பதிவு செய்த நாள்
26
ஜூலை
2017
02:07
சிறுதாவூர் : சிறுதாவூரில் அமைந்துள்ள பழமையான சிவன் கோவிலின் நிர்வாகம், அறநிலையத்துறை வசம் மாறியும், திருப்பணிகள் முடிக்கப்படாமல், கும்பாபிஷேகம் நடத்துவது பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருப்போரூர் அடுத்த சிறுதாவூர் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, பூதகிரீஸ்வர் கோவில் உள்ளது. கோவிலின் அருகே பழமையான குளமும் உள்ளது.
இவற்றை சீரமைக்க, 2009ம் ஆண்டில் திருப்பணிகள் துவங்கின.
திருப்பணிகள் காரணமாக, கோவிலில் இருந்த விலை உயர்ந்த ஐம்பொன் சிலைகள், 2011ம் ஆண்டில் இதே பகுதியிலுள்ள பஜனை கோவிலில் வைக்கப்பட்டது. அவற்றை, 2013ல், மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றனர். மாவட்ட போலீசார் மேற்கொண்ட முயற்சிகளை அடுத்து, சிலைகள், ஒரு வாரத்தில் மீட்கப்பட்டன. இதையடுத்து, சிலைகள் அனைத்தும் பாதுகாப்பு கருதி அறநிலையத்துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகு, கிராம வழிபாட்டுக் குழுவினரின் பராமரிப்பிலிருந்த இக்கோவிலை, அறநிலையத் துறையைச் சார்ந்த திருப்போரூர் கந்தசுவாமி கோவில் நிர்வாகம் ஏற்க காஞ்சி உதவி ஆணையர் உத்தரவிட்டார். தற்போது, கந்தசுவாமி கோவில் நிர்வாகம், சிறுதாவூர் கோவிலின் ஏலம் உள்ளிட்ட நிர்வாக பணிகளை கவனித்துவருகிறது. இவ்வாறு, அறநிலையத்துறையின் வசம் கோவில் நிர்வாகம் மாறி, மூன்று ஆண்டுகளாகியும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திருப்பணிகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருப்பது, பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது.
இதனால், இக்கோவிலில் பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வந்த பிரதோஷ வழிபாடுகள் தடைப்பட்டு நிற்பதாக பக்தர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, தடைப்பட்டுள்ள திருப்பணிகளை விரைந்து முடித்து, கோவில் கும்பாபிஷேகத்தை விரைவில் நடத்த வேண்டும் என்பதே சிறுதாவூர் கிராம வாசிகள் மற்றும் பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.