Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
25. ஆபுத்திரனோடு மணிபல்லவ மடைந்த காதை 27. சமயக்கணக்கர் தந்திறங் கேட்ட காதை
முதல் பக்கம் » மணிமேகலை
26. வஞ்சிமாநகர் புக்க காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
05:01

(மணிமேகலை கண்ணகி கோட்டமடைந்து வஞ்சிமாநகர் புக்க பாட்டு)

அஃதாவது: மணிமேகலை மணிபல்லவத்தினின்றும் வான் வழியாகச் சேரநாட்டுத் தலைநகரமாகிய வஞ்சிமா நகரத்திலே புகுந்த செய்தியும் அங்குக் கண்ணகித் தெய்வத்தையும் கோவலன் திருவுருவத்தையும் வணங்கிய செய்தியும் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண் வஞ்சி நகரத்தில் புகுந்த மணிமேகலை தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும் குறித்துச் சேரன் செங்குட்டுவன் திருக்கோயிலெடுத்து அவர்களுக்கு நிறுவியுள்ள திருவுருவங்களைக் காண்டற்குப் பெரிதும் விரும்பி அத்திருக்கோயிலில் புகுந்து அவர்களை வணங்கி நின்று தாமாகிய கண்ணகியை நோக்கி,

அற்புக்கட னில்லாது நற்றவம் படராது
கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்த
தருளல் வேண்டுமென் றழுது முன்னிற்ப.

அதுகேட்ட அப்பத்தினித் தெய்வம் தன் மகளாகிய மணிமேகலைக்கு அவள் வினவிய வினாக்களுக்குப் பொருத்தமான விடைகூறுதலும், தாய் அன்பு கெழும இக்காதையில் கூறப்பட்டிருக்கின்றன.

இக்காதையின்கண் கண்ணகி கோவலர்களின் பழம்பிறப்பு வரலாறும் சேரன் செங்குட்டுவன் வடதிசையிற் சென்று அங்குள்ள கனகவிசயர் முதல் பல வடவாரிய மன்னரை வென்ற செய்தியும் கனகவியசர் முடிமிசைப் பத்தினித் தெய்வத்திற்குக் கடவுள் உருச்சமைக்கக் கல்லேற்றி வாகை சூடிவருதலும் பிறவுந் நயம்படக் கூறப்படுகின்றன.

அணி இழை அந்தரம் ஆறா எழுந்து
தணியாக் காதல் தாய் கண்ணகியையும்
கொடை கெழு தாதை கோவலன் தன்னையும்
கடவுள் எழுதிய படிமம் காணிய
வேட்கை துரப்ப கோட்டம் புகுந்து
வணங்கி நின்று குணம் பல ஏத்தி
அற்புக் கடன் நில்லாது நல் தவம் படராது
கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது
அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப
ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைப்போள்  26-010

எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது
வெம்மையின் மதுரை வெவ் அழல் படு நாள்
மதுராபதி எனும் மா பெருந் தெய்வம்
இது நீர் முன் செய் வினையின் பயனால்
காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத்
தாய மன்னவர் வசுவும் குமரனும்
சிங்கபுரமும் செழு நீர்க் கபிலையும்
அங்கு ஆள்கின்றோர் அடல் செரு உறு நாள்
மூ இரு காவதம் முன்னுநர் இன்றி
யாவரும் வழங்கா இடத்தில் பொருள் வேட்டுப்  26-020

பல் கலன் கொண்டு பலர் அறியாமல்
எல் வளையாளோடு அரிபுரம் எய்தி
பண்டக் கலம் பகர் சங்கமன் தன்னைக்
கண்டனர் கூறத் தையல் நின் கணவன்
பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும்
தீத் தொழிலாளன் தெற்றெனப் பற்றி
ஒற்றன் இவன் என உரைத்து மன்னற்கு
குற்றம் இலோனைக் கொலைபுரிந்திட்டனன்
ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி
ஏங்கி மெய்பெயர்ப்போள் இறு வரை ஏறி  26-030

இட்ட சாபம் கட்டியது ஆகும்
உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றம் கொண்டு செழு நகர் சிதைத்தேன்
மேற் செய் நல் வினையின் விண்ணவர்ச் சென்றேம்
அவ் வினை இறுதியின் அடு சினப் பாவம்
எவ் வகையானும் எய்துதல் ஒழியாது
உம்பர் இல் வழி இம்பரில் பல் பிறப்பு
யாங்கணும் இரு வினை உய்த்து உமைப் போல
நீங்கு அரும் பிறவிக் கடலிடை நீந்தி  26-040

பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்
மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு
ஒரு பெருந் திலகம் என்று உரவோர் உரைக்கும்
கரவு அரும் பெருமைக் கபிலை அம் பதியின்
அளப்பு அரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து
துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றிப்
போதிமூலம் பொருந்தி வந்தருளி
தீது அறு நால் வகை வாய்மையும் தெரிந்து
பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்
அந் நிலை எல்லாம் அழிவுறு வகையும்  26-050

இற்று என இயம்பி குற்ற வீடு எய்தி
எண் அருஞ் சக்கரவாளம் எங்கணும்
அண்ணல் அறக் கதிர் விரிக்கும்காலை
பைந்தொடி! தந்தையுடனே பகவன்
இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்
துன்பக் கதியில் தோற்றரவு இன்றி
அன்பு உறு மனத்தோடு அவன் அறம் கேட்டு
துறவி உள்ளம் தோன்றித் தொடரும்
பிறவி நீத்த பெற்றியம் ஆகுவம்
அத் திறம் ஆயினும் அநேக காலம்  26-060

எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்
நறை கமழ் கூந்தல் நங்கை! நீயும்
முறைமையின் இந்த மூதூர் அகத்தே
அவ்வவர் சமயத்து அறி பொருள் கேட்டு
மெய் வகை இன்மை நினக்கே விளங்கிய
பின்னர் பெரியோன் பிடக நெறி கடவாய்
இன்னது இவ் இயல்பு எனத் தாய் எடுத்து உரைத்தலும்
இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும்
விளை பொருள் உரையார் வேற்று உருக் கொள்க என
மை அறு சிறப்பின் தெய்வதம் தந்த  26-070

மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவு ஆய்
தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூ மலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நல் தவ முனிவரும் கற்று அடங்கினரும்
நல் நெறி காணிய தொல் நூல் புலவரும்
எங்கணும் விளங்கிய எயில் புற இருக்கையில்
செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன்
பூத்த வஞ்சி பூவா வஞ்சியில்
போர்த் தொழில் தானை குஞ்சியில் புனைய
நில நாடு எல்லை தன் மலை நாடென்ன  26-080

கைம்மலைக் களிற்று இனம் தம்முள் மயங்க
தேரும் மாவும் செறி கழல் மறவரும்
கார் மயங்கு கடலின் கலி கொளக் கடைஇ
கங்கை அம் பேர் யாற்று அடைகரைத் தங்கி
வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து
கனக விசயர் முதல் பல வேந்தர்
அனைவரை வென்று அவர் அம் பொன் முடி மிசை
சிமையம் ஓங்கிய இமைய மால் வரைத்
தெய்வக் கல்லும் தன் திரு முடிமிசைச்
செய் பொன் வாகையும் சேர்த்திய சேரன்
வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க
பொன் கொடிப் பெயர்ப் படூஉம் பொன் நகர்ப் பொலிந்தனள்
திருந்து நல் ஏது முதிர்ந்துளது ஆதலின்
பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு என்  26-094

உரை

வஞ்சி நகரத்தில் மணிமேகலை கண்ணகி கோட்டம் புகுந்து கைதொழுதல்

1-9 : அணியிழை...........நிற்ப

(இதன் பொருள்) அணியிழை அந்தரம் ஆறா எழுந்து-மணிமேகலை வான் வழியாக எழுந்து பறந்து வஞ்சி மாநகரம் நோக்கி விரைபவள்; தணியாக் காதல் தாய் கண்ணகியையும் கொடைகெழு தாதை கோவலன் தன்னையும்-ஒரு பொழுதும் குறைவில்லாத காதலையுடைய தன் தாயாகிய கண்ணகித் தெய்வத்தையும் வள்ளன்மை பொருந்தி தன் தந்தையாகிய கோவலனையும்; கடவுள் எழுதிய படிமம் காணிய வேட்கை துரப்பக் கோட்டம் புகுந்து-தெய்வமாகச் சமைத்த திருவுருவங்களைக் காணுதற்கெழுந்த விருப்பம் செலுத்துதலாலே அவ்வஞ்சி நகரத்தில் அத்தெய்வங்கள் எழுந்தருளி இருக்கின்ற திருக்கோயிலின் முன்னர் இழிந்து கோயிலுள் புகுந்து; வணங்கி நின்று குணம் பல ஏத்தி-பேரன்போடு திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து நின்று அவர்களுடைய பெருந்தகைக் குணங்கள் பலவற்றையும் புகழ்ந்து பாராட்டி அவருள் கண்ணகித் தெய்வத்தை முன்னிலைப்படுத்துக் கூறுபவள்; அற்புக் கடன் நில்லாது நல்தவம் படராது கற்புக் கடன் பூண்டு நும் கடன் முடித்தது அருளல் வேண்டும் என்று அழுது முன் நிற்ப-அன்னையே! நீவிர் கற்புடை மகளிர்க்குரிய அன்பின் வழி நின்று செய்யும் கடமையின் வழியினில்லாமலும் அங்ஙனம் நிற்கலாற்றதார் செல்லும் தவநெறியிற் செல்லாமலும் கற்புடைமையைக் கடமையாகப் பூண்டு அதன் ஆற்றலை வெளிப்படுத்துதலே அப்பொழுது செய்யத் தகுவதென்று அதனையே செய்து முடித்தற்குக் காரணம் காண்இலேன், அதனைக் கூறியருளுதல் வேண்டும் என்று சொல்லி அன்பினால் அழுது கைதொழுது அத்தெய்வத் திருமுன்னர் நிற்ப; என்க.

(விளக்கம்) அணியிழை : மணிமேகலை. அந்தரம்-வானம். ஆறாக எனவும் தணியாத எனவும் வருதல் வேண்டிய பெயரெச்சங்களின் ஈற்றுயிர்மெய் தொக்கன; செய்யும் விகாரம்: தாயாகிய கண்ணகி என்க. தாயாகிய கண்ணகி கற்புடைமையின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதுயர்ந்து விளங்கினாற்போலத் தாதையாகிய கோவலன் வள்ளன்மையால் விளங்கி இருந்தான் ஆதலின் அச்சிறப்புத் தோன்றக் கொடைகெழு தாதை கோவலன் என்றார். கோவலனுடைய கொடைச்சிறப்பினைச் சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதையின் (40) மங்கல மடந்தை என்பது தொடங்கி (61) இம்மை செய்தன யான் அறிநல்வினை என்னுமளவும் நிகழ்கின்ற மாடல மறையோன் கூற்றானும் உணர்க. எனவே இருவரும் தெய்வத் திருவுருவம் கோடற்கியன்ற இரு பெருஞ்சிறப்புகளையும் இப்புலவர் பெருமான் விதந்தோதினமை நுண்ணிதின் உணர்க. படிமம்-உருவம். கோட்டம்-கண்ணகியின் கோயில். சிலப்பதிகாரத்தில் தலைமைப் பற்றிச் சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தமை மட்டுமே கூறப்பட்டது. ஈண்டு இக்காதையினால் கண்ணகி திருவுருவத்தோடு கோவலனுக்கும் திருவுருச் சமைத்திருந்ததும் பெற்றாம் அற்புக்கடனில்லாது என்றது உலகின்கண் கற்புடை மகளிர் கணவனை இழந்த காலத்தே அத்துன்பம் பொறாது உயிர் நீப்பர். இன்றேல் தீயிற் புகுந்து உயிர் நீப்பர். இது தலையாய அன்புடையார் செயல் ஆதலின் நீவிர் தந்தை இறந்துழி இவ்வாறு உயிர் நீத்திலீர் என்பாள் அற்புக்கடனில்லாது என்றாள்.

