Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2. ஊரலருரைத்த காதை 4. பளிக்கறை புக்க காதை
முதல் பக்கம் » மணிமேகலை
3. மலர்வனம் புக்க காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2011
05:11

மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு

அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது மணிமேகலை புத்த படிமத்திற்கு அணிய வேண்டிய மலர் மாலை தொடுக்கும் செயலீடுபட்டிருந்தாளாக, அவர்கள் சொல்லாட்டத்திடையே மாதவி கூற்றில் தன் அன்புத் தந்தையாகிய கோவலன் உற்ற கொடுந்துயரும் பேசப்பட்டமையால் அச் செய்தியால் அவள் உள்ளத்தே துன்ப நினைவுகள் தோன்ற அவன் உகுத்த கண்ணீர் மலர்மாலையில் வீழ்ந்து அதனை வாலாமையுடையதாக்கியது. அதனால் அற்றே நாள் வழி பாட்டிற்குப் புதிய மலர் பறித்து வந்து தொடுக்க கருதி அம்மலர் பறித்து வருதற்கு மாதவி மணிமேகலையை ஏவினள்; அவட்குத் துணையாகச் செல்வதற்குச் சுதமதி என்னும் அன்புமிக்க பிக்குணி தானே முன்வந்தளள். ஆகவே மணிமேகலையும் சுதமதியும் புதியமலர் கொண்டு வருதற் பொருட்டுத் தீதற்றதாகக் கருதப்படும் உவவனம் என்னும் மலர் வனத்தில் சென்று புகுந்த செய்தியைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண்- மணிமேகலைக்குத் தந்தையின் பாலுள்ள அன்பின் தன்மையும்; அவளுடைய பேரழகின் சிறப்பும் சாத்தனாரால் வியத்தகுமுறையில் கூறப்பட்டுள்ளன.

மேலும் சுதமதி தன் வரலாறு கூறுதலும்; அந்நகரத்திலுள்ள மலர்ப்பொழில்கள் பலவற்றின் பல்வேறு தன்மைகளைக் கூறுதலும் உவவனத்திலுள்ள பளிக்கறை பற்றிய வரலாறு கூறுதலும் பெரிதும் சுவை பயப்பனவாம். சுதமதியும் மணிமேகலையும் மலர் வனம் நோக்கிச் செல்லும் பொழுது வழியிலே நிகழும் ஒரு களிமகன் செயல் நகைச்சுவை தருவதாம் மணிமேகலையைக் கண்டிரங்குவார் மொழிகள் வாயிலாய்ப் புலவர் மணிமேகலையின் பேரழகைப் புலப்படுத்தும் வித்தகப் புலமை பெரிதும் இன்பம் பயப்பதாம். இவ்வாறு இக் காதையில் பல்வேறு சுவைகள் நிரம்பியுள்ளன.


வயந்தமாலைக்கு மாதவி உரைத்த
உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி
மா மலர் நாற்றம் போல் மணிமேகலைக்கு
ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்
தந்தையும் தாயும் தாம் நனி உழந்த
வெந் துயர் இடும்பை செவிஅகம் வெதுப்ப
காதல் நெஞ்சம் கலங்கிக் காரிகை
மாதர் செங் கண் வரி வனப்பு அழித்து
புலம்பு நீர் உருட்டிப் பொதி அவிழ் நறு மலர்
இலங்கு இதழ் மாலையை இட்டு நீராட்ட  03-010

மாதவி மணிமேகலை முகம் நோக்கி
தாமரை தண் மதி சேர்ந்தது போல
காமர் செங் கையின் கண்ணீர் மாற்றி
தூ நீர் மாலை தூத்தகை இழந்தது
நிகர் மலர் நீயே கொணர்வாய் என்றலும்
மது மலர்க் குழலியொடு மா மலர் தொடுக்கும்
சுதமதி கேட்டு துயரொடும் கூறும்
குரவர்க்கு உற்ற கொடுந் துயர் கேட்டு
தணியாத் துன்பம் தலைத்தலை எய்தும்
மணிமேகலை தன் மதி முகம் தன்னுள்  03-020

அணி திகழ் நீலத்து ஆய் மலர் ஒட்டிய
கடை மணி உகு நீர் கண்டனன் ஆயின்
படை இட்டு நடுங்கும் காமன் பாவையை
ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ?
பேடியர் அன்றோ பெற்றியின் நின்றிடின்?
ஆங்கனம் அன்றியும் அணி இழை! கேளாய்
ஈங்கு இந் நகரத்து யான் வரும் காரணம்
பாராவாரப் பல் வளம் பழுநிய
காராளர் சண்பையில் கௌசிகன் என்போன்
இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்  03-030

ஒரு தனி அஞ்சேன் ஒரா நெஞ்சமோடு
ஆராமத்திடை அலர் கொய்வேன் தனை
மாருதவேகன் என்பான் ஓர் விஞ்சையன்
திரு விழை மூதூர் தேவர்கோற்கு எடுத்த
பெரு விழாக் காணும் பெற்றியின் வருவோன்
தாரன் மாலையன் தமனியப் பூணினன்
பாரோர் காணாப் பலர் தொழு படிமையன்
எடுத்தனன் எற் கொண்டு எழுந்தனன் விசும்பில்
படுத்தனன் ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்
ஆங்கு அவன் ஈங்கு எனை அகன்று கண்மாறி  03-040

நீங்கினன் தன் பதி நெட்டிடை ஆயினும்
மணிப் பூங் கொம்பர் மணிமேகலை தான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்
பல் மலர் அடுக்கிய நல் மரப் பந்தர்
இலவந்திகையின் எயில் புறம் போகின்
உலக மன்னவன் உழையோர் ஆங்கு உளர்
விண்ணவர் கோமான் விழாக் கொள் நல் நாள்
மண்ணவர் விழையார் வானவர் அல்லது
பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்
வாடா மா மலர் மாலைகள் தூக்கலின்  03-050

கைபெய் பாசத்துப் பூதம் காக்கும் என்று
உய்யானத்திடை உணர்ந்தோர் செல்லார்
வெங்கதிர் வெம்மையின் விரி சிறை இழந்த
சம்பாதி இருந்த சம்பாதி வனமும்
தவா நீர்க் காவிரிப் பாவை தன் தாதை
கவேரன் ஆங்கு இருந்த கவேர வனமும்
மூப்பு உடை முதுமைய தாக்கு அணங்கு உடைய
யாப்பு உடைத்தாக அறிந்தோர் எய்தார்
அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும்
ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்  03-060

பகவனது ஆணையின் பல் மரம் பூக்கும்
உவவனம் என்பது ஒன்று உண்டு அதன் உள்ளது
விளிப்பு அறைபோகாது மெய் புறத்து இடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதன் உள்ளது
தூ நிற மா மணிச் சுடர் ஒளி விரிந்த
தாமரைப் பீடிகை தான் உண்டு ஆங்கு இடின்
அரும்பு அவிழ்செய்யும் அலர்ந்தன வாடா
சுரும்பு இனம் மூசா தொல் யாண்டு கழியினும்
மறந்தேன் அதன் திறம் மாதவி கேளாய்
கடம் பூண்டு ஓர் தெய்வம் கருத்திடை வைத்தோர்  03-070

ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடி தான் உறும்
நீங்காது யாங்கணும் நினைப்பிலராய் இடின்
ஈங்கு இதன் காரணம் என்னை? என்றியேல்
சிந்தை இன்றியும் செய் வினை உறும் எனும்
வெந் திறல் நோன்பிகள் விழுமம் கொள்ளவும்
செய் வினை, சிந்தை இன்று எனின் யாவதும்
எய்தாது என்போர்க்கு ஏது ஆகவும்
பயம் கெழு மா மலர் இட்டுக்காட்ட
மயன் பண்டு இழைத்த மரபினது அது தான்
அவ் வனம் அல்லது அணி இழை! நின் மகள்  03-080

