திருமணமான ஒவ்வொரு பெண்ணுக்கும் தீர்க்க சுமங்கலியாக வாழவேண்டும் என்பதே முக்கியமான விருப்பமாக இருக்கும். கன்னிப்பெண்கள், நல்ல கணவன் தங்களுக்கு வாய்த்திட வேண்டும் என்று விரும்புவர். மணமான பெண்கள், தீர்க்க சுமங்கலி வரம் வேண்டியும்; கன்னியர், மனதுக்குப் பிடித்த மணவாளன் கிட்ட வேண்டியும் செய்யும் விரதமே காரடையான் நோன்பு. இந்த நோன்பு நோற்கப்படுவதற்குக் காரணமாக புராணக் கதை ஒன்று உண்டு. மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.
நோன்பு கயிறு கட்ட நல்ல நேரம்: (14ம் தேதி ) இரவு 7.00 மணி முதல் 8.00 மணிக்குள்.
காரடையான் நோன்பான இன்று (14ம் தேதி) புதன்கிழமை நடு இரவை ஒட்டி பூஜை செய்வது உத்தமம் அல்ல. இரவு 9.00 மணிக்கு மேல் அம்பாளின் சாந்த சொரூபம் மாறுவதாக தந்திர சாஸ்திரம் கூறுகிறது. எனவே இரவு 7.00 மணி முதல் 8.00 மணிக்குள் பூஜை செய்து சரடு கட்டலாம்.