இனி, இடையாய அன்புடையோர் மறுமையினும் தங்கணவரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம்படுவர். நீயிர் அதுவும் செய்திலீர் என்பாள் நற்றவம் படராது என்றாள். கற்புக்கடன் பூண்டு நீவிர் கற்புடைய மகளிர்க்குரிய கடமையாகிய தகைசான்ற சொற்காத்தல் என்பது பற்றி நுங்கணவனுக்குப் பழியின்மை காட்டுதற்கு அரசவையேறி வழக்குரைத்தீர் அதூஉம் சாலும் அப்பாலும் தீவினை சில செய்தற்குக் காரணம் அறிந்திலேன். அக்காரணத்தை அறிவித்தருளுக என்பாள் கற்புக்கடன் பூண்டு நுங்கடன் முடித்தது அருளல் வேண்டும் என்று அழுது முன்னின்றனள் என்க.

இதன்கண் நுங்கடன் முடித்தது அருளல் வேண்டும் என்புழி நுங்கடன் முடிந்ததன்கண் மிகை செய்தற்குக் காரணம் கூறுதிர் என்பது குறிப்பெச்சப் பொருளாம். இதுபற்றியே மணிமேகலை அழுது வினவினள் என்க. மேலும் கண்ணகியும் இவ்வினாவிற்கே சிறப்பாக விடையிறுத்தலாலும் இக்குறிப்புப் பொருள் வலியுறுதல் உணர்க.

இனி, கற்புடை மகளிர் கணவனை இழந்துழிச் செய்யுங் கடமைகளைக் கூறிக் கண்ணகி நல்லாள் மிகை செய்தமையையும் இந்நூலின் கண் 2ம் காதையில்,

காதல ரிறப்பிற் கனையெரி பொத்தி
ஊதுலைக் குருகி னுயிர்த்தகத் தடங்கா
தின்றுயி ரீவ ரீயா ராயின்
நன்னீர்ப் பொய்கையி னளியெரி புகுவர்
நளியெரி புகாஅ ராயி னன்பரோ
டுடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர் பரப்புநீர் ஞாலத்
தத்திறத் தாளு மல்லளெம் மாயிழை
கணவற் குற்ற கடுந்துயர் பொறாஅள்
மணமலி கூந்தல் சிறுபுறம் புதைப்பக்
கண்ணீ ராடிய கதிரிள வனமுலை
திண்ணிதிற் றிருகித் தீயழற் பொத்திக்
காவலன் பேரூர் கனையெரி மூட்டிய
மாபெரும் பத்தினி மகள்மணி மேகலை

எனவரும் மாதவி கூற்றலும் உணர்க. ஈண்டு மாதவி கண்ணகி மதுரையை எரியூட்டியதனைக் கண்ணகியின் பெருமையாகக் கருதினள். மணிமேகலையோ இக்காதையில் அதனை ஒரு குற்றமாகக் கருதி வினவுகின்றாள். இவ்வாற்றல் மாதவியினும் கண்ணகியினுங் காட்டில் மணிமேகலை சான்றாண்மையில் சிறந்தவள் ஆதல் கருதி இன்புறற்பாலதாம்.

கண்ணகி மணிமேகலைக்குக் கூறும் மறுமொழி

10-18 : (ஒருபெரும்...........உறுநாள்)

(இதன் பொருள்) ஒரு பெரும் பத்தினிக் கடவுள் ஆங்கு உரைம்போள்-இந்நிலவுலகிற்கே தனக்குவமையில்லாத ஒரு பெரும் பத்தினிக் கடவுளாகிய அக்கண்ணகி நல்லாள் அன்புடை அம்மகளுக்கு விடை கூறுபவள் அருமை மகளே கேள்; எம் இறைக்கு உற்ற இடுக்கண் பொறாது வெம்மையின் மதுரை வெவ்அழல் படும் நாள்-எமக்குக் கடவுளாகிய உன் தந்தைக்கு நேர்ந்த கொலைத் துன்பங் கேட்டுப் பொறுக்க ஒண்ணாமையால் எழுந்த சினம் காரணமாக மதுரை மாநகரத்தை யாம் வெவ்விய தீக்கிரையாக்கிய பொழுது; மதுராபதி எனும் மாபெரும் தெய்வமானது எம்முன் தோன்றி நங்காய் நுமக்குற்ற இவ்விடுக்கண் நீங்கள் முற்பிறப்பிலே செய்த தீவினையின் பயன் காண், அத்தீவினை தான் யாதெனின்; காசு இல் பூம்பொழில் கலிங்க நல் நாட்டுத் தாய மன்னவர் வசுவும் குமரனும் சிங்கபுரமும் செழுநீர் கபிலையும் அங்கு ஆள்கின்றோர்-அற்றமில்லாத பூம்பொழில்களையுடைய கலிங்கமென்னும் நல்ல நாட்டின்கண் தம்முள் தாயத்தாராகிய அரசர் வசுவென்றும் குமரன் என்றும் உளராயினர் அவர் முறையே சிங்கபுரமென்னும் நகரத்திலும் செழிப்புடைய நீர்வளமுடைய கபிலபுரமென்னுந் நகரத்திலும் அங்கங்கிருந்து அரசாட்சி செய்கின்றவர்கள் தம்முன் பகைத்து; அடல்செரு உறுநாள்-ஒருவரையொருவர் கொல்லுதற்கியன்ற போர்த்தொழில் நிகழ்த்துகின்ற காலத்திலே; என்க.