செவ்வனம் செல்லும் செம்மை தான் இலள்
மணிமேகலையொடு மா மலர் கொய்ய
அணி இழை நல்லாய்! யானும் போவல் என்று
அணிப் பூங் கொம்பர் அவளொடும் கூடி
மணித் தேர் வீதியில் சுதமதி செல்வுழீஇ
சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்
தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்து உளோன்
நாணமும் உடையும் நன்கணம் நீத்து
காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி
உண்ணா நோன்போடு உயவல் யானையின்  03-090

மண்ணா மேனியன் வருவோன் தன்னை
வந்தீர் அடிகள்! நும் மலர் அடி தொழுதேன்
எம் தம் அடிகள்! எம் உரை கேண்மோ
அழுக்கு உடை யாக்கையில் புகுந்த நும் உயிர்
புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது
இம்மையும் மறுமையும் இறுதி இல் இன்பமும்
தன் வயின் தரூஉம் என் தலைமகன் உரைத்தது
கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூந் தேறலில் மெய்த் தவத்தீரே!
உண்டு தௌிந்து இவ் யோகத்து உறு பயன்  03-100

கண்டால் எம்மையும் கையுதிர்க்கொணம் என
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்ம் என இரக்கும் ஓர் களிமகன் பின்னரும்
கணவிர மாலையின் கட்டிய திரள் புயன்
குவி முகிழ் எருக்கின் கோத்த மாலையன்
சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ் சினைத்
ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்
வெண் பலி சாந்தம் மெய்ம் முழுது உரீஇப்
பண்பு இல் கிளவி பலரொடும் உரைத்து ஆங்கு
அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம்  03-110

தொழூஉம் எழூஉம் சுழலலும் சுழலும்
ஓடலும் ஓடும் ஒரு சிறை ஒதுங்கி
நீடலும் நீடும் நிழலொடு மறலும்
மையல் உற்ற மகன் பின் வருந்தி
கையறு துன்பம் கண்டு நிற்குநரும்
சுரியல் தாடி மருள் படு பூங் குழல்
பவளச் செவ் வாய் தவள வாள் நகை
ஒள் அரி நெடுங் கண் வெள்ளி வெண் தோட்டு
கருங் கொடிப் புருவத்து மருங்கு வளை பிறை நுதல்
காந்தள் அம் செங் கை ஏந்து இள வன முலை  03-120

அகன்ற அல்குல் அம் நுண் மருங்குல்
இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து
வாணன் பேர் ஊர் மறுகிடைத் தோன்றி
நீள் நிலம் அளந்தோன் மகன் முன் ஆடிய
பேடிக் கோலத்துப் பேடு காண்குநரும்
வம்ப மாக்கள் கம்பலை மூதூர்
சுடுமண் ஓங்கிய நெடு நிலை மனைதொறும்
மை அறு படிவத்து வானவர் முதலா
எவ் வகை உயிர்களும் உவமம் காட்டி
வெண் சுதை விளக்கத்து வித்தகர் இயற்றிய  03-130

கண் கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்
விழவு ஆற்றுப் படுத்த கழி பெரு வீதியில்
பொன் நாண் கோத்த நன் மணிக் கோவை
ஐயவி அப்பிய நெய் அணி முச்சி
மயிர்ப் புறம் சுற்றிய கயிற்கடை முக் காழ்
பொலம் பிறைச் சென்னி நலம் பெறத் தாழ
செவ் வாய்க் குதலை மெய் பெறா மழலை
சிந்துபு சில் நீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்று உடைப் பூந் துகில்
தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர  03-140

தளர் நடை தாங்காக் கிளர் பூண் புதல்வரை
பொலந் தேர் மீமிசைப் புகர் முக வேழத்து
இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி
ஆல் அமர் செல்வன் மகன் விழாக் கால்கோள்
காண்மினோ என கண்டு நிற்குநரும்
விராடன் பேர் ஊர் விசயன் ஆம் பேடியைக்
காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்
மணிமேகலை தனை வந்து புறம் சுற்றி
அணி அமை தோற்றத்து அருந் தவப் படுத்திய
தாயோ கொடியள் தகவு இலள் ஈங்கு இவள்  03-150

மா மலர் கொய்ய மலர்வனம் தான் புகின்
நல் இள அன்னம் நாணாது ஆங்கு உள
வல்லுநகொல்லோ மடந்தை தன் நடை?
மா மயில் ஆங்கு உள வந்து முன் நிற்பன
சாயல் கற்பனகொலோ தையல் தன்னுடன்?
பைங் கிளி தாம் உள பாவை தன் கிளவிக்கு
எஞ்சலகொல்லோ? இசையுந அல்ல
என்று இவை சொல்லி யாவரும் இனைந்து உக
செந் தளிர்ச் சேவடி நிலம் வடு உறாமல்
குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும்  03-160

திலகமும் வகுளமும் செங் கால் வெட்சியும்
நரந்தமும் நாகமும் பரந்து அலர் புன்னையும்
பிடவமும் தளவமும் முட முள் தாழையும்
குடசமும் வெதிரமும் கொழுங் கால் அசோகமும்
செருந்தியும் வேங்கையும் பெருஞ் சண்பகமும்
எரி மலர் இலவமும் விரி மலர் பரப்பி
வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச்
சித்திரச் செய்கைப் படாம் போர்த்ததுவே
ஒப்பத் தோன்றிய உவவனம் தன்னைத்
தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு
மலர் கொய்யப் புகுந்தனள் மணிமேகலை என்  03-171

உரை

மணிமேகலை தந்தையையும் தாயையும் நினைத்து வருந்துதல்

1-6: வயந்த.......வெதுப்ப

(இதன் பொருள்) மாமலர் நாற்றம் போல் பெரிய நாளரும்பு மலர்ந்துழி அதன்கண் மணம் தோன்றுமாறு போலே; மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளது ஆதலின்-மணிமேகலை முற்பிறப்பிலே செய்த வினைத்தொகுதி அவளுள்ளே முதிர்ந்து தன் பயனை ஊட்டுதற்கியன்ற செவ்வி பெற்றிருத்தலாலே; வயந்தமாலைக்கு மாதவி உரைத்த-சித்திராபதியின் ஏவலாலே தனக்கு ஊரலர் உரைத்துக் தொருட்டவந்த வயந்த மாலைக்கு மறுமொழியாக மாதவி கூறிய; உயங்கு நோய் வருத்தத்து உரைமுன் தோன்றி-வாடுதற்குக் காரணமான நோயாகிய துன்பக்கிளவியை நிலைக்களனாகக் கொண்டு பிறந்து; தந்தையும் தாயும் தாம் நனி உழத்த வெம்துயர் இடும்பை செவியகம் வெதுப்ப-தன் தந்தையும் தாயுமாகிய கோவலனும் கண்ணகியும் பெரிதும் நுகர்ந்த வெவ்விய துன்பத்தோடு கூடிய தீச் சொல்லாகிய நெருப்பு அவளுடைய செவியினுட் புகுந்து நெஞ்சத்தைச் சுடா நிற்றலாலே, என்க.

(விளக்கம்) வயந்தமாலைக்கு மாதவியுரைத்த உரை. உயங்குநோய் வருத்தத்து உரை எனத் தனித்தனி இயையும். உயங்குதல்-வாடுதல். நோயாகிய வருத்தத்தைத் தன் பொருளாகக் கொண்ட உரையை ஒற்றுமை கருதி வருத்தத்து உரை என்றார். வருத்தத்தின் மிகுதிதோன்ற உயங்கு நோய்வருத்தம் என ஒரு பொருட்பலசொல் அடுக்கி அடை புணர்த்தார்.

