மதுரை: மதுரை லட்சுமி சுந்தரம் ஹாலில், சத்குரு சங்கீத சமாஜ இசை விழாவில் நேற்று ராமகிருஷ்ணமூர்த்தி குழுவினர் வழங்கிய வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக சாவேரி ராகம், ஆதிதாள வர்ணத்தோடு விறுவிறுப்பும் சேர்ந்து கொண்டது. கல்யாணி ராகத்தில் அமைந்த சிதம்பரம் என மனம் கனிந்திட என்று தொடங்கும் தமிழ்பாடல் இசையால் மனதை மயக்கியது. முத்துச்சாமி தீட்சிதரின் அங்காரக மாஸ்த யாம்யஹம் என்ற சுருட்டி ராக க்ருதி சாகித்ய சுத்தமும் பாவமும் கலந்து பாட, வைத்தீஸ்வரன் கோயில் தரிசனம் இசை ரசிகர்களுக்கு கிடைத்தது. அடுத்து பாரம்பரியமான யதுகுல காம்போதி ராக ஆலாபனையை நேர்த்தியாக வழங்கினார் ராமகிருஷ்ண மூர்த்தி. காலை துாக்கி நின்றாடும் தெய்வமே என்ற முத்து தாண்டவர் பாடலை தமிழ் உணர்வுடன் இசைத்தார்.
தொடர்ந்து ஹிந்தோள ராக ஆலாபனையை தொடங்கிட ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியது. தியாகராஜரின் மனசுலோனி மர்மமு என்ற ஆதிதாள கீர்த்தனை விறுவிறுப்புடன் அமைந்தது. அடுத்து கானடா ராக ஆலாபனையை நெக்குருகி பாடி கை தட்டலை பெற்றார் பாடகர். தியாகராஜரின் சுகி எவ்வரோ கீர்த்தனை ராக பாவத்துடன் இருக்க, கச்சேரி சிறந்த நிறைவை தந்தது. வயலின் திருவனந்தபுரம் சம்பத், மிருதங்கம் விஜய் நடேசன், கஞ்சிரா ராஜகணேஷ் தம் திறனை வெளிப்படுத்தினர். இன்று கடம் வித்வான் விக்குவிநாயக்ராமின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.