விளக்கம் : நிலவுலகிலேயே கண்ணகிக்கு நிகரான கற்புடை மகளிர் இலர் ஆதலின் தனக்குவமை இல்லாத பத்தினி என்பது தோன்ற ஒரு பெரும் பத்தினிக் கடவுள் என்றார். எம்மிறை என்றது எமக்கு இறைவனாகிய உன் தந்தை என்பதுபட நின்றது. இடுக்கண் என்றது கோவலன் கொலையுண்டமையை. வெம்மையின்-சினத்தினால். அழல் படும்நாள்-அழல்படுத்திய நாள். நீர் என்றது கோவலனை உளப்படுத்தித் தெய்வம் கூறியபடியாம். இது நீர் முன் செய்வினை என்பது தொடங்கி (22) ஒழியாது என்னுமளவும் மதுராபதி என்னும் தெய்வம் கூறியதனை ஈண்டுக் கண்ணகித் தெய்வம் கொண்டு கூறுகின்றபடியாம். மதுராபதி-மதுரை நகரத்துக் காவல் தெய்வம். காசு-குற்றம். தாயமன்னவர்-ஒரு குடியிற் பிறந்த அரசர்கள். வசுவென்பான் சிங்கபுரத்தினும் குமரன் கபிலபுரத்தினும் இருந்து ஆள்கின்றோர் என்றவாறு.

இதுவுமது

19-28 : மூவிரு.........இட்டனன்

(இதன் பொருள்) மூ இரு காவதம் முன்னுநர் இன்றி யாவரும் வழங்கா இடத்தில்-ஆறு காவதத்தொலைவு இடைநிலத்தே முற்பட்டுச் செல்வோர் இல்லாமையால் மாந்தர் எவரும் வழங்குதலின்றிக் கிடந்த பாழ்வெளியிலே; பொருள் வேட்டு பல்கலன் கொண்டு பலர் அறியாமல் எல் வளையாளோடு அரிபுரம் எய்தி-பொருளீட்டுதற்குப் பெரிதும் அவாவிப் பல்வேறு அணிகலன்களைக் கபிலபுரத்தில் வாங்கிக் கொண்டு தன் போல் வணிகர் பலரும் அறியாவண்ணம் ஒளிபொருந்திய வளையலணிந்த தன் மனைவியோடே இரவின்கண் பகர் சங்கமன் தன்னை-தான் விற்கக் கொண்டுவந்த பண்டமாகிய அணிகலன்களை விலை கூறி விற்கின்ற சங்கமன் என்னும் வணிகனை; கண்டனர் கூற-கூறுதலாலே; தையல் நின் கணவன் பார்த்திபன் தொழில் செயும் பரதன் என்னும் தீத்தொழிலாளர்-நங்கையே! உன் கணவனாகிய அரசன்பால் தொழில் செய்யும் பரதன் என்னும் பெயரையுடைய தீவினையாளன்; தெற்றென பற்ற மன்னற்கு இவன் ஒற்றன் என உரைத்து-விரைவாகச் சென்று அவ்வணிகனைப் பற்றிக் கொண்டு போய் அரசனுக்குக் காட்டி இவன் வணிகனல்லன் கபிலபுரத்தினின்றும் வந்த ஒற்றனாவான் என்று பொய் சொல்லி; குற்றம் இலோனை கொலை புரிந்திட்டனன்-சிறிதும் குற்றமில்லாத அவ்வணிகனைக் கொலை செய்வித்திட்டான்; என்க.

(விளக்கம்) காவதம்-ஒரு நீட்டலளவை. போர் நிகழும் இடமாதலின் அவ்வழியே யாரும் முற்பட்டுச் செல்வதில்லை ஆதலின் அவ்விடம் மக்கள் வழக்கற்றுக் கிடந்தது என்க. சங்கமன் பொருள் வேட்கை காரணமாக மனைவியோடு அணிகலன்களைக் கபிலபுரத்திற் கொண்டு இருளிலே சிங்கபுரத்திற்குச் சென்று விற்றனன் என்க. அரிபுரம்-சிங்கபுரம். பண்டமாகிய கலம் என்க. பண்டம்-பொன் என்பாரு முளர். பகர்தல்-விற்றல். சங்கமன் : பெயர். தையல்:விளி. பார்த்திபன் தொழில். அரசியலில் வகிக்கும் உத்தியம். பரதன்-கோவலனுடைய முற்பிறப்பின் பெயர். மன்னற்கு-வசு என்னும் அரசனுக்கு. குற்றமிலோன் என்றது சங்கமனை.

இதுவுமது

29-37 : ஆங்கவன்..........ஒழியாது

(இதன் பொருள்) ஆங்கு அவன் மனைவி அழுதனள் அரற்றி ஏங்கி மெய் பெயர்ப்போள்-அப்பொழுது அச்சங்கமனுடைய மனைவியாகிய நீலி என்பவள் அழுது பூசலிட்டுத் துன்பத்தால் ஏங்கி உயிர் விடுபவள்; இறு வரை ஏறி இட்டசாபம் கட்டியது ஆகும் உம்மை வினை வந்து உருத்தல் ஒழியாது எனும்-பெரியதொரு மலையுச்சியில் ஏறி நின்று நுமக்கு இட்ட சாபமானது நும்மைக் கட்டியுளதாம் முற்பிறப்பிற் செய்த அத்தீவினையானது இப்பொழுது நும்பால் வந்து சினந்து தன் பயனை ஊட்டாது ஒழியாது காண் என்கின்ற;  மெய்ம்மை கிளவி விளம்பிய பின்னும் சீற்றம் கொண்டு செழுநகர் சிதைத்தேன்-உண்மையான மொழியை அம்மதுராபதித் தெய்வம் எனக்குக் கூறிய பின்னரும் பெருஞ்சினங் கொண்டு வளமான மதுரைமாநகரத்தைத் தீயினால் சிதைத் தொழிந்தேன்; மேல் செய் நல்வினையின் விண்ணவர்ச் சென்றேம்-அன்புடைய மகளே யானும் உந்தையும் முற்பிறப்பிலே செய்த நல்வினையின் பயனாக வானவர்களாய் விண்ணுலகத்திலே சென்றேம்; அவ்வினை இறுதியின் அடுசினப்பாவம் எவ்வகையானும் எய்துதல் ஒழியாது-அந்நல்வினையின் முடிவில் மதுரையை அழித்தற்குக் காரணமான சினத்தாலுண்டான தீவினை எந்த வகையிலேனும் தன் பயனை ஊட்டுதற் பொருட்டு எம்மை வந்தடையாமல் போகாது; என்க.

