அம்பாளை உபாசிப்பதே ஜன்மா எடுத்ததன் பெரிய பலன். அன்புமயமான அம்பிகையைத் தியானிப்பதைவிடப் பேரானந்தம் எதுவும் இல்லை. அம்பாளை ஸ்ரீவித்யா என்று உபாஸிக்கிறோம். வித்யா என்றாலே ஞானம்தான். ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்திராதி தேவர்களுக்கும் ஞானமளித்தவள் அவள் என்று கேன உபநிஷதம் ஒரு கதை சொல்கிறது.
கதை இதுதான்....
ஒரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் ஜயம் பெற்றார்கள். ‘பரமாத்மா தந்த சக்தியால்தான், அவரது அனுக்கிரகத்தால்தான் வெற்றி பெற்றோம்’ என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாமே மெச்சிக்கொண்டார்கள். ‘இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்தத் தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதே ’ என்று பார்த்தார் பரமாத்மா. அவர்கள் அப்படிக் கெட்டுப்போகாமல் ரக்ஷிப்பதற்காக, அவர்களுடைய கண்ணுக் கெட்டிய தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதி ஸ்வரூபமாக நின்றார். ‘இது என்ன யக்ஷ வடிவம்’ என்று தேவர்கள் அதிசயித்தார்கள். அது என்ன என்று தெரிந்து கொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கி “நீ யார்?” என்று கேட்பதற்கு முன்னதாகவே, அது இவனைப் பார்த்து “நீ யார்” என்று கேட்டது. “நான் அக்னியாக்கும். நான் எதையும் எரித்துப் பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்” என்றான்.
“ஓஹோ! அப்படியானால், இதை எரி பார்க்கலாம்” என்று சொல்லி, ஒரு துரும்பை எடுத்துப் போட்டது யக்ஷம். அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின் மேல் பிரயோகித்தான். ஆனால் துரும்பு எரியவேயில்லை. அக்னி வெட்கத்துடன் திரும்பிவந்து, மற்றவர்களிடம் நடந்ததைச் சொன்னான். அடுத்து வாயு அனுப்பப் பட்டான். அவனிடம், “இந்தச் சின்னத் துரும்பைத் தூக்கிப் பார்” என்றது யக்ஷம். வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் துரும்பை அசைக்கக்கூட முடியவில்லை. தோல்வியே மிஞ்சியது. இப்போது தேவராஜனுக்கே ஓர் அடக்கம் உண்டாகிவிட்டது. தங்களைவிடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்கிற அறிவு உண்டாயிற்று.
ஆகவே, யக்ஷத்தை விநயத்துடன் நெருங்கியவுடன், மகா காருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அனுக்கிரகம். செய்வதற்காக திவ்விய ஸ்திரீ ரூபத்தில் காட்சியளித்தது. ‘அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதி யான உமாதேவி பிரகாசித்தாள்’ என்கிறது உபநிஷத்து. அத்துடன் சாக்ஷாத் அம்பிகை அவனுக்கு ஆசார்ய ஸ்தானம் வகித்து: ஞானோபதேசம் செய்தாள்: “பிரம்மம்தான் அந்த யக்ஷ வடிவம். இவ்வளவு பிரபஞ்சத் துக்கும், உனக்கும்; சகல தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளியாக இருக்கிறது” என்று உபதேசித்தாள். ‘எல்லாவற்றையும் அறிகிற அறிவான ஸர்வக்ஞத் தத்துவமே பரமேசுவரன். அந்த அறிவோடு இரண்டறச் சேர்ந்திருக்கிற ஞான ஸ்வரூபிணியே அவள்’ என்கிறார் ஆதிசகங்கர பகவத்பாதாள். அப்படியான அம்பாளை ஆராதிக்கப் புது மார்க்கம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. தேவர்களும், பெரிய ரிஷிகளும், மகாத்மாக்களும் அவளை ஆராதித்த இடங்கள் இன்று மகா க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. அங்கே போய் நமஸ்கரித்துத் தியானம் செய்தால் போதும்; அவளுடைய கடாட்சம் கிடைத்துவிடும்.