பதிவு செய்த நாள்
17
ஜன
2018
12:01
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வட்டபாறையின் மேல் அமைந்துள்ள காளியம்மன் கோவிலில், காணும் பொங்கலை ஒட்டி, பால்குட விழா மற்றும் ஊரணி பொங்கல் விழா நேற்று கோலாகலமாக நடந்தது.கோவில் நகரமான திருக்கழுக்குன்றத்தில் வேதகிரீஸ்வரர் கோவில், ருத்திரகோட்டீஸ்வரர் கோவில், பக்தவச்சலேஸ்வரர் கோவில் இவற்றுடன் பழமையான வட்டபாறையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் உள்ளது. திருக்கழுக்குன்றம் ருத்ராங்கோவில் கிராமத்தினர், பல ஆண்டுகளாக சிதிலமடைந்த இக்கோவிலை, திருப்பணி செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து, 60 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி செய்து, கடந்த ஜூன் மாதம் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு, மாட்டு பொங்கலை ஒட்டி, நுாற்றுகாணக்கான பெண்கள் பங்கேற்ற குத்துவிளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து, நேற்று காணும் பொங்கலை ஒட்டி, 108 பால்குட விழா, சங்கு தீர்த்த குளத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு, கோவிலுக்கு, 11:30 மணிக்கு வந்தடைந்தது. பின், காளியம்மனுக்கு பால்குட அபிஷேகம் செய்தனர். பின் பிரார்த்தனையாக பக்தர்கள் ஊரணி பொங்கல் வைத்து, அம்மனை வழிபட்டனர்.