“ஒரு பெண் இரக்கமின்றி ஒரு பூனையை உணவு கொடுக்காமல் கட்டிப்போட்ட பாவத்தின் காரணமாக அவள் நரகத்தில் தள்ளப்பட்டாள்,” என்கிறார் நாயகம் அவர்கள். தர்மசிந்தனையின் முக்கியத்துவம் பற்றி, அவர்கள் கூறியுள்ள கருத்துக்கள் சிறப்பானதாகும். எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. வாழ்நாளெல்லாம் ஒருவன் தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்து விட்டு, மரணவேளையில் கொடைவள்ளலாக மாறுவதால் என்ன பயன் விளைந்து விடும்? மாறாக, இவர்களைப் பார்த்து இறைவன் கோபம் அடைகின்றான். ஒருவன் பாவியாகவே இருந்தாலும், தர்மம் செய்கின்ற கொடையாளியாக இருந்தால், அவன் அல்லாஹ்வின் தோழனாவான். தொழுகையாளியாக இருந்து கொண்டு தர்மம் செய்யாத கஞ்சனாக இருந்தால் அல்லாஹ்வின் வியாவான். மனித உடலில் 360 எலும்புகளை ஏன் இறைவன் இணைய வைத்தான் தெரியுமா? ஒவ்வொரு இணைப்புக்கும் தினமும் தர்மம் செய்வது மனிதனுக்கு அவசியமான செயலாகும் என்பதற்காக. நாயகம், “கருணை உள்ளவன் தங்கும் இடம் சொர்க்கமாகும். கஞ்சத்தனம் கொண்டவன் தங்குமிடம் நரகமாகும். கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை ஆகியன நம்மை நாசப்படுத்தி விடும். செல்வந்தனிடத்தில் கஞ்சத்தனம் இருப்பதை அல்லாஹ் வெறுக்கின்றான். கஞ்சன் அல்லாஹ்வை விட்டும் தூரமாகி விட்டான்” என்கிறார்கள்.