மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07டிச 2017 11:12
திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயிலான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். திருட்டு, துரோகம், சொத்துக்களை அபகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அம்மனிடம் முறையிட்டால் அவள் தண்டிப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஆக்ரோச தெய்வமான பத்ரகாளியம்மனை சாந்தப்படுத்த பக்தர்கள் எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம், இங்கு மாதம்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். நேற்று காலை உதவி ஆணையர் செல்வி தலைமையில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. அன்னதான உண்டியலை தவிர்த்து மீதமுள்ள ஒன்பது உண்டியல்களையும் திறந்து நகை, பணம், நாணயம், வெள்ளி பொருட்கள் என தனித்தனியாக பிரித்து தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டன. இதில் 141 கிராம் தங்கமும், 365 கிராம் வெள்ளியும் 16 லட்சத்து 13 ஆயிரத்து 109 ரூபாய் ரொக்கமும் காணிக்கையாக வந்திருந்தன. வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.