சின்னமனூர்: குச்சனூர் சனீஸ்வரர் கோயில் ஆடி சனிவாரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. தேனி மாவட்டம் குச்சனூர் சுரபி நதிக்கரையில் சுயம்பு மூலவராக சனீஸ்வரர் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். ஆடி 5 சனி வாரங்களில் நடைபெறும் திருவிழாவில் பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர்.இந்தாண்டு திருவிழா துவங்கியது. முன்னதாக, பூலாநந்தபுரம் ராஜ கம்பளம் மாரைய நாயக்கர் வகையறாவினர் கலிப்பணம் கழித்து புனித நீர் தெளித்தனர். அதன்பின் தலைமை அர்ச்சகர் திருமலை ஜெயபால் முத்து , காலை 11:30 மணிக்கு கோயில் வளாகத்தில் கொடியேற்றினார். மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கம், ஆராதனைகள் நடந்தன. ஏராளமனோர் தரிசனம் செய்தனர். பெரியாறு அணையில் நீர்மட்டம் குறைந்துள்ளதால் சுரபி நதி ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அறநிலையத்துறையினர் ஏற்பாடு செய்திருந்த தொட்டியில் பக்தர்கள் நீராடி நேர்த்திக்கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வான சனீஸ்வரர் - நீலாதேவி திருக்கல்யாணம் ஆக., 4ல் நடக்கிறது.