(விளக்கம்) ஆங்கவன்-அச்சிங்கபுரத்தில் வாணிகம் செய்த சங்கமன். அழுதனள்: முற்றெச்சம். அரற்றுதல்-பூசலிடுதல். மெய் பெயர்த்தல்-உடம்பினின்றும் உயிரைச் செயற்கை முறையால் போக்குதல். இறுவரை-பெரிய மலை. உம்மை-முற்பிறப்பு. விண்ணவராகிச் சென்றேம் என்றவாறு. அவ்வினை-அந்நல்வினை. அடுசினம்: வினைத்தொகை.

இதுவுமது

38-47 : உம்பர்............அருளி

(இதன் பொருள்) உம்பர் இல் வழி-அந்நல்வினை இறுதியின் வானுலகத்தின் கண் ஏது நிகழ்ச்சி எமக்கில்லையாய பொழுது; இம்பரில் பல்பிறப்பு யாங்கணும் இருவினை உய்த்து உமைப்போல நீங்கரும் பிறவிக் கடல் இடை நீந்தி பிறந்தும் இறந்தும் உழல்வோம் பின்னர்-இவ்வுலகத்தின்கண் பல்வேறு பிறப்புகளினும் நல்வினையும் தீவினையுமாகிய இருவினைகளாலும் செலுத்தப்பட்டு மக்கட் பிறப்பிலுள்ள உங்களைப் போலவே யாங்களும் உய்ந்து கரையேறுதற்கரிய பிறவியாகிய கடலின்கண் நீந்திப் பிறந்தும் இறந்தும் உழலா நிற்பேம் பின்னர்; மறந்தும் மழை மறா மகத நல் நாட்டுக்கு ஒரு பெரும் திலகம் என்று உரவோர் உரைக்கும் கரவு அரும் பெருமை கபிலையம்பதியில்-மறந்தேனும் மழை பெய்யாதொழியாத மகதமென்னும் அழகிய நாட்டிற்கே ஒரு பெரிய திலகம் போல்வது என்று சான்றோர்களால் கூறப்படுகின்ற யாரானும் மறைத்தற்கரிய சிறப்பினையுடைய கபிலை என்கின்ற அழகிய நகரத்தின்கண்; அளப்பரும் பாரமிதை அளவு இன்று நிறைத்து துளக்கம் இல் புத்த ஞாயிறு தோன்றி போதி மூலம் பொருந்தி வந்து அருளி-அளத்தற்கியலாத பாரமிதைகளை அளவில்லாமல் நிறைத்து நடுக்கமில்லாத புத்தபெருமானாகிய கதிரவன் தோன்றி அரசமரத்தின் நிழலின்கண் வீற்றிருந்தருளி; என்க.

(விளக்கம்) உம்பர்-வானுலகம். இவ்வழி-ஏது நிகழ்ச்சி இல்லாத பொழுது என்க. இருவினை-நல்வினையும் தீவினையும். உமைப்போல என்றது உங்களைப் போல மக்களாக என்றவாறு. தாம் இப்பொழுது தெய்வப் பிறப்புடைமை தோன்ற இங்ஙனம் பிரித்தோதினள். உழல்வோம் என்றது கோவலனை உளப்படுத்தியவாறாம். கபிலபுரம் மகதநாட்டின் தலைநகராதலின் அதனை உரவோர் ஒரு பெரும் திலகம் என்று உரைப்பார் என்பது கருத்து. கபிலபுரம் கபிலர் என்னும் முனிவர் தவஞ்செய்தமையால் அப்பெயர் பெற்றது என்பர். இதனைக் கபிலவஸ்து எனவும் வழங்குவர். பாரமிதை என்பதன் பொருள் கரையேறுதற்ரியது என்பதாம். அஃதாவது பிறவிக் கடலினின்றும் கரையேறுதற்குரியது என்றவாறு. இது பத்து வகைப்படும். அவையாவன: தானம், சீலம், பொறை, வீரியம், தியானம், உணர்ச்சி, உபாயம், அருள், வலி, ஞானம் என்னும் இப்பத்துமாம். இவற்றை,

தானஞ்சீல மும்பொறை தக்கதாய வீரியம்
மூனமில் தியானமே யுணர்ச்சியோடு பாயமும்
மானமில் லருளினைவ் வைத்தலேவ லிம்மையுஞ்
ஞானமீரைம் பாரமீதை நாடுங்கா லிவைகளும்   (நீலகேசி-354)

எனவரும் நீலகேசியானு முணர்க. புத்த ஞாயிறு-புத்தனாகிய கதிரவன். போதி மூலம்-அரசமரத்தின் அடி.

