பதிவு செய்த நாள்
17
ஜன
2018
12:01
திருவள்ளூர்: தை அமாவாசையை முன்னிட்டு, திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, பெருமாளை வழிபட்டனர்.திருவள்ளூர், வீரராகவர் கோவில், 108 திவ்ய ஸ்தலங்களில் ஒன்று. ஒவ்வொரு அமாவாசையன்றும், கோவிலுக்கு அருகில் உள்ள ஹிருதாபநாசினி குளத்தில் புனித நீராடி, வீரராகவரை வழிபட்டால், நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சாலிஹோத்ர மகரிஷிக்கு வீரராகவர் காட்சி அளித்த நாள் என்பதால், தை அமாவாசையன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், இங்கு வந்து வீரராகவரை வழிபடுகின்றனர். இந்த ஆண்டின் தை அமாவாசையான நேற்று, தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தர்கள், முதல் நாளே திருவள்ளூர் வந்தனர். நேற்று அதிகாலை, கோவில் குளத்தில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவ பெருமாளை வழிபட்டனர்.
ரத்னாங்கி சேவை: தை பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான நேற்று, உற்சவர் ரத்னாங்கி சேவையில், காலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, அருள்பாலித்தார். பின்னர், நேற்று மாலை , 4:00மணிக்கு, சேஷ வாகனத்திலும், இரவு, 10:00 மணிக்கு, சந்திரபிரபையிலும் உற்சவர் வீதி வலம் வந்தார். சாலிஹோத்திரமகரிஷிக்கு வீரராகவர் காட்சியளித்த நன்னாள் தை அமாவாசை என்பதால், நேற்று, பெருமாளை வணங்க ஏராளமானோர் குவிந்தனர். மூலவரை தரிசிக்க நீண்ட வரிசையில், பக்தர்கள் காத்திருந்து வழிபட்டனர்.