சபரிமலை: சபரிமலையில் 10 நாள் நடக்கும் பங்குனி உத்திர ஆராட்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவுக்காக நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நடை திறந்தது. தொடர்ந்து விழாவுக்கான சுத்திகிரியைகள் நடந்தன. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் நெய் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. காலை 9:30 மணிக்கு கோயில் முன்புறம் உள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு பூஜைகள் நடத்தினார். கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காலை 10:40 மணிக்கு தங்க கொடிமரத்தில் தந்திரி கொடியேற்றினார்.இன்று முதல் மார்ச் 29- வரை காலை 11:30 மணிக்கு உற்சவபலி நடக்கும். மார்ச் 29 -இரவில் சரங்குத்தியில் பள்ளி வேட்டை, மறுநாள் பம்பையில் ஆராட்டு நடக்கிறது.