பதிவு செய்த நாள்
24
ஜூலை
2017
10:07
மயிலாடுதுறை: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், 27ம் தேதி ராகு பெயர்ச்சி விழா நடக்கிறது. பரிகார ராசிக்காரர்களுக்கான லட்சார்ச்சனை, 31ம் தேதி முதல் ஆக., 3 வரை நடக்கிறது. தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில், நாகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நவ கிரகங்களில் சாயாக்கிரகம் என்றழைக்கப்படும், ராகு பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.ராகு பகவான், ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறை, பின்னோக்கி பெயர்ச்சி அடைவார். அதன்படி, வரும், 27ம் தேதி பகல், 12:48 மணிக்கு, சிம்ம ராசியில் இருந்து, கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார் இதனால், மேஷம், மிதுனம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளாக கணிக்கப்பட்டுள்ளன.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு, நாகநாத சுவாமி கோவிலில், 31ம் தேதி துவங்கி, ஆக., 3 வரை லட்சார்ச்சனை நடக்கிறது. பரிகாரம் செய்ய வேண்டிய ராசிக்காரர்கள், 200 ரூபாய் செலுத்தி, லட்சார்ச்சனையில் கலந்து கொள்ளலாம். மேலும், ’ஆணையர், செயல் அலுவலர்-, நாகநாத சுவாமி திருக்கோவில், திருநாகேஸ்வரம்,- கும்பகோணம் தாலுகா,- தஞ்சாவூர் மாவட்டம்’ என்ற முகவரிக்கு, மணியார்டர் செலுத்தி, லட்சார்ச்சனையில் பங்கு பெறலாம். பணம் செலுத்தி, நேரில் வர முடியாதவர்களுக்கு, விபூதி, குங்கும பிரசாதம், தபாலில் அனுப்பப்படும். இத்தகவலை கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.