பதிவு செய்த நாள்
17
ஜன
2018
12:01
திருத்தணி: காணும் பொங்கல் விழாவை முன்னிட்டு, உற்சவர் முருகப் பெருமான், திருத்தணியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணியில், காணும் பொங்கல் விழாவையொட்டி, உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன், நேற்று, காலை, 6:00 மணிக்கு, மலைக்கோவிலில் இருந்து, படிகள் வழியாக, சன்னிதி தெருவிற்கு புறப்பட்டார்.
காலை, 8:00 மணிக்கு, சன்னிதி தெருவில் உள்ள கோவில் ஆணையர் குடியிருப்பு முன், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், உற்சவ பெருமான் எழுந்தருளினார். பின், அங்கு உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை, 8:20 மணிக்கு, திருத்தணி சுமைதாரர்கள் மாட்டு வண்டியில் உற்சவ பெருமானை, நகரம் முழுவதும் உள்ள வீதிகளுக்கு அழைத்து (இழுத்து) சென்றனர். மாலை, 5:30 மணிக்கு, பழைய பஜார் தெரு அருகில் உள்ள ரெட்டிகுளம் மண்டபத்தில் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு, 8:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான் மீண்டும் மலைக்கோவிலுக்கு சென்றடைந்தார். உற்சவர் முருகப் பெருமான் வீதியுலாவையொட்டி, திருத்தணி நகர பெண்கள் தெருக்களில் வண்ணக்கோலங்கள் போட்டு, கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.