இதுவுமது

48-59 : தீதறு..................ஆகுவம்

(இதன் பொருள்) தீது அறு நால்வகை வாய்மையும் தெரிந்து-பிறப்பறுதற்குக் காரணமான நான்கு வகைப்பட்ட வாய்மைகளையும் நன்கு தெரிந்து; பன்னிரு சார்பின் பகுதித் தோற்றமும்-பேதைமை முதலிய பன்னிரண்டு வகைப்பட்ட நிதானங்கள் பிறக்கும் முறைமையையும்; அந்நிலை எல்லாம் அழிவுறும் வகையும் இற்று என இயம்பி-அப்பன்னிரண்டு சார்புகளும் அழிவெய்துகின்ற தன்மைமையும் தனித்தனியே இத்தன்மைத்து எனக் கூறி; குற்ற வீடு எய்தி-காம வெகுளி மயக்கங்களாகிய குற்றங்களினின்றும் விடுதலை பெற்று நின்று; எண்ணரும் சக்கரவாளம் எங்கணும் அண்ணல் அறக்கதிர் விரிக்கும் காலை-எண்ணற்கியலாத உலகமெங்கும் தலைமைத் தன்மையுடைய அப்புத்தபெருமான் அறமாகிய ஒளியைப் பரப்புகின்ற காலத்தே; பைந்தொடி தந்தை உடனே பகவன் இந்திர விகாரம் ஏழும் ஏத்துதலின்-மணிமேகலாய்! யான் உன் தந்தையோடு சென்று பூம்புகார் நகரத்தே அப்புத்த பகவானுடைய இந்திரனால் நியமிக்கப்பட்ட அரங்குகள் ஏழனையும் தொழுது வணங்கிய நல்வினை காரணமாக; துன்பக்கதியில் தோற்றரவு இன்றி அன்பு உறும் மனத்தோடு அவன் அறம் கேட்டு-துன்பமுறுதற்குக் காரணமான நரக விலங்குப் பிறப்புகளில் பிறவாமல் அப்புத்த பெருமானிடத்து அன்புறுகின்ற நெஞ்சத்தோடே அப்புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளுகின்ற நல்லறங்களைக் கேட்டு அது காரணமாக; துறவி உள்ளம் தோன்றி தொடரும் பிறவி நீத்த பெற்றிவள் ஆகுவம்-துறத்தற்கியன்ற நன்னர் நெஞ்சம் தோன்றப் பெற்று அது பற்றுக்கோடாகக் கொண்டு அநாதியாகத் தொடர்ந்து வருகின்ற பிறவியாகிய அலைகளையுடைய பெரிய கடலை நீந்தி உய்ந்து வீடுபேறு பெறும் தன்மையை உடையேம் ஆகுவேம் என்றாள்; என்க.

(விளக்கம்) தீது-பிறப்பு. நால்வகை வாய்மை-துன்பம் முதலியன. பன்னிருசார்பு-பேதைமை முதலிய பன்னிரண்டு நிதானங்கள். அழிவுறுவகை-அந்நிதானங்கள் அழிவுறும் முறைமை. இற்றென என்னும் ஒருமையை வாய்மை முதலியவற்றோடு தனித்தனி ஒட்டுக. குற்றத்தினின்றும் விடுதலை பெறுதலைக் குற்றவீடெய்தி என்றார். குற்றம்-காம, வெகுளி மயக்கங்கள். சக்கரவாளம்-உலகம். அண்ணல்-தலைமைத் தன்மை. இதனை அறத்திற்கேற்றினும் அமையும். புத்த ஞாயிறு என்றமையால் அறத்தைக் கதிர் என்றார். பைந்தொடி : முன்னிலைப் புறமொழி. தந்தை-நின் தந்தை; கோவலன். பகவன்-புத்தப்பெருமான். இந்திரனால் இயற்றப்பட்ட விகாரம் என்க. விகாரம்-அரங்கு. இவை பூம்புகார் நகரத்திலுள்ளவை. இதனை,

பணையைந் தோங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழ லறவோன் றிருமொழி
அந்தர சாரிக ளறைந்தனர் சாற்றும்
இந்திர விகார மேழுடன் போகி

எனவரும் சிலப்பதிகாரத்தானும் (10:11-4) உணர்க.

இதுவுமது

60-67 : அத்திறம்...........உரைத்தலும்

(இதன் பொருள்) அத்திறம் ஆயினும்-அப்படி இருந்தாலும்; அநேக காலம்-நீண்ட காலம் இங்குத் தெய்வமாக விருந்து; எத்திறத்தார்க்கும் இருத்தியும் செய்குவம்-எவ்வகைப்பட்ட மக்களுக்கும் சித்தி செய்து கொண்டிருப்பேம்; நறை கமழ் கூந்தல் நங்கை-மணங்கமழும் கூந்தலையுடைய மகளிருள் சிறந்த; நீயும் முறைமையின் இந்த மூதூர் அகத்தே அவ்வவர் சமயத்து அறிபொருள் கேட்டு-நீதானும் முறைமையாக இந்தப் பழைய வஞ்சி மாநகரத்தின்கண் உள்ள சமயக்கணக்கர் பலரையும் தனித்தனியே கண்டு ஒவ்வொரு சமயக்கணக்கரும் அவரவர் சமய நெறியின் வாயிலாய் மெய்ப்பொருளாக அறிந்த பொருள்களைக் கேட்டறிந்து; மெய்வகை இன்மை நினைக்கே விளங்கிய பின்னர்-அவர் கூறும் பொருளெல்லாம் உண்மையில்லாமை உனக்கே விளக்கமான பின்னர்; பெரியோன் பிடகநெறி கடவாய்-புத்த பெருமான் திருவாய் மலர்ந்தருளிய பிடக நூல் நெறியைக் கடவா தொழுகுவாய் காண்; இவ் இயல்பு இன்னது என தாய் எடுத்து உரைத்தலும்-உனக்கு எதிர்காலத்தே நிகழவிருக்கும் ஏதுநிகழ்ச்சியின் தன்மை இத்தன்மையதாம் என்று தாயாகிய கண்ணகித் தெய்வம் எடுத்துக் கூறாநிற்பவும் என்க.

