பதிவு செய்த நாள்
20
நவ
2017
12:11
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அடுத்துள்ள பகவதிபாளையத்தில், தீபத் திருநாளுக்காக, கார்த்திகை விளக்கு தயாரிப்பு பணியில், மண்பாண்டம் தயாரிப்போர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.கிணத்துக்கடவு அடுத்துள்ள பகவதிபாளையத்தில், கடந்த 50 ஆண்டுகளாக மண்பாண்டங்கள் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மண்பாண்டத்தில் பல்வேறு வகையாக பொருட்கள் தயாரித்து விற்பனை செய்கின்றனர். இதற்காக, வருவாய்த்துறை அனுமதி பெற்று, கிணத்துக்கடவு அருகேயுள்ள கோதவாடி குளத்தில் களிமண் எடுத்து பயன்படுத்துகின்றனர். மண்பாண்டங்கள் மட்டுமின்றி, சீசனுக்கு தகுந்தாற்போன்று, விநாயகர் சிலைகள், கிருஷ்ணர் சிலை மற்றும் கார்த்திகை தீப திருநாளுக்காக, கார்த்திகை விளக்கு தயாரிக்கின்றனர்.
கார்த்திகை தீப திருநாள் நெருங்கி வரும் நிலையில், விளக்குகள் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிராமத்தில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் வீடுகளில் விளக்கு தயாரிப்பு பணி நடக்கிறது. ஒருவர் தினமும், 1,200 விளக்குகள் தயாரிக்கிறார். தயாரிக்கப்பட்ட விளக்குகளை வெயிலில் உலர வைக்கின்றனர். உலர்ந்த விளக்குகளை, தீயில் சுட்டு பதப்படுத்துகின்றனர். அதன்பின், ஆயிரம் விளக்குகளை ஒரு கோணிப்பையில் பார்சலாக கட்டி பாதுகாப்பாக இருப்பு வைத்துள்ளனர்.ஒரு கோணிப்பை விளக்கு, 600 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் விளக்குகளை, கோவை, மதுக்கரை, வழுக்குப்பாறை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கார்த்திகை தீப திருநாள் முடிந்ததும், தை மாதத்தில், பொங்கல் பண்டிகைக்கு மண் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபடவுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். மண்பாண்ட தொழிலாளி மருதாசலம் கூறுகையில், ”இத்தொழிலில் ஏழு குடும்பங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களது வாரிசுகள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். ”இதனால், மண்பாண்ட தொழிலில் இருவர் மட்டுமே ஈடுபட்டுள்ளோம். ஆண்டு முழுவதும் பண்டிகை காலங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் மண்பாண்டம் செய்வதற்கு, ’ஆர்டர்’ வருவதால், தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கிறது,” என்றார்.