பருவமெய்தி மலரும் மலரின்கண் நாற்றம் தோன்றுதல் முதிர்ந்து செவ்விபெற்ற வினையினின்றும் அதன் பயனாகிய நுகர்ச்சி தோன்றுதற்கு உவமை. ஊழ்வினை ஏது நிகழ்ச்சி எதிர்தல் என்பது பௌத்த நூல் வழக்கு.

மாதவி முன்னைக் காதையில் உரைத்த உயங்கு நோய் வருத்தத்து உரை என்றது அவள் காதலன் உற்ற கடுந்துயர் கேட்டுப்போதல் செய்யா வுயிரொடு நின்றேன் என்றும் கணவற்குற்ற கடுந்துயர் பொறாஅள்....கூந்தல் புதைப்பத்....திருகி எரியூட்டிய பத்தினி என்றும் கூறிய உரைகளை என்க. இவை செவியுட்புகுந்து அவள் தந்தைதாயார் பட்ட துயரமெல்லாம் நினைப்பித்து நெஞ்சத்தை வெதுப்பின் என்றவாறு.

மணிமேகலை கண்ணீர் உகுத்தலும் மாதவி செயலும்

(இதன் பொருள்) காரிகை காதல் நெஞ்சம் கலங்கி-அம் மணிமேகலை அவர்பாற் கொண்டுள்ள அன்பு காரணமாகப் பெரிதும் நெஞ்சம் கலங்கி உருகுதலாலே; மாதர் செங்கண்-அவளுடைய காதல் கெழுமிய சிவந்த கண்கள்; புலம்பு நீர்-துன்பக் கண்ணீரைப் பெருக்கி; வரிவனப்பு அழித்து-தம்பாற் படர்ந்த செவ்வரிகளை மறைத்து; உருட்டி அவள் தொடுக்கின்ற கட்டவிழ்ந்து மலராநின்ற நறிய மலரினது விளக்குகின்ற இதழ்களையுடைய மாலையின் மேல் வீழ்த்தி அதனை நினைத்து வாலாமைப் படுத்தி விட்டமையாலே; மாதவி மணிமேகலை முகம் நோக்கி-இது கண்ட மாதவி மணிமேகலையின் முகத்தைப் பரிவுடன் நோக்கி; தாமரை தண்மதி சேர்ந்தது போலக் காமர் செங்கையின் கண்ணீர் மாற்றி-தாமரை மலர் ஒன்று குளிர்ந்த திங்கள் மண்டிலத்தைத் தீண்டியது போன்று தன் அழகிய கையை அவள் முகத்திலே சேர்த்துச் சிவந்த அக்கையினாலே அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டுக் கூறுபவள்; தூநீர் மாலை தூத்தகை இழந்தது-அன்புடையோய் தூய நீர்மையையுடைய இம் மலர் மாலை நின் கண்ணீர் பட்டுத் தனது தூய தன்மையை இழந்துவிட்டது; நீயே நிகர் மலர் கொணர்வாய்-இம் மாலை நம்மிறை வழிபாட்டிற்காகாதாகலின் இப்பொழுது நீயே மலர் வனத்திற் சென்று புதிய மலர்களைக் கொய்து கொணர்வாயாக என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) மணிமேகலைக்கு ஏதுநிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் உரை வாயிலாய் இடும்பை தோன்றி அவளது செவியகம் வெதுப்ப அதனால் அக் காரிகை நெஞ்சு கலங்க அவள் செங்கண் புலம்பு நீர் பெருக்கி வரிவனப்பு அழித்து உருட்டி மாலையில் இட்டு நீராட்ட அது கண்ட மாதவி மணிமேகலை முகம் நோக்கித் தன் செங்கையின் கண்ணீர் மாற்றிக் கூறுபவள் மாலை இழந்தது நீயே நிகர் மலர் கொணர்வாய் என்று கூறலும் என்று இயைத்திடுக. இப்பகுதி பெரிதும் அவலச் சுவை பயத்தலுணர்க. காரிகை: மணிமேகலை. மாந்தர்-அழகு; காதல் எனினுமாம். வரி-செவ்வரி. அதன் வனப்பை அழித்து என்றது கண்ணீர் பெருகி அவற்றை மறைத்தலை. புலம்பு நீர்-துன்பக்கண்ணீர். வனப்பு-அழகு. இட்டு நீராட்டல் என்பதன் ஒரு சொன்னீர்மைத்தாகக் கோடலுமாம். தாமரை மாதவி கைக்கும் மதி, மணிமேகலை முகத்திற்கும் உவமைகள். தூநீர்-தூயதன்மை. தூத்தகை என்பதுமது, நிகர்மலர், புதுமலர். ஒளிமலர் என்பாருமுளர்.

சுதமதியின் பரிவுரைகள்

16-25: மதுமலர்..........நின்றிடின்

(இதன் பொருள்) மதுமலர்க் குழலியொடு மாமலர் தொடுக்கும் சுதமதி கேட்டுத் துயரொடுங் கூறும்-தேன் பொருந்திய மலரணிதற்கியன்ற கூந்தலையுடைய மணிமேகலையோடே சிறந்த மலர்மாலை தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி யென்னும் பெயரையுடைய மற்றொரு பிக்குணி மாதவி கூறிய மொழியைக் கேட்டவளவிலே மணிமேகலை திறத்திலே துன்பமுடைய நெஞ்சத்தோடே மாதவியை நோக்கிக் கூறவாள்; குரவர்க்கும் ஊழ்வினை உருத்து வந்தூட்டுதலானே வந்தெய்திய கொடிய துன்பத்தைச் செவியேற்று அவரை நினைந்து ஆறாக பெருந்துயரம் எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் எய்தா நின்ற; மணிமேகலையின் தன் மதிமுகந் தன்னுள் அணிதிகழ் நீலத்து ஆய் மலர் ஓட்டிய கடை மணி உகுநீர் கண்டனன் ஆயின் - இம் மணிமேகலையின் நிறை மதி போன்ற திருமுகத்தின்கண் ணமைந்த அழகு விளங்குகின்ற நீலத்தின் ஆராய்தற்கியன்ற மலரின் அழகைப் புறமிடச் செய்த கண்ணின் மணியின் கடைப்பகுதியினின்றும் துளித்த துன்பக் கண்ணீரைக் கண்டுளனாயின்; காமன் படை இட்டு நடுங்கும் காமவேள் தன் கருப்பு வில்லும் அருப்புக் கணையுமாகிய படைக் கலன்களை நிலத்திலே எறிந்து விட்டு ஆற்றொணாத் துயரத்தாலே நடுங்குவான் அல்லனோ; பாவையை - அத்தகைய பேரழகு படைத்த பாவை போன்ற இவள் மலர் கொய்யப் போகும் வழியிலே; ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ-ஆண்மக்கள் கண்டக்கால் அக் காட்சியைவிட்டு அப்பாற் போதலும் உளதாகுமோ; பெற்றியின் நின்றிடின் பேடியர் அன்றோ-கண்ட பின் மயங்காமல் தமக்கு இயல்பான அறிவோடு நின்றால் அவர் பேடியர் ஆதல் ஒருதலையன்றோ என்றாள் என்க.

