பதிவு செய்த நாள்
26
ஜூலை
2017
02:07
புதுச்சேரி: புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் மொரட்டாண்டி டோல்கேட் அருகில் உள்ள விஸ்வரூப மகா சனீஸ்வர பகவான் கோவிலில், ராகு கேது பெயர்ச்சி விழா நடக்கிறது.
வரும் 27ம் தேதி ராகு பகவான், சிம்ம ராசியில் இருந்து கடக ராசிக்கு பிரவேசிக்கிறார். கேது பகவான் கும்ப ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையடுத்து 12 அடி உயர ராகு பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 22 ஆயிரம் உளுந்து வடை நைவேத்தியமும், அதேபோல் 12 அடி உயர கேது பகவானுக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும் நடக்கிறது.
காலை 8 மணிக்கு நட்சத்திர ராசி பரிகார ஹோமங்களும், 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், காலை 12.37 மணிக்கு சிதம்பர குருக்களால் சகல அபிஷேகமும் நடக்கிறது.
பகல் 12.37 மணிக்கு ராகு பகவான், கேது பகவானுக்கு பஞ்சலோக ஆபரண கவசம் சாற்றி, மகா தீபாராதனை நடக்கிறது. அன்னதானம் வழங்கப்படுகிறது.
பரிகாரம் செய்பவர்கள் பால் அபிஷேகத்திற்கு 100 ரூபாயும், பரிகார ஹோமத்திற்கு 150 ரூபாயும், பரிகார ஹோமம் செய்வதற்கு 300 ரூபாயும், தோஷ பரிகார அர்ச்சனைக்கு 150 ரூபாயும் அலுவலகத்தில் செலுத்தி பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.