதம் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்காக பல லட்சம் ரூபாய் செலவில் பெரிய தேர் புதுப்பிக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டது. மேலும், தேர் மீது மழை நீர், துாசி படியாத படி அமைக்கப்பட்டிருந்த தேர் கூரை அகற்றப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டன.
இதை அடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு பின் இந்த ஆண்டு தேரோட்டம் நடந்தது. இதனால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில் தேரோட்டம் முடிந்து, இரண்டு மாதங்கள் முடிய உள்ள நிலையில், இதுவரை தேரின் கூரை இன்னும் அமைக்கப்படவில்லை. திறந்த நிலையில், சாலையோரம் தேர் நிற்பதால், வாகன புகை, வெயில், மழை, துாசி ஆகியவற்றால் தேர் சேதமாகி வருகிறது. எனவே, கோவில் நிர்வாகத்தினர் விரைந்து, தேர் கூரையை அமைத்து, தேரை பாதுகாக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். நீண்ட காலத்திற்கு பின், இந்த தேர் சீரமைக்கப்பட்டு, வர்ணம் தீட்டப்பட்டது. தற்போது தேர் கூரை இல்லாததால், வெயில், மழையில் தேர் சேதமாகிறது. இதே நிலை நீடித்தால் தேர் வெகு விரைவில் சேதமாகி விடும். சாலையோரம் உள்ளதால் கனரக வாகனங்கள் தேர் மீது மோதும் அபாயமும் உள்ளது. எனவே, தேர் கூரையை அமைத்து பாதுகாக்க வேண்டும். ராம.வெங்கடேசன், ஸ்ரீபெரும்புதுார்