பகலும் இரவும் சந்திக்கும் மாலை வேளையில் வீடுகளில் விளக்கேற்றுவர். வீட்டுக்கு வந்த மருமகளை ‘விளக்கேற்ற வந்தவள்’ என்று குறிப்பிடுவர். ‘இல்லக விளக்கு’ என்று இறைவனை தேவாரம் குறிப்பிடுகிறது. விளக்கில் தீபலட்சுமி குடியிருக்கிறாள். ஜோதி வடிவில் இறைவன் விளக்கில் எழுந்தருள்கிறார். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு, தன்னை அடைந்த பொருளை பற்றி, அழுக்கை நீக்கி தன்னோடு இணைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது. மேல்நோக்கி உயர்ந்து எரிந்து எழுச்சியை உணர்த்துவது. விளக்கேற்றும்போது பெண்கள், ‘ஜோதி வடிவான இறைவா! இருளில் இருந்து ஒளிக்கும், அறியாமையிருந்து அறிவுக்கும், நிலையாமையில் இருந்து அமரத்துவத்திற்கும் அழைத்துச் செல்வாயாக’ என பிரார்த்திக்க வேண்டும். அகல் விளக்கு புறஇருளைப் போக்குவதுபோல, உள்ளத்தில் ஞானவிளக்கேற்றி அகஇருளை நீக்க வேண்டும் என்பதே விளக்கேற்றுவதன் தத்துவம்.