பதிவு செய்த நாள்
21
நவ
2017
11:11
மடத்துக்குளம் : கொங்குநாட்டு கிராமங்களில் அம்மன் வழிபாடு மிகவும் பழமையானதாகும். அம்மனை பல உருவங்களில் மக்கள் வழிபடுகின்றனர். ஒவ்வொரு உருவகங்களுக்கும் ஒரு பெயரிட்டு அழைப்பது வழக்கம். மடத்துக்குளம் அருகே கொமரலிங்கம் பகுதியில் அம்மனை சூலம் உருவத்தில் வணங்குகின்றனர். இதை ’செங்கப்பிடாரி அம்மன்’ வழிபாடு என குறிப்பிடுகின்றனர். தரைப்பகுதியில் ஆறு அடி நீளம், மூன்று அடி அகலத்தில் செவ்வக வடிவ தொட்டி அமைப்பில் உள்ள, இடத்தில் இரண்டு கற்களுக்கு, திருநீறு, பொட்டு, சந்தனம் வைத்து, பட்டுத்துணி சுற்றி, பூக்களால் அலங்காரம் செய்துள்ளனர். தொட்டியின் மேற்சுற்றுசுவரில் செங்கற்களால் சதுர வடிவமாக மாடாக்குழி அமைத்து இரண்டு விளக்குகள் வைத்துள்ளனர். தெருவிலிருந்து சுவாமிக்கு அருகில் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. மாடாக்குழிக்கு அருகிலுள்ள தரைமட்டத்திலிருந்து ஆறுஅடி உயரத்தில் பிரம்மாண்டமான சூலம் உள்ளது.
தினசரி காலை மற்றும் மாலை நேரத்தில் பூஜை நடக்கிறது. இந்த தெருவிலுள்ள மக்கள் தவிர பல இடங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வணங்கி செல்கின்றனர். குறிப்பிட்ட நாளுக்கு ஒருமுறை திருவிழாவும் நடக்கிறது. அப்போது சிறப்பு அலங்காரம் செய்து செங்கப்பிடாரி அம்மனை வழிபடுகின்றனர். வேப்பிலையை கொத்து, கொத்தாக அம்மனுக்கு படைப்பது விழாவின் சிறப்பாகும். சூலத்தில் வேப்பிலையை கொத்தாக வைத்து, அலங்கரிக்கின்றனர். கொமரலிங்கம் பழனி ரோட்டில் ஆரம்ப சுகாதாரநிலையம் எதிரிலுள்ள முக்கியதெரு மடத்துக்குளம் ரோட்டில் இணைகிறது. தெற்கு, வடக்காக அமைந்துள்ள இந்த தெருவின் மத்தியில் இந்தக்கோவில் உள்ளது. இதை சுற்றி 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மக்கள் கூறுகையில், ’அமராவதி ஆற்றங்கரையில் காசிவிசுவநாதர் கோவிலுக்கு அருகில் செங்கப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலிலுள்ள அம்மன் பலதலைமுறைக்கு முன்பு இந்த இடத்தில் எழுந்தருளியதாக செவிவழிதகவல்கள் உள்ளன. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் நுாறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த வழிபாடு தொடர்கிறது. கடந்த காலத்தில் இந்த இடத்தில் பல வேல்கள், சூலங்கள் அதிகளவில் நடப்பட்டு, தரைப்பகுதியில் கற்களை சுவாமியாக வைத்து வழிபாடு நடந்தது. சில ஆண்டுக்கு முன்பு, இங்குள்ள மக்கள் குழுவாக சேர்ந்து தற்போதுள்ள கோவிலை உருவாக்கினார்கள். தற்போது பலரும் வந்து வணங்குகின்றனர். அம்மனின் ஆயுதமான சூலம் தான் முக்கியவழிபாட்டு பொருளாக உள்ளது,’ என்றனர்.