(விளக்கம்) இருத்தி-சித்தி. அஃதாவது தம்மை வந்து வரம் வேண்டுவோர்க்கு வேண்டுவன வழங்குதல் முதலியன. நறைகமழ் கூந்தல் என்றது நங்கை என்னும் பெயர்ச்சொல்லுக்கு வாளாது இயற்கை அடைமொழியாய் நின்றது. மூதூர் என்றது வஞ்சி நகரத்தை. அறிபொருள்-ஆராய்ந்தறிந்து துணிந்த பொருள். மெய்வகை இன்மை-உண்மையில்லாமை. பெரியோன்:புத்த பெருமான். பிடகநெறி-பிடகம்; புத்தாகமங்களுக்குப் பெயர். அவை வினையபிடகம் சூத்திரபிடகம் அபிதர்மபிடகம் என மூன்று வகைப்படும். பிடகம்-கூடை என்னும் பொருட்டு. எனவே மூன்று வகைப்பட்ட அறமாகிய பொருளை நிரப்பி வைத்துள்ள கூடை போன்றவை என்பது கருத்து. இவ்வியல்பு இன்னது என்றது பிடகநெறி கடவாது நீ ஒழுகும் இவ்வியல்பு எதிர்காலத்தே இன்னதாம் என்றவாறு. தாய் : கண்ணகி. எடுத்துரைத்தலும் என்றது அவள் வினவாத பொருளையும் விதந்தெடுத்துக் கூறாநிற்ப என்றவாறு.

மணிமேகலை வேற்றுருக்கொண்டு வஞ்சி நகரத்துள்ளே புகுதல்

68-79 : இளையள்...........புனைய

(இதன் பொருள்) மையறு சிறப்பின் தெய்வதம்-குற்றமற்ற சிறப்பினையுடைய மணிமேகலா தெய்வம் தன்பால் அருள்கூர்ந்து; இளையள் வளையோள் என்று உனக்கு யாவரும் விளைபொருள் உரையார் வேற்றுரு கொள்க எனத் தந்த-தன்னை நோக்கி நீ வஞ்சிமாநகரத்திற் சென்று சமயக்கணக்கரிடம் அறிபொருள் வினவும் பொழுது அவர் நின்னை இளமையுடையள் பெண்பாலாள் என்று கருதி உனக்கு அவர்கள் தம் சமயநெறியால் விளைந்த துணிபொருளைக் கூறுதற்கு ஒருப்படார் ஆதலின் அவரை வினவும்பொழுது அவர் நன்கு மதிக்கும்படி வேற்றுருக் கொள்வாயாக என்று சொல்லித் தானே வலியக் கொடுத்த; மந்திரம் ஓதி ஓர் மாதவன் வடிவாய்-மந்திரத்தை ஓதி ஒரு மாதவன் வடிவம் மேற்கொண்டவளாய் மணிமேகலை; தேவகுலமும் தெற்றியும் பள்ளியும் பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து-அவ்வஞ்சி நகரத்தே தெய்வத் திருக்கோயில்களிலும், மேடைகளிலும், தவப்பள்ளிகளிலும், பூவாகிய மலர்களையுடைய சோலைகளிடத்தும், குளக்கரைகளிடத்தும் நெருங்கி, நல்தவ முனிவரும் கற்று அடங்கினரும் நல்நெறி காணிய தொல்நூல் புலவரும் எங்கணும் விளங்கிய எயிலபுற இருக்கையில்-நல்ல தவத்தையுடைய துறவோரும் மெய்ந் நூல்களைக் கற்று மனம் பொறி வழிச் செல்லாமல் அடங்கப்பெற்ற சான்றோரும் நல்ல அறநெறியைக் கண்ட பழைய நூல்களைப் பயின்று முதிர்ந்த புலவர்களும் எவ்விடத்தும் இருந்து விளங்குகின்ற மதிலின் புறத்தேயுள்ள இருப்பினையுடைய; செங்குட்டுவன் எனும் செங்கோல் வேந்தன் பூவா வஞ்சியில்-செங்குட்டுவன் என்னும் செங்கோலரசன் தலைநகரமாகிய அவ்வஞ்சி மாநகரத்தில்; போர்த்தொழில் தானை குஞ்சியில் பூத்தி வஞ்சி புனைய-போர்த்தொழிலில் வன்மையுடைய படை மறவர்கள் தமது முடியின்கண் மலர்ந்த வஞ்சிப் பூவாகிய போர்ப் பூவினைச் சூடா நிற்ப; என்க.

(விளக்கம்) இளையள்...........கொள்கென என்று மணிமேகலா தெய்வம் கூறியதனை இந்நூலில் 10ஆம் காதையில் (79-80) காண்க. தெய்வதம்: மணிமேகலா தெய்வம். மந்திரம்-வேற்றுருக் கொள்வதற்குரிய மந்திரம். தேவகுலம்-கோயில். தெற்றி-மேடை. பள்ளி-தவப்பள்ளி. காணிய-கண்ட. எயிற்புற இருக்கை-மதிலின் புறத்தேயுள்ள இருப்பிடம். பூத்த வஞ்சி-பகைவர் நிலத்தைக் கைக்கொள்ள நினைந்து போர் மேல் செல்லும் மறவர்கள் அணிந்து கொள்ளும் அடையாளப்பூ. பூவா வஞ்சி என்பதற்கு; முரணாகப் பூத்த வஞ்சி என்றார். பூவா வஞ்சி என்றது வஞ்சி நகரத்தை; வெளிப்படை. குஞ்சி-குடுமி.

இதுவுமது

80-85 : நிலநாடு.......இழிந்து

(இதன் பொருள்) நிலநாடு எல்லை தன் மலை நாடு என்ன-படை செல்லும் முல்லை நிலத்தையுடைய நாடு முழுதும் தனக்குரிய மலைகள் செறிந்த சேரநாடு போலத் தோன்றும்படி; கை மலைகளிற்று இனம் தம் உள்முயங்க-கையையுடைய மலைகளைப் போன்ற களிற்றி யானைப்படைகள் தம்முள் செறிந்து செல்லா நிற்ப; தேரும் மாவும் கழல்செறி மறவரும் கார் மயங்கு கடலின் கலிகொள கடைஇ-தேர்ப்படையும் குதிரைப்படையும் வீரக்கழல் கட்டிய காலாட்படையும் ஆகிய நால்வகைப் படையையும் முகில் முழக்கத்தோடு கூடிய கடல்போல முழங்கும்படி செலுத்திச் சென்று; கங்கை அம் பேர் யாற்று அடைகரை தங்கி வங்க நாவியின் அதன் வடக்கு இழிந்து-கங்கை என்னும் அழகிய பேரிய மாற்றினது நீரடை கரையின்மேல் தங்கியிருந்து வங்கமாகிய ஓடங்களில் ஏறி அதன் வடகரையில் இறங்கி; என்க.