(விளக்கம்) சுதமதி வரலாற்றினை அடுத்த அவளை கூறக்கேட்போம். இவள் மணிமேகலைபால் தாய்மையன்பு கொண்டிருப்பவள் ஆதலின், அவளை மலர்க்கொய்யப் போம்படி மாதவி பணித்தமையால் அங்கனம் போனால் அவட்குத் தீமையுண்டாகும் என்னுங் கருத்தால் துயருற்றுக் கூறுகின்றாள் என்க. அவளுடைய பேரழகே அவட்குத் தீமைபயக்கும் என்பான் அவ்வழகினை இவ்வாறு விதந்தோதுகின்றாள். காமனுக்கு மகளிரே சேனையாகலின் அச்சேனைக்கு இவள் தலைவியாதலின் அவள் துன்பக்கண்ணீரைக்கண்டுகாமன் பொறானாய்ப் படையிட்டு நடுங்குவான் என்றவாறு. இவளைக் கண்ட ஆடவர் எத்தகையோராயினும் மயங்காதிரார் என்பதனை, பெற்றியின் நின்றிடின் அவர் பேடியராகத் தாமிருப்பர் என்றாள். இவ்வாற்றால் இச் சுதமதி மணிமேகலையின் பேரழகை நுண்ணிதல் கூறக்காட்டுதல் பெரிதும் இலக்கிய இன்பம் நல்குதல் உணர்க.

மகளிர் யாண்டும் தனியே செல்லுதல் தகாது என்பதற்குச்
சுதமதி தன்னையே எடுத்துக் காட்டாகக் காட்டல்

26-35: ஆங்ஙனம்.........வருவோன்

(இதன் பொருள்) ஆங்ஙனம் அன்றியும்-அவ்வாற்றானன்றியும் (இவள் தனித்தலர் கொய்யப் போகாமைக்குப் பிறிது காரணமும் உளது அது என் வரலாறு கூறவே நீ அறிந்து கொள்வாய் ஆகலின்) அணியிழை ஈங்கு யான் இந்நகரத்துவரும் காரணம் கேளாய்-அணியிழாய் இங்கிருக்கும் யான் இப் பூம்புகார் நகரத்திற்கு வர நேர்ந்த காரணத்தைக் கூறுவல் கேட்பாயாக பாராவாரம் பல்வளம் பழுகிய காராளர் சண்பையின் கௌசிகன் என்போன்-பல்வேறு கடல்படுபொருள் வளமும் நிரம்பிய காராளர் என்னும் வகுப்பினர் மிக்குவாழ்கின்ற சண்பை என்னும் நகரத்தே குடியிருப்புடைய கௌசிகன் என்னும் பெயரையுடைய; இருபிறப்பாளன் ஒரு மகள் உள்ளேன்-பார்ப்பனனுக்கு ஒரே மகளாயிருந்த யான்; ஒரே நெஞ்சமொடு ஒருதனி அஞ்சேன் ஆராமத்திடை அலர் கொய்வேன்றனை-யாதொன்றனையும் ஆராய்ந்தறியாத என் பேதை நெஞ்சத்தால் மிகவும் தனிமையுடையேனாய்ச் சிறிதும் அஞ்சாமல் ஒரு மலர்ப்பொழிலும் புகுந்து மலர் செய்கின்ற என்னை; மாருத வேகன் என்பான் ஓர் விஞ்சையன்-மாருத வேகன் என்னும் பெயரையுடையான் ஒரு விச்சாதரன்; திருவிழை மூதூர் தேவர் கோற்கு எடுத்த பெருவிழா காணும் பெற்றயின் வருவோன்-திருமகள் பெரிதும் விரும்புமியல்புடைய இப் பழைய நகரத்தின்கண்  அவ்வாட்டைக்கு நிகழ்த்தும் பெரிய இந்திரவிழாவைக் கண்டு களிக்கும் கருத்தொடு விசும்பின் வழியே வருபவன்; தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணப் பலர் தொழும் படிமையன் உடையனாய் பொற்கலன்கள் பூண்டவனாய் இந்நிலவுலகத்தார் கண்டிராததும் கண்டோர் பலரும் கை தொழில் தகுந்ததுமாகிய உருவச் சிறப்புமுடையான் காண் என் எடுத்தனன் கொண்டு எழுந்தனன் கொண்டு வானத்திலே பறந்து போயினன்; ஆங்கு அவன் பான்மையேன் ஆயினேன்-அவ் வானத்தின்கண் யானும் அவன் கருதியாங்கியைந் தொழுகலானேன்காண் ஆங்கு அவன் ஈங்கு எனை கண்மாறி அகன்று- ஆங்கு அவ்வாறு செய்த அவ்விச்சாதரன் இந் நகரத்திலே எனைக் கைவிட்டுச் சிறிதும் கண்ணோட்டமின்றிப் பிரிந்து; தன்பதி நெட்டிடை ஆயினும் நீங்கினன்-தன்னூர் மிகவும் நீண்ட வழியுடையதாக இருப்பினும் என்னைச் சிறிதும் நினையாதவனாய்த் தான் மட்டுமே போயொழிந்தான் நாண் என்றாள் என்க.

(விளக்கம்) ஆங்ஙன மன்றியும்-என்றது அவ்வாறன்றியும் வேறு காரணங்களாலும் அவட்குத் தீமை வரலாம் என்பதுபட நின்றது. இது பாட்டிடைவைத்த குறிப்பாற் போந்த பொருள். இனி ஆங்ஙனமன்றியும் என்பதனுடன் 42 ஆம் அடிக்கட்கிடந்த மணிமேகலைதான் தனித்தலர் கொய்யும் தகைமையள் அல்லள் அதற்கு எடுத்துக்காட்டாக (26) அணியியை கேள் என இயைத்துப் பொருள் கூறினும் அமையும். என்னை அகன்று பொருள் கிடப்பினும் அணுகிய நிலையினும் இயன்று பொருள் முடியத் தந்தனர் உணர்த்தல் மாட்டு என மொழிப் பாட்டியல் வழக்கின் என்பது ஓத்தாகலின் என்க(தொல்-செய்யு-210). பாரா வாரம்- கடல். காராளர்-ஒரு சாதியினர்: பூவைசியர்; அவராவார் வணிகருள் உழுதுண்போர். இவர் உழுதுண்ணலே அன்றிக் கலத்தினுஞ் சென்று பொருளீட்டுவோராதலின், பாராவாரம் பல்வளம் பழுநிய காராளர் சண்பை என்றார். சண்பை சீகாழிநகர்போலும். அஞ்சுல தஞ்சல் அறிவார் தொழில் என்பதை ஓரா நெஞ்சமொடு என்றவாறு. ஆராமம் மலர்ப்பொழில். பூம்புகார் என்பது தோன்றித் திருவிழைமூதூர் என்றாள். பெருவிழா என்றது-இந்திரவிழாவை. இந்திரவிழாவிற்கு விச்சாதரரும் வருகுவர் என்பதை, சிலப்பதிகாரத்தில் கடலாடு காதையானும், (1-34 வெள்ளி காண்போன்) இந்நூலிற் காயசண்டிகை வரலாற்றானும் உணர்க. விஞ்சையன்-விச்சாதரன். படிமையன்-உருவமுடைய மாறி, கண்ணோட்டமின்றி-இதற்கு வேறு கூறுவாருமுளர். அதற்கு எடுத்துக்காட்டும் காட்டுவர். ஆயினும் ஈண்டைக்கு அவ்வுரை பொருந்தாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க நெட்டிடையாயினும் நீங்கினன் என மாறுக.

இதுவுமது

42-43: பணி............அல்லள்

(இதன் பொருள்) மணிப்பூங்கொம்பர் மணிமேகலை தான்-இக் காரணங்களாலே அழகிய மலர்க் கொடி போன்று பருவம் கெழுமிய நம் மணிமேகலை நல்லாள்; தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்-நீ ஏவியாங்குத் தமியளாய்ச் சென்று மலர்வனம் புக்கு கொய்து வருந்தன்மையுடையள் அல்லள் காண் என்றாள் என்க.

