பதிவு செய்த நாள்
20
செப்
2017
11:09
கோவை : நவராத்திரியை முன்னிட்டு, கோவை கடைவீதிகளில் கொலு பொம்மைகளின் விற்பனை, சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அம்பாளுக்கு உகந்த புரட்டாசி மாத நவராத்திரி பண்டிகை, நாளை முதல் துவங்குகிறது. மனிதன் படிப்படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, நாளை முதல் ஒன்பது நாட்களுக்கு வீட்டில் கொலு பொம்மை வைத்து சிறப்பு வழிபாடு செய்வர். முதல்படியில் செடி, புல், கொடி உள்ளிட்ட ஓரறிவு கொண்ட தாவர பொம்மைகள்; 2ம் படியில், ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு; 3ம் படியில், கறையான், எறும்பு; 4ம் படியில் நான்கறிவு கொண்ட நண்டு, வண்டு உள்ளிட்ட பொம்மைகள்; 5ம் படியில் ஐந்தறிவு கொண்ட மிருகங்கள் மற்றும் பறவைகள்; 6ம் படியில் மனிதர்கள்; 7ம் படியில் சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் பொம்மைகள்.
எட்டாம் படியில் தேவர்கள், தெய்வங்கள்; 9ம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தேவர்கள், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி தேவி போன்ற முப்பெரும் தேவிகள், நடுவே ஆதிபராசக்தியின் உருவ பொம்மையையும் வைத்து ஒன்பதாவது படியை நிறைவு செய்ய வேண்டும். இதற்காகவே, காஞ்சிபுரம், கடலுார், வேலுார், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து காகிதக்கூழ், பைபர், மண், பிளாஸ்டாபாரீஸ் போன்ற பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள் ஏராளமாக கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளன. டவுன்ஹால், எஸ்.கே., பியர்ல்ஸ் அண்ட் கிராப்ட் கடை உரிமையாளர் கண்ணன் கூறுகையில், தமிழ்நாடு பாரம்பரிய மண் பொம்மைகள் அல்லாது, வாரணாசி, சென்னபட்னா, மணிப்புரி மரப்பொம்மைகள், 27 நட்சத்திரம் செட், மலாயா செட், வேத மூர்த்திகள், லலிதாம்பிகை செட் உள்ளிட்ட பொம்மை ரகங்களும் அதிகளவில் வந்துள்ளன.
வித்தியாசமான செட் பொம்மைகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். தற்போது, வழக்கத்திற்கு மாறாக இந்த கொலு சீசனில், ஒரு நாளைக்கு குறைந்தது 50 ஆயிரம் முதல், ஒரு லட்சம் ரூபாய் வரையில் பொம்மைகள் விற்பனையாகின்றன. வரும் 30ம் தேதி வரை 20 சதவீத தள்ளுபடியும் உண்டு, என்றார்.