விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காரைக்குடியில் 117 சிலைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2017 12:08
காரைக்குடி: ஆக., 25ல் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காரைக்குடி பகுதிகளில் விசர்ஜனத்துக்காக 117 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளன. காரைக்குடியில் உள்ள சிலைகள் கீழ ஊரணியிலும், மற்ற ஊர்களில் உள்ள சிலைகள் அங்குள்ள ஊரணிகளிலும் கரைக்கப்பட உள்ளன. சிலைகளை ஆக. 25-ம் தேதி காலை 6:00 மணி முதல் ஆக. 27-ம் தேதி மாலை 4:00 மணி வரை மட்டுமே வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி டி.எஸ்.பி.,கார்த்திகேயன் கூறியதாவது: மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிலைகளை பிளாஸ்ட் ஆப் பாரீஸ் போன்ற ரசாயன பொருளால் தயார் செய்ய கூடாது. களிமண் மற்றும் காகிதக்கூழால் மட்டுமே செய்ய வேண்டும். தண்ணீரில் எளிதில் கரையாத பெயிண்ட்டால் சிலைகளுக்கு வர்ணம் பூசுவதை தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சாய பொருட்களை உபயோகிக்க வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறி தயார் செய்யப்படும் சிலைகளை நீரில் கரைப்பதற்கு அனுமதி அளிக்கப்படமாட்டாது.
விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடத்தின் சொந்தக்காரரிடம், எழுத்து மூலமான அனுமதியை ஊர்வலம் நடத்துபவர்கள் பெற்றிருக்க வேண்டும். சிலைகள் பாதுகாப்பு கமிட்டி அமைக்க வேண்டும். விநாயகர் சிலைகள் நிறுவப்படும் இடத்தில் கீற்று கொட்டகைகள் அமைக்க கூடாது. தீயணைப்பு கருவிகளை தயார் நிலையில் வைக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை காலையில் 2 மணி நேரமும், மாலையில் 2 மணி நேரமும் மட்டுமே உபயோகிக்க வேண்டும். சிலையின் உயரம் ஐந்து அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும், என்றார்.