(விளக்கம்) இக்காரணங்களாலே தனித்து அலர் கொய்யப் போதல் கூடாது என்பது கருத்து.

மலர்ப் பொழில்களும் அவற்றின் சிறப்பியல்பும்

44-58: பன்மலர்........எய்தார்

(இதன் பொருள்) பன்மலர் அடுக்கிய நல்மரப் பந்தர் இலவந்தி கையின் எயில்புறம் போகின் உலக மன்னவன் உழையோர் ஆங்குளர்-பன்னிறமுடைய மலர்க் கொடிகளை நிரல்பட நட்டுப் படரவிட்ட நல்ல மரத்தாலியன்ற பூம்பந்தர்களையுடைய இலவந்திகையினது மதிலின் புறத்தே சென்றக்கால் உலகாள் மன்னனுடைய பணி மாக்கள் ஆங்கிருப்பவர் ஆதலின் அந்நெறிச் செலல் தகாதுகாண்; விண்ணவர் கோமான் விழாக்கொள் நல் நாள் வானவர் அல்லது மன்னவர் விழையார்-இந்திரனுக்கு விழா நிகழ்த்தும் இருபத்தெட்டு நல்ல நாளினும் இந்திரன் சுற்றத் தாராகிய வானுலகத்துத்தேவர் வந்து தங்குதலின்றி நிலவுலகத்து மாந்தர் உட்புக விரும்பார் என்பதும்; பாடு வண்டு இமிரா பல் மரம் யாவையும்-இசை பாடும் வண்டுகள் தாமும் முரன்று மூசுதலில்லாத பல்வேறு வகைப்பட்ட மரங்களிலெல்லாம்; வாடா மாமலர் மாலைகள் தூக்கலின்-வானவர் நாட்டுக் கற்பக மரங்களினின்றும் அத் தேவர்கள் கொணர்ந்த வாடாத சிறப்புடைய மலர்களாற் றொடுக்கப்பட்ட மாலைகளைத் தூக்கிவிட்டிருத்தலானே; கைபெய் பாசத்துப் பூதம் காக்குமென்று-அங்கெல்லாம் கையிடத்தே கயிற்றையுடைய பூதம் காவல் செய்யும் என்று; உணர்த்தோர் உய்யானத்திடைச் செல்லார்-அறிந்த மாந்தர் அரசன் உரிமையோடும் ஆடுதற்கியன்ற உய்யானத்தின் வழியே செல்வாரல்லர், இவையிரண்டு பொழிலும் இங்கனமாக; வெங்கதிர் வெம்மையின் விரிசிறை இழந்த-கதிரவனை அணுகப் பறந்தலானே அவன் வெம்மையாலே விரிந்த சிறகை இழந்து; சம்பாதியிருந்த சம்பாதி வனமும்-சம்பாதி யென்னுங் கழுகரசன் தவமிருந்தமையாலே சம்பாதி வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; ஆங்கு-அவ்வாறே; தவா நீர்க் காவிரிப்பாவை தன் தாதை கவேரன் இருந்த கவோ வனமும்-கெடாத நீரையுடைய காவிரியாகிய நீர்த்தெய்வத்தின் தந்தையாகிய கவேரன் என்னும் மன்னன் தவமிருந்தமையாலே கவேர வனம் என்று கூறப்படுகின்ற மலர்வனமும்; மூப்படை முதுமைய-ஏனைய மலர் வனங்களினுங் காட்டில் காலத்தால் மூப்புடைய பழைமையுடையனவாதலால்; தாக்கு அணங்கு உடைய -அவை மக்களைத் தீண்டி வருத்தும் தெய்வங்களைத் தம்பாலுடையன காண்; யாப்புடைத்தாக அறிந்தோர் எய்தார்-இவ்வுலகுரையை உறுதியுடையதாக வுணர்ந்தவர் யாரும் அவ்விரண்டினூடும் புகுதார் காண்; என்றாள் என்க.

(விளக்கம்) பல்வேறு மணமும் நிறமுமுடைய மலர்கொடிகளை நிரல் படவைத்துப் படரவிட்ட மரப்பந்தர் என்க. இவற்றைப் பூம்பந்தர் என்னாது மரநிழல் என்பாருமுளர். நன்மரம் என்றது பந்தரிட்ட மரத்தை. இலவந்திகை-இயந்திரவாவி; அஃதாவது நீரை வேண்டும் பொழுது நிரப்பவும் ஏனையபொழுது வடித்துவிடவும் பொறியமைத்தவாவி. இஃது அரசனும் உரிமை மகளிரும் நாடோறும் நீராடற்குரியதாம். இதனியல்பை இலவந்திகை-நீராவியைச் சூழந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையும் ஆடும் காவற் சோலை எனவரும் அடியாருக்கு நல்லார் உரையானும் (சிலப்-10:30-31) நிறைகுறின் நிறைத்துப் போக்குறின் போக்கும் பொறிப்படை யமைந்த பொங்கில வந்தகை எனவரும் பெருங்கதையானும்(1-40:311-2) உணர்க. உலக மன்னவன் என்றது-சோழமன்னனை. உழையோர்- பணிமாக்கள். உழையோரிருத்தலதன் அங்குப் போதல் கூடாது என்பது குறிப்பு.

விழாக்கோள் ஈரேழ் நாளும் விண்ணகர் வறிதே கிடப்ப அமரர் எல்லாம் ஈங்கு வந்து உய்யானத்திடை இருத்தலின் அங்கு அவர் கொணர்ந்த கற்பகமலர்மாலை மரந்தொறும் தூக்கப்பட்டிருக்கும். மேலும் பூதங்காக்கும் ஆதலால் உணர்ந்தோர் செல்லார் என்றவாறு. இனிச் சம்பாதிவனமும் கவேரவனமும் முதுமைய அணங்குடைய ஆதலின் அவற்றினுள்ளும் போதல் கூடாது. யாப்புடைத்தாக அறிந்தோர் என்றது, (அணங்குடைய என்னும் இவ்வுலகுரையை) உறுதியுடையதாக அறிந்தோர் என்றவாறு.

சம்பாதி-சடாயுவின் உடன்பிறந்தவன். இவன் வானுலகம் புகப் பறந்து போன பொழுது கதிரவன் சினத்திற்கு ஆளாகிச் சிறகு தீயப் பெற்றான் இதனை,

ஆயுயர் உம்பா நாடு காண்டும் என்றறிவு தள்ளி
மீயுயர் விசும்பி னூடு மேற்குறச் செல்லும் வேலை
காய்கதிர்க் கடவுட்டேரைக் கண்ணுற்றும் கண்ணு றாமுன்
தீயையுந் தீக்குந் தெய்வச் செங்கதிர்ச் செல்வன் சீறி
.........................................
வெந்துமெய் யிறகு தீந்து விழுந்தனென் விளகி லாதேன்
                                                              (கம்பரா - சம்பா-54-5)

எனவரும் அச் சம்பாதி கூற்றானே யுணர்க.

