பதிவு செய்த நாள்
02
செப்
2017
05:09
விருத்தாசலம்: குரு பெயர்ச்சியொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. நவக்கிரகங்களில் பிரதானமான குரு பகவான், கன்னி ராசியில் இருந்து காலை 9:31 மணிக்கு துலாம் ராசிக்கு பெயர்ந்தார். இதையொட்டி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆழத்து விநாயகர், சுவாமி, தாயார், சண்முக சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி சன்னதியில் உள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பரிகார ராசிகள் மற்றும் பெயர்ச்சியடைந்த ராசிகளை சேர்ந்தவர்கள் சுவாமிக்கு தீபமிட்டு, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெண்ணாடம்: குருபெயர்ச்சியையொட்டி, பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவிலில் மூலவருக்கு காலை 8:00 மணியளவில் சிறப்பு பூஜை, 8:30 மணியளவில் சிறப்பு ஹோமம், 9:00 மணியளவில் நவகிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், 9:45 மணியளவில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
கம்மாபுரம்: கார்கூடல் பரமேஸ்வரன் கோவிலில் காலை 9:30 மணியளவில் மூலவர் மற்றும் தட்சிணா மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், முதனை முதுகுன்றீஸ்வரர் கோவில், கார்மாங்குடி நித்தீஸ்வரர், கீழப்பாலையூர் ஆதி லிங்கேஸ்வரர் கோவில்களில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.