பதிவு செய்த நாள்
25
நவ
2017
11:11
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. டிச., 2 மாலை 6:15 மணிக்கு மலை மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
விழா துவக்கமாக கோயில் அனுக்ஞை விநாயகர் முன் யாக பூஜை, விசாக கொறடு மண்டபத்தில் விஷப யாகம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். கொடிக்கம்பத்தில் சிவாச்சார்யார்கள் திருவிழா கொடியேற்றினர். பட்டு, மா இலை, தர்ப்பை புல் வைத்து கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டு, கம்பத்தின் அடிப்பாகத்தில் பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. திருவிழா நம்பியார் சிவாச்சார்யாருக்கு பரிவட்டம் கட்டப்பட்டது சுவாமி வீதி உலா: இன்று(நவ., 25) முதல் டிச., 3 வரை தினமும் காலை சிம்மாசனம், தங்கச்சப்பரம், சப்பரம், விடையாத்தி சப்பரத்திலும், இரவு தங்கமயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், வெள்ளி ஆட்டுக்கிடாய், தங்கக்குதிரை, காமதேனு வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா சென்று அருள்பாலிப்பர். நவ. 29ல் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, 30 காலையில் கங்காளநாதர் சுவாமி புறப்பாடு, மாலை நடராஜமூர்த்தி, சிவகாமி அம்பாள், காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடு, டிச.,1ல் பட்டாபிஷேகம் நடக்கும. டிச., 2 காலை தேரோட்டம், மாலையில் மலை மீது மகா தீபம் ஏற்றப்படும். டிச. 3 தீர்த்த உற்சவம் நடக்கும்.