உவவனமும் பளிக்கறையும்

59-68: அருளும்.........கழியினும்

(இதன் பொருள்) அருளும் அன்பும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெரும் பூட்கையும் ஒழியா நோன்பின்-இனி இவையிற்றைத்தவிர ஆருயிர்களின் பால் பேரருளும் அன்பும் அவ்வாருயிரைப் பாதுகாக்க வேண்டும் என்னும் ஒப்பற்ற பெரிய கோட்பாடும் ஒரு பொழுதும் தன்னைவிட்டு நீங்காத தவத்தினை யுடைய; பகவானது ஆணையின் பல் மரம் பூக்கும் உவவனம் என்பது ஒன்றுண்டு-புத்த பெருமானுடைய கட்டளையினாலே பருவமல்லாத பொழுதும் மலருகின்ற சிறப்பினையுடைய உவவனம் என்னும் ஒரு மலர்ப் பொழிலும் உளதுகாண்; அதன் உள்ளது-அவ் வுவ வனத்தின் உள்ளிடத்ததாய்; விளிம்பு அறை போகாது மெய்புறத்திரூஉம் பளிக்கு அறை மண்டபம் உண்டு-தன்னுட் புகுந்தவர் எழுப்பும் ஒலி வெளிப்படாது உருவத்தை மட்டும் புறத்தே காட்டும் பளிங்கினாலியன்ற அறையினையுடைய மண்டபம் ஒன்று உளது காண்; அதன் உள்ளது-அம் மண்டபத்தின் உள்ளிடத்ததாய்; தூகிறமாமணிச் சுடர் ஒளி விரிந்த தாமரைப் பீடிகைதான் உண்டு-தூயநிறமுடைய மாணிக்க மணியின் சுடர் போலச் சுடர்விடுகின்ற ஒளியோடு மலர்ந்த தாமரை மலர் வடிவிற்றாகிய மேடையென்றும் உளதுகாண்; ஆங்கு இடின்-அம் மேடையின் மேலிட்டால்; அரும்பு அவிழ் செய்யும்-அரும்புகள் நன்கு மலர்ந்தலைச் செய்யும்; தொல் மாண்டு கழியினும் மலர்ந்தன வாடா சுரும்பினம் மூசா-தொன்று தொட்டுத் தோன்றி மறையுமியல்புடைய யாண்டுகள் பல கழித்தாலும் மலர்ந்த அம் மலர்கள் வாட மாட்டா அவையிற்றில் வண்டினமும் மொய்க்கமாட்டா காண் என்றாள் என்க.

(விளக்கம்) அருள்-எல்லாவுயிரிடத்தும் பரந்து பட்டுச் செல்லும் நெஞ்சநெகிழ்ச்சி. அன்பு-தொடர்புடையார்மாட்டுச் செல்லும் நெஞ்ச நெகிழ்ச்சி. பகவனுக்கு அணுக்கமில்லாதனவும் அணுக்கமுடையனவுமாக உயிர்கள் இருவகைப்படுதலின் இரண்டும் கூறினள். பூட்கை கொள்கை. நோன்பு-தவம். பகவன்-புத்தர். ஆனையின் என்றமையால் மலரும் பருவமில்லாத போதும் மலரம் என்றாளாயிற்று. உள்ளது-உள்ளிடத்ததாய்; மண்டபம் ஒன்றுண்டு. அதனகத்ததாய்ப் பீடிகை ஒன்றும் உளது என்க. விளிப்பாகிய அறை: இருபெயரொட்டு. தூநிறம்-தூய நிறம். ஆங்கு-அப் பீடிகையில். அரும்பு மலரும் மலர்ந்தவை வாடா மூசப்படா. தொல்யாண்டு பொருட்கேற்ற அடை. தொன்று தொட்டுத் தோன்றி மறையும் யாண்டு என்க.

இதுவுமது

69-79: மறந்தேன்...........அதுதான்

(இதன் பொருள்) மாதவி அதன் திறம் மறந்தேன்- மாதவி நங்காய் அப் பீடிகையின் தன்மை யொன்றனைக் கூற மறந் தொழிந்தேன்; கேளாய்-அதனையும் கூறுவேன் கேள்; ஓர் தெய்வம் கருத்திடை வைத்துக் கடம் பூண்டோர் ஆங்கு அவர் அடிக்கு இடின் அவர் அடிதான் உறும்-யாதானும் ஒரு தெய்வத்தைத் தம் நெஞ்சத்தே திண்ணிதாக நினைந்து அத் தெய்வத்தை வழிபாடு செய்தலையே தங்கடமையாகக் கொண்டவர் அம் மேடையின்மேல் அத் தெய்வத்தின் திருவடிக்கிடுவதாக நினைத்து மலரை இட்டால் அஃது அவ்விடத்தினின்றும் மறைந்து அத் தெய்வத்தின் திருவடியைச் சென்று சேர்வதாம்; நீனைப்பிலராய் இடின்-யாரேனும் யாதொறும் தெய்வத்தையும் நினைத்தலின்றி அதன்மேல் மலரை வறிதே இடுவாராயின்; யாங்கணும் நீங்காது-அம் மலர் யாண்டும் போகாமல் அம் மேடையின் மேலேயே கிடவாநிற்கும்; ஈங்கு இதன் காரணம் என்னை என்றியேல்-இம் மேடையி லிவ்வாறு நிகழும் அற்புத நிகழ்ச்சிக்குக் காரணந்தான் என்னையோ என்று வினைவுவாயாயின் கூறுவேன் கேள். அதுதான்-அத் தாமரைப் பீடிகை தானும்; பண்டு மயன்-முன்பொரு காலத்தே அமரர் தச்சனாகிய மயன் என்பவன்; சிந்தை இன்றியும் செய்வினை உறும் எனும் வெந்திறல் நோன்பிகள் விழுமங் கொள்ளவும்-ஒருவன் இதனைச் செய்யவேண்டும் என்னும் நினைவின்றியே செய்ததொரு வினையின் பயனும் அவனுக்கு வந்துறாமல் வீண்போகாது என்னும் கோட்பாடுடைய வெவ்விய ஆற்றலுடைய தவத்தோர் தம் கொள்கை தவறென்று தமது அறியாமைக்கு வருந்த வேண்டும் என்றும்; சிந்தையின்று எனின் செய்வினை யாவதும் எய்தாது என்போர்க்கு ஏதுவாகவும்-தான் செய்யும் வினையின்கட் செய்யவேண்டும் என்னும் தன்முனைப்பு இல்லை யாயவழி ஒருவன் செய்த வினையின் பயன் அவனுக்குச் சிறிதேனும் வந்துறாது என்னும் கொள்கையுடையவர்க்கு அக்  கொள்கையைச் சாதிக்குமோர் ஏதுவாக வேண்டும் என்றும் கருதி; பயன்கெழு மாமலர் இட்டுக்காட்ட இழைத்த மரபினது- இருவிழியும் இவ்வாறு பயன்தரும் சிறந்த மலரை இட்டு மெய்யறிவு காட்டற் பொருட்டே இயற்றிய முறைமையினை உடைத்தாகலான்; அதுதான்-அப்பிடிகைதானும் இவ்வற்புதம் நிகழ்த்துகின்றது காண் என்றாள் என்க.

(விளக்கம்) அதன்திறம்-அப்பீடிகையின் சிறப்பு. கடம்-கடமை. ஒரு தெய்வத்தைக் கருத்திடைவைத்து என்றது ஒரு தெய்வத்தை வழி படுதெய்வமாக மதித்து என்றவாறு. அவர்- அத்தெய்வம். இதன் காரணம் இங்ஙனம் நிகழ்கின்ற அற்புதச் செயலுக்கான காரணம். வெந்திறல் நோன்பிகள் என்றது இகழ்ச்சி. அவராவார் ஆருகதர். அவர் நினையாது வினைசெய்யினும் அவ்வினையும் செய்தவனுக்குத் தன் பயனை ஊட்டாது கழியாதெனும் கோட்பாடுடையர். அதனை,

ஒத்த வன்றனை யுறுபகை யேயெனக்
குத்தி னானுக்கும் கொலைவினை யில்லெனப்
புத்த னீருரைத் தீரங்கோர் புற்கலம்
செத்த வாறது சிந்திக்கற் பாலதே

எனவரும் நீலகேசியானும் அதனுரையானும் உணர்க. (நீல-543) மற்றிச்செய்யுளே, செய்வினை சிந்தையின்றெனின் யாவதும் எய்தாதென் போர் பௌத்தர் என்பதற்கும் எடுத்துக்காட்டாதலறிக.