(விளக்கம்) மலைநாடு என்றமையால் நிலநாடு என்றது முல்லை நிலம் என்பதாயிற்று. யானைகள் மலைகளைப் போலச் செறிந்து போதலால் முல்லை நிலமும் குறிஞ்சி நிலம் போலத் தோன்றிற்று என்றவாறு. கைம்மலை என்றது கையையுடைய மலை போன்ற களிற்றினம் என்றவாறு. மா-குதிரை. கழல்-வீரக்கழல். கார்-முகில். கலி-முழக்கம். கடைஇ-கடவி; செலுத்தி. வங்க நாவி: இருபெயரொட்டுப் பண்புத்தொகை. வங்கமாகிய நாவி என்க. அஃதாவது ஓடம். ஓடத்திலேறி வடகரையில் இழிந்து என்க.

மணிமேகலை வஞ்சி நகரத்துள் புகுந்து தங்குதல்

86-94 : கனக...........படுத்தற்கென்

(இதன் பொருள்) கனக விசயர் முதல் பல வேந்தர் அனைவரை வென்று-கனகனும் விசயனும் முதலிய பல வேந்தர் வந்தெதிர்ந்தோர் எல்லாரையும் போர்க்களத்திலே வென்று; அவர் அம்பொன் முடிமிசை சிமையம் ஓங்கிய இமைய மால்வரை தெய்வக் கல்லும்-கனக விசயராகிய அவ்வாரிய மன்னருடைய அழகிய பொன்முடி சூடுதற்குரிய தலையின்மேல் குவடுகள் உயர்ந்துள்ள இமயமென்னும் பெரிய மலையின்கண் அடித்தெடுத்த பத்தினித் தெய்வவுருவம் செய்தற்கியன்ற கல்லையும்; தன் திரு முடிமிசை பொன்செய் வாகையும் சேர்த்திய சேரன்-தன்னுடைய அழகிய முடியின்மேல் பொன்னால் செய்த வாகைப்பூ மாலையையும் ஏற்றிய சேரன் செங்குட்டுவனாகிய; வில் திறல் வெய்யோன் தன் புகழ் விளங்க-வில்லினால் பெரும் வலிமையை விரும்பும் அம்மன்னவனுடைய புகழ் பெரிதும் விளங்கும்படி; திருந்து நல் ஏது முதிர்ந்து உளது ஆதலின்-தான் மேன்மேலும் திருந்துதற்குக் காரணமான நல்ல பழவினை முதிர்ந்துளது ஆதலின்; பொருந்து நால் வாய்மையும் புலப்படுத்தற்கு-பிறப்பின்கண் பொருந்திய துன்பம் முதலிய நான்கு வாய்மைகளையும் உலகத்திற்கு அறிவுறுத்தும் பொருட்டு; பொற்கொடி பெயராகிய வஞ்சி என்னும் பெயரையுடைய அழகிய நகரத்தின்கண் போலிவுற்றிருந்தனள் என்பதாம்.

(விளக்கம்) கனகவிசயர் என்பவர் செந்தமிழ் மறவரின் ஆற்றல் அறியாமல் தமக்குரிய ஆரிய நாட்டின்கண் ஒரு திருமணப்பந்தரில் இகழ்ந்தனர். இதனை ஒற்றர் வாயிலாய்ச் சேரன் செங்குட்டுவன் அறிந்திருந்தனன். பின்னர்ச் சில நாளிலேயே பத்தினித் தெய்வமாகிய கண்ணகிக்குத் திருவுருச் சமைத்தற்கு இமயத்திலாதல் பொதியிலாதல் கல் கொள்ளுதல் நன்றென அறிஞர் கூறக்கேட்டு இமயத்திலேயே கல்லெடுத்துக் காவா நாவின் கனகவிசயர் முடித்தலையில் ஏற்றிக் கொணருவல் என்று வஞ்சினங்க கூறிச் சேரன் செங்குட்டுவன் வடநாட்டின் மேல் படையெடுத்துப் போய்த் தான் கூறிய வஞ்சினம் தப்பாமல் கனகவிசயர் முடிமேல் இமயக்கல்லை ஏற்றிக் கொணர்ந்தான். இவ்வரலாறு ஈண்டுச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் இவ்வரலாறு வஞ்சிக் காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டிருத்தல் காணலாம். திறம்வெய்யோன்-வலிமையை விரும்புவோன். அவன் புகழ் தாயாகிய கண்ணகியாலே முன்னம் விளக்க மெய்தியது. அப்புகழே மேலும் விளக்கமெய்தும்படி அத்தெய்வத்தின் திருமகளாகிய மணிமேகலையும் அந்நகரத்திலே புகுந்து பொலிவுற்றிருந்தாள் என்க. பொற்கொடி பெயர்ப்படூஉம் பொன்நகர் என்றது வஞ்சி நகரத்தை.

இனி, இக்காதையை அணியிழை, எழுந்து புகுந்து நின்று ஏத்தி, அருளல் வேண்டும் என்று அழுது நிற்ப, பத்தினிக்கடவுள் உரைப்பாள்; அங்ஙனமுரைப்பவளாகிய தாய், இவ்வியல்பு இன்னது என எடுத்துரைத்தலும், மணிமேகலை ஓதி வடிவாய்ப் பொன்னகர்ப் பொலிந்தனனென இயைத்திடுக.

வஞ்சிமாநகர் புக்க காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar