கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3) - சொத்து சேரும் காலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2017 10:08
சனிபகவானை ஆட்சி கிரகமாக கொண்ட கும்ப ராசி அன்பர்களே!
இந்த மாதம் முழுவதும் ராகுவால் நன்மை காண்பீர்கள். சுக்கிரன் ஆக.21- வரையும் செவ்வாய் ஆக.28- வரையும் புதன் செப்.2- வரையும் சாதகமாக இருந்து நற்பலனை வாரி வழங்குவர். குரு பகவான் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் இருந்து பல்வேறு இன்னல்களை தந்திருப்பார். பொருளாதாரத்தில் திடீர் சரிவு ஏற்பட்டிருக்கும். உறவினர்கள் அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள். வீண் விரோதம் உருவாகி இருக்கலாம். இந்நிலையில் குருபகவான் செப்.2-ல் 9-ம் இடமான துலாம் ராசிக்கு செல்வது சிறப்பானதாகும். அவரால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள்.
நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவை பூர்த்தியாகும். தம்பதியிடையே ஒற்றுமை மேம்படும். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். இது தவிர குருவின் 9-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக இருக்கும். இதன் மூலமும் நன்மை அதிகரிக்கும்.குடும்பத்தில் பொருளாதார வளம் சிறக்கும். ஆடை, ஆபரணம் வாங்கலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகமுண்டு. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதாக நடந்தேறும். மாத இறுதியில் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் சற்று பொறுமை காப்பது நல்லது. ஆக.31, செப்.1,2- ல் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆக.17, செப்.12,13-ல் உறவினரால் பிரச்னையை சந்திக்கலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். செப்.5,6- ல் பெண்கள் உதவிகரமாக செயல்படுவர்.
தொழில், வியாபாரத்தில் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ராகுவால் லாபத்திற்கு குறைவிருக்காது. பொருளாதார வளம் படிப்படியாக அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபட்டு நிம்மதி உண்டாகும். செப்.3,4,7,8,9ல் சந்திரனால் தடைகள் குறுக்கிடலாம். ஆக.20,21, செப்.16-ல் அதிர்ஷ்டவசமாக வருமானம் உயரும். செப்.14-க்கு பிறகு பெண்கள் வகையில் தொல்லை குறுக்கிடலாம் கவனம்.
பணியாளர்கள் சிறப்பான முன்னேற்றம் காண்பர். எதிர்பார்க்கும் கோரிக்கைகளை ஆக.28-க்குள் கேட்டு பெற்று கொள்ளவும். தனியார் துறையில் இருப்பவர்கள் பதவி உயர்வு கிடைக்கப் பெறலாம். பணியிடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆக.29,30-ல் அதிர்ஷ்டவசமாக சலுகை வந்து சேரும். - கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் எளிதில் கிடைக்கும். ஆக.21-க்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படலாம். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கப் பெறுவர். தொண்டர் நலனில் அக்கறை ஏற்படும். கையில் பெரும் பணம் புழங்கும்.
மாணவர்கள்- புதன் சாதகமாக இருப்பதால் போட்டியில் பங்கேற்று வெற்றி காணலாம். குருபலத்தால் ஆசிரியர்கள் அறிவுரை பயன் உள்ளதாக அமையும். செப்.2-க்கு பிறகு அக்கறையுடன் படிப்பது அவசியம்.
விவசாயிகள் நல்ல வருமானம் கிடைக்கப் பெறுவர். குறிப்பாக நெல், கோதுமை மற்றும் பழ வகைகள், கிழங்கு வகைகள் மூலம் அதிக லாபம் கிடைக்கும். புதிய சொத்து சேர அனுகூலமான காலகட்டமாக அமையும். வழக்கு, விவகாரத்தில் சாதகமான முடிவு கிடைக்கும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்- குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். தடைபட்டு வந்த திருமணம் சிறப்பாக நடைபெறும். வேலைக்கு செல்லும் பெண்கள் மாத முற்பகுதியில் சிறப்பான பலன் பெறுவர். ஆக. 22,23-ல் விருந்து விழா என சென்று வருவர். செப்.10,11ல் எதிர்பாராத விதத்தில் நன்மை கிடைக்கப் பெறுவர்.