ஆருகதர் உடலை வருத்தும் கடுநோன்புடையராதலின் அவரை வெந்திறல் நோன்பிகள் என்றிகழ்தபடியாம். அது-அப் பீடிகை.

மணிமேகலைக்குத் துணையாகச் சுதமதியும் செல்லுதல்

80-85: அவ்வனம்..........செல்வுழீஇ

(இதன் பொருள்) அணியிழை நின்மகள் அவ்வனம் அல்லது செவ்வனம் செல்லும் செம்மைதான் இலள்-மகளிர்க்கு அணிகலன் போல்பவளாகிய நின்மகளாகிய மணிமேகலை மலர் கொய்தற்குச் செல்வதாயின் அவ்வுவவனத்திற்கு நேராகச் செல்வதல்லது பிற வனத்திற்குச் செல்லும் தகுதியுடையாள் அல்லள்; மாமலர் கொய்ய-சிறந்த மலரைக் கொய்துவருதற்கு; மணிமேகலையொடு அணியிழை நல்லாய்-உவவனத்திற்கும் அவள் தமியளாய்ப் போகவறியாள் ஆகலின் அவளோடு மாதவி நல்லாய்; யானும் போவல் என்று-யானும் துணையாகச் செல்வேன் காண் என்று தானே முறைபட்டு எழுந்து; அணிப் பூங்கொம்பர் அளளொடும் கூடி மணித்தேர் வீதியில் சுதமதி செல்வுழி -அழகிய பூங்கொம்பு போன்ற அம் மணிமேகலையோடு கூடி மணி யொலிக்கும் தேர்களியங்கும் பெருந் தெருவின்மேல் சுதமதி அவட்கு வழிகாட்டிச் செல்லுகின்ற பொழுது என்க.

(விளக்கம்) அவ்வனம்-அந்த உவவனம். அணியிழையாகிய நின்மகள் என்க. செவ்வனம்-நேர். செம்மை-தகுதி. கொம்பர் போன்றவளோடு கூடி என்க.

களிமகனும் சமணத்துறவியும்

86-93: சிமிலி.........கேண்மோ

(இதன் பொருள்) சிமிலிக் கரண்டையன் நுழை கோல் பிரம்பினன்-உறியிலிட்டுத் தூக்கிய நீர்க்கரகத்தையுடையவனும் நுண்ணிதாகத் திரண்ட பிரம்மைப் பற்றியவனும்; தவல் அருஞ் சிறப்பின் அராந்தாணத்துளோன்-கேடில்லாத சிறப்பினையுடைய அராந்தாணம் என்னும் அருகன் கோயிலில் உறைபவனும் ஆகிய அமணசமயத்துத் துறவியொருவன்; நாணமும் உடையும் நன்கனம் நீத்து-நாணத்தையும் ஆடையையும் துவரத்துறந்து; காணா உயிர்க்கும் கையற்று ஏங்கி-கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிர்க்கும் தன்னியக்கத்தால் இன்னல் உண்டாமோ என்று நிலத்தை மிதிக்கவும் அஞ்சித் செயலறவுடையனாய் ஏக்கமுற்று; உண்ணாநோன்பொடு உயவில் யானையின் மண்ணா மேனியன் வருவோன்றன்னை-உண்ணா நோன்பினாலே பசியால் வருந்தும் யானை போலக் கழுவாத உடம்பையுடையனாய் அவ்வீதியின்கண் வருபவனை;(103) ஓர் களி மகன்-கள்ளுண்டு களித்தானொரு கயவன்; வந்தீர் அடிகள் நும்மடி தொழுதேன்-எதிர்நின்று மறித்துக் கூறுபவன் அடிகேள் வருக வருக நீவிரே எளிவந்தருளினிர் அடியேன் நும்முடைய திருவடிகளைத்  தொட்டுக் கைகுவித்துத் தொழுதேன் ஏற்றருளுக எம்தம் அடிகள்- எங்கள் அடிகளே; எம் உரை-எளியேம் வேண்டுகோளையும் கேண்மோ-செவியேற்றருள்க என்றான் என்க.

(விளக்கம்) சிமிலி-உறி. கரண்டை-கரகம். நுழைகோல் நுண்ணியதிரட்சி. தவல்கேடு. அராந்தாணம்-அருகன்கோயில். காணாவுயிர்- கண்ணுக்குப் புலப்படாத நுண்ணுயிரினம். அவற்றினை மிதித்துழிக் கொலைத்தீவினை வருமென்று வருத்தி ஏங்கினன் என்பது கருத்து. அவ்வாறு சமணசமயத்துறவோர் வருத்துதலை-

குறுந ரிட்ட குவளையம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
அறியா தடியாங் கிடுதலுங் கூடுங்
எறிநீரேடைகரை யியக்கிந் தன்னின்
பொறிமா ணலவனும் நத்தும் போற்றா
தூழடி யொதுக்கத் துறுநோய் காணின்
தாழ்தரு துன்பந் தாங்கவு மொண்ணா
                                (சிலப். 10: 84-93)
எனவரும் கவுந்தியடிகளார் கூற்றானுமுணர்க. உயவல் யானை-வருந்துகின்ற யானை மண்ணா மேனி-கழுவாத உடம்பு. வந்தீர்-எளிவந்தீர். இஃது அசதியாடியபடியாம். களிமகன் என்னும் எழுவாய் (103) முன்னே கூட்டப்பட்டது. கேண்மோ-ஓ: முன்னிலையசை.

இதுவுமது

94-103: அழுக்குடை..........பின்னரும்

(இதன் பொருள்) அழுக்குடை யாக்கையில் புகுந்த நும் உயிர் புழுக்கறைப் பட்டோர் போன்று உளம் வருந்தாது-அழுக்கோடு கூடிய நும்முடைய உடம்பினுள் புகுந்துறைகின்ற நுமதுயிரானது புழுக்கமிக்க அறையாகிய சிறையிலிடப்பட்டவர் போன்றுள்ளம் பெரிதும் வருந்தர்வண்ணஞ் செய்து; இம்மையும் மறுமையும் இறுதியில் இன்பமும் தன்வயின் தரூஉம்-(இதோ இக் கலத்திலுள்ள இக்கள்ளை நோக்குமின் இஃதெத்தகைய தோவெனின்) இஃது இம்மையில் நுகர வேண்டிய இன்பத்தையும் இம்மை மாறித் துறக்கத்தே நுகர்தற்கியன்ற அமரருலகவின்பத்தையும்

இவற்றிற்குத் அப்பாற் பெறக் கிடந்த கடையிலாவின்பம் என்று நுங்கள் இறைவன் கூறும் வீட்டின்பத்தையும் தன்னுள்ளிருந்தே வழங்கும் என்று; என் தலைமகன் உரைத்தது-இதன் பெருமை என் நல்லாசிரியர் செவியரிவுறுத்து எனக்கருளிய தொன்றும்; கொழுமடல் தெங்கின் விளைபூந்தேறலின் கொலையும் உண்டோ-வளமான மடல்களையுடைய தென்னையின் பூவாகிய பாளையிற் பிறந்த இந்தக் கள்ளில் கொலைத்தீவினையும் உண்டோ இல்லையாகலின்; மெய்த் தவத்தீரே-கொல்லாமை மேற்கொண்டொழுகா நின்ற வாய்மையான தவத்தையுடையீரே; உண்டு தெளிந்து இவ்யோகத்து உறுபயன் கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்ம் என இக் காலத்திலுள்ள கள்ளை ஒருமுறை பருகி அதனொடு கலந்து ஒன்ணுபட்டு நும் நெஞ்சந் தெளித்து இந்த யோகத்தினது மிக்க பயனை நீயர் கண்டுகொண்டு எம்முரை பொய்யாயின் பின்னர் இக்கள்ளோடு எம்மையும் கையை அசைத்துப் போக்குமின் என்று கையை அசைத்துப் போக்குமின் என்று சொல்லி; உண்ணா நோன்பி தன்னொடும் சூள் உற்று உணம் என இரக்கும் ஓர் களிமகன்-உண்ணா நோன்பையுடைய அத் துறவி முன்னர் நின்று பருகீராயின் நும்மை விடேன் என்று வஞ்சினங்கூறி அடிகேள் சிறிது பருகிக் பாருங்கள் என்று வேண்டுகின்ற அக்களிமகள் பின்பும் என்க.

