பிறருக்கு வாரி வழங்குவதில் நபிகள் நாயகத்திற்கு இணை அவர் தான். அவர் வீட்டுக்கு வரும் எந்தப் பொருளையும் உடனே அள்ளிக் கொடுத்தால் தான் அவருக்கு நிம்மதி உண்டாகும். யாரும் வராவிட்டாலும், அவரே தேடிச்சென்று கொடுப்பார். பார்லிமாவு, பேரீச்சம்பழத்தை கூட, தேவையானதை எடுத்து விட்டு மற்றதை வாரி வழங்கி விடுவார். ஒரு சமயம், பெண்மணி ஒருவர் சால்வையை நாயகத்திற்கு அன்பளிப்பாக தந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர், “இந்த சால்வை அழகாக இருக்கிறது,” என்றார். உடனே நாயகம் அதை அவரிடமே கொடுத்து விட்டார். அங்கிருந்தவர்கள் சால்வையை பெற்றவரிடம், “அந்தச் சால்வை நாயகத்திற்கு எவ்வளவு தேவையாக இருந்தது தெரியுமா? யார் எதை கேட்டாலும், அவர் கொடுத்து விடுவார் என்று தெரிந்தும் ஏன் கேட்டீர்கள்?” என கோபித்தனர். அவரும் அப்போது, “எனக்கும் தெரியும். அவர்கள் கையினால் பெற்ற இந்த சால்வை மதிப்பு மிக்கது. நான் இறந்ததும், என் உடலின் மீது போர்த்தவே பெற்றேன்,” என்று உருக்கமாக கூறினார். அரபு நாட்டில் தோட்டம் உயர்ந்த சொத்தாக கருதப்பட்டது. மகைரிக் என்பவர், நாயகத்திற்கு ஏழு தோட்டத்தை அன்பளிப்பாக கொடுத்தார். அவற்றையும் நாயகம் தர்மச்சொத்தாக மாற்றி, அவற்றின் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழைகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தார். அவரது வள்ளல் தன்மைக்கு உதாரணமாக மற்றொரு சம்பவத்தை சொல்லலாம். நாயகத்தின் தோழர் ஒருவர் திருமணம் செய்து கொண்டார். விருந்தளிப்பதற்கு பணமில்லை. எனவே அவர் நாயகத்திடம் சென்றார். வீட்டில் இருந்த ஒரே ஒரு மாவு மூடையையும் கொடுத்தார். அன்றைய உணவுக்குக் கூட வழி இல்லாத நிலையில் இதைச் செய்தார்.