வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடந்த ஆவணி அமாவாசையை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.சதுரகிரி மலையில் அமாவாசை வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு மாதமும், அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக தலா 4 நாட்கள் வீதம் மலைப்பாதை திறந்து விடப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் மலையில் திரண்டு வழிபடுவது வழக்கம். ஆவணி அமாவாசையொட்டி மலை பாதை திறக்கப்பட்டதால், ஆக. 19 சனிக்கிழமையன்று சனிப்பிரதோஷம், அன்று விடுமுறை இருந்ததாலும் ஏராளமான பக்தர்கள் மலையில் திரண்டனர். தரிசனம் முடிந்து மறுநாள் ஞாயிறு அடிவாரம் திரும்பினர். நேற்று ஆவணி அமாவாசை வழிபாடாக இருந்ததால் ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர். இப்படி 3 நாட்களும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து மலையேறிச் சென்றது. இதனால் கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி அமாவாசை வழிபாட்டிற்கு வரமுடியாத பக்தர்கள் இந்த அமாவாசை வழிபாட்டில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று உச்சிகால பூஜைகளுடன் அமாவாசை வழிபாடு நிறைவு பெறுவதால் மாலை 5:00 மணியுடன் மலைப்பாதை மீண்டும் மூடப்படுகிறது.