குடும்பத்திலோ அல்லது பணி இடத்திலோ பேசுவதை ஒட்டுக்கேட்டு, பிறரிடம் சொல்பவர்களை நபிகள் நாயகம் கண்டிக்கிறார். தங்கள் குடும்ப ரகசியம் வெளியே கசியக் கூடாது என நினைப்பவர்கள், தங்களுக்குள் மெதுவாக பேசுவர். ஒட்டுக்கேட்பவனின் காதில் அது அரைகுறையாக விழும். இதுபற்றி பிறரிடம் சொல்லும் போது, காதில் விழாத சந்தேகத்திற்குரிய வார்த்தைகளை இட்டுக்கட்டி சொல்ல வேண்டி வரும். இப்படி வெளியில் கசியும் அந்த ரகசியம், சம்பந்தப்பட்ட குடும்பத்தையே அழித்து விட வாய்ப்புண்டு. நாயகம் இதுபற்றி கூறும் போது, “நீங்கள் தவறான சந்தேகங்களை விட்டு, உங்களை காத்து கொள்ளுங்கள். ஏனெனில், சந்தேகத்துடன் சொல்லப்படுகிற விஷயம், அனைத்தையும் விட பொய்யான விஷயமாகும். பிறரைப் பற்றி செய்திகள் சேகரித்து கொண்டு திரியாதீர்கள். பிறரைப் பற்றி துருவித்துருவி ஆராயாதீர்கள். உங்களுக்குள் தரகு வேலையில் ஈடுபடாதீர்கள். ஒருவர் மீது ஒருவர் வெறுப்பு கொள்ளாதீர்கள். ஒருவரையொருவர் துண்டிக்க முனையாதீர்கள். இறைவனின் அடியார்களாக விளங்கி, ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழுங்கள்,” என்கிறார்.