பதிவு செய்த நாள்
22
ஆக
2017
12:08
திருப்பதி: திருமலையில், எட்டு கோடி ரூபாய் செலவில் மூன்றடுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருமலையில், சமீபகாலமாக குழந்தை கடத்தல், வாடகை அறைகளின் பூட்டை உடைத்து பக்தர்களின் உடைமைகளை திருடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து, தேவஸ்தான நிர்வாகம், எட்டு கோடி ரூபாய் செலவில் புதிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம், மூன்றடுக்கு பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அலிபிரி மலைப் பாதை, பாதயாத்திரை மார்க்கம், ஸ்ரீவாரிமெட்டு பாதயாத்திரை மார்க்கம், திருமலையில் முக்கிய இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. வைகுண்டம் காத்திருப்பு அறைகள், ஏழுமலையான் கோவிலுக்குள் நுழையும் இடம் உள்ளிட்ட பகுதிகளில், அதிநவீன மெட்டல் டிடெக்டர் நுழைவாயில்கள் ஏற்படுத்த உள்ளன. இதன் மூலம், திருமலைக்கு வரும் அனைவரது நடவடிக்கையும் கண்காணிக்கப்படும். ’இந்த பாதுகாப்பு வசதி மூலம், திருமலையில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியும்’ என, தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.