முஆத் பின் ஜபல் (ரலி) என்பவர், ஒருமுறை நாயகத்துடன் வண்டியில் சென்றார். நாயகம் முன்னாலும், முஆத் அவர்கள் பின்னாலும் அமர்ந்திருந்தனர். நாயகம் முஆத்தை சத்தமாக அழைத்தார். அதற்கு முஆத், “நபிகளாரே! நான் பின்னால் தான் இருக்கிறேன், என்ன சொல்லுங்கள்?” என்றார். நாயகம் எதுவும் பேசவில்லை.நாயகம் மீண்டும் அவரை அழைத்தார். இப்போதும், முஆத் அவர்கள், “நாயகமே, இதோ..நான் உங்கள் அருகில் தான் உள்ளேன்,” என்றார். நபிகள் இப்போதும் அமைதியாகி விட்டார். வண்டி சிறிது தூரம் கடந்ததும் மீண்டும் அழைத்தார் நாயகம். “அண்ணலே, தாங்கள் என்னிடம் என்ன சொல்ல வேண்டுமோ சொல்லுங்கள். உங்கள் கருத்தை கேட்க நான் ஆவலாயிருக்கிறேன்,” என்றார் முஆத். “முஆதே! இறைவனுக்கு மக்கள் செய்ய வேண்டிய கடமை என்ன தெரியுமா?” என்றார். ‘சொல்லுங்கள்,” என்று முஆத் கேட்கவும், “மக்கள் இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவனுக்கு இணையாக வேறு யாரையும் ஈடு வைக்கக்கூடாது. அதேநேரம், அல்லாஹ் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையையும் கூறுகிறேன். தனக்கு கீழ்ப்படிந்து வாழும் மக்களுக்கு அவன் துன்பம் தராமல் இருக்க வேண்டும்,” என்றார். இதை மும்முறை அழைத்து ஏன் கூறினார் தெரியுமா? ஒரே தடவையில் அழைத்து இந்த முக்கிய கருத்தை சொல்லி விட்டால், சில காலத்தில் இதை மறந்து விடலாம். ஆனால், மும்முறை அழைத்துச் சொன்னதன் மூலம் இந்நிகழ்ச்சி மறக்காமல் நினைவில் இருக்கும். அப்போது சொல்லப்பட்ட கருத்தும் மறக்காது என்பதால், நாயகம் இந்த யுக்தியை பயன்படுத்தினார்.