(விளக்கம்) சமணத்துறவோர் நீராடார் ஆதலின் அதனை விதந்து அழுக்குடையாக்கை என்றான். அழுக்கால் மயிர்த்துளைகளும் அடை பட்டிருத்தலின் அவர் உடம்பைப் புழுக்கறையோ டுவமித்தான். புழுக்கறை-கடிய குற்றமிழந்தோரை இட்டுவைக்கும் புழுக்கமிக்க நிலவறை எனவே அக்காலத்துச் சிறைக் கோட்டத்துள் இஃதொன்றென்றறிக. கடையிலாவின்பம் எனச் சமணர் கூறும் வழக்கிற்கேற்ப இறுதியிலின்பம் என்றான். கள்ளின் பெருமை கூறுவான் மூவகை யின் பத்தையும் இது தன்னுளளிருந்தே வழங்கும் என்றான். நுமக்குத் தலை மகனாகிய அருகன் போன்று எமக்கும் ஒரு முதல்வனுளன் அவனே இதனருமையை அறிவுறுத்தினன் என்பான் என்தலைமகன் உரைத்தது öன்றான். நுங்கன் கோட்பாடாகிய கொல்லா விரதத்திற்கும் கள் பொருந்தும் என்பான் தேறலிற் கொலையும் உண்டோ என்றான்; வினா அதன் எதிர்மறைபொருளை வலியுறுத்து நின்றது. யோகம்-இரண்டறக்கலத்தல். கள்ளின் வெறி உண்டவர்களை விழுங்கி அவர் அறிவை இல்லையாக்கித் தானேயாய் நிற்றலால் இதுவே பயனால் சிறந்ததொரு யோகம் என்பான் இவ்யோகத்தின் உறுபயன் என்றான். கண்டால் ஏற்றுக்கொண்மின் இன்றேல் எம்மையும் கையுதிர்த்துப் போக்குமின் என்றவாறு. சமணத்துறவோர் தந்நெறியொழுகாதாரைக் கண்டக்கால் அவரோடு வாயாற் பேசாமல் கையை அசைத்தே அகற்றுவர் ஆதலின் எம்மையும் கையுதிர்க்கொண்மின் என்றான். கையுதிர்-கையை அசைத்தல். உண்ணாநோன்பி-இரண்டுவாவும் அட்டமியும் முட்டுப் பாடும் பட்டினி விட்டுண்ணும் விரதி. களிமகன் பின்னரும், மையலுற்ற மகன் பின்பும் வருந்தி(115), நிற்குநரும் என இயையும்.

ஒரு பித்தன் செயல்

104-115: கணவிர......நிற்கநரும்

(இதன் பொருள்) கணவிர மாலையிற் கட்டிய திரள் புயன்-அலரிப் பூமாலையாலே கட்டப்பட்ட திரண்ட புயங்களையுடையவனும்; குவிமுகிழ் எருக்கின் கோத்த மாலையன்-கூம்பிய அரும்புகளையுடைய எருக்கம் பூவினால் தொடுக்கப்பட்ட மாலையினை மார்பில் அணிந்தவனும்; சிதவல் துணியொடு சேண் ஓங்கு நெடுஞ்சினை ததர் வீழ்பு ஒடித்துக் கட்டிய உடையினன்-இடையிலே நைந்து சிதைந்த கந்தையோடு மிகவும் உயர்ந்த நெடிய மரக்கிளைகளினின்று உலர்ந்து தாமே உதிர்த்த சுள்ளிகளை ஒடித்து அக்கந்தல் துணியில் மடிகோலிக் கட்டிய ஆடையை உடையவனும் ஆகி; பலரோடும் பண்பு இல்மொழி உரைத்து-எதிர்வரும் ஏதிலார் பலரோடும் வாய்தந்த பொருளற்ற மொழிகளைப் பேசி; ஆங்கு அழூஉம் விழூஉம் அரற்றும் கூஉம் தொழூஉம் எழூஉம் அங்கனம் பேசும் பொழுதே அழுவான் தரையிலே விழுவான் அழுது ஏதேனும் பிதற்றுவான் கூவுவான் கை கூப்பித் தொழுது வீழ்ந்து வணங்குவான் பின்னர் எழுவான்; சுழலலும் சுழலும் ஓடலும் ஓடும்-நின்றவாறே சுழலுதலும் செய்வான் பொள்ளென அவ்விடத்தினின்று விரைந்து ஓடுதலையுஞ் செய்வான்; ஒரு சிறை ஒதுக்கி நீடலும் நீடும்-ஒரு பக்கத்தே ஒதுக்கி நெடிது நிற்றலும் செய்வான்; நிழலொடு மறலும்-தனது நிழலொடு பகைத்து மறவுரை பல கூறுவான்; மையல் உற்ற மகன் பின் இவ்வாறு பித்தேறி உழலுகின்ற ஒருவன் பின்னே; வருந்திக் கையிறு துன்பம் கண்டு நிற்குநரும்-அவன் நிலைக்குப் பெரிதும் இரங்கி வருந்தி அவன் திறத்திலே தாம் கையற்று நிற்றற்குக் காரணமான அவன் துன்பங்களைக் கண்டு நிற்பவர்களும் என்க.

(விளக்கம்) கணவிரமாலை-அலரிப்பூமாலை. எருக்கிற் கோத்த மாலை-எருக்கம் பூக்கள் கோக்கப் பெற்ற மாலை என்க. சிதவற்றுணி-கந்தற்றுணி. ததர்வீழ்பு-செறிந்து வீழ்ந்தவையாகிய சுள்ளி. சுழலலும் சுழலும் என்றது அதன் மிகுதி தோற்றுவித்து நிற்கும் ஒரு சொன்னீர்மைத்து ஓடலும் ஓடும் என்பதுமது. நிழலொடு மறலுதல்-நிழலைப் பகைவனைப் பார்க்குமாறு சினந்து நோக்கி வீரம் பேசிப் போரிடுவான் போலாதல்.

பேடியாடல்

116-125: சுரியல்..........காண்குநகும்

(இதன் பொருள்) நீள் நீலமளந்தோன் மகன்-நெடிய நிலத்தை ஓரடியாலே அளந்தருளிய திருமாலின் அவதாரமாகிய கண்ணன் மகனாகிய காமன் அவதாரமாகிய பிரத்தியும்நன் என்பவன்; முன்-பண்டு தன் மகனாகிய அகிருத்தினைச் சிறைவீடு செய்தற் பொருட்டு சென்று; வாணன் பேர் ஊர் மறுகிடை-வாணாசுரனுடைய பெரிய நகரமாகிய சோ வினது வீதியிடத்தே; சுரியல் தாடி மருள்படு பூங்குழல் பவளச் செய்வாய்த் தவள வாள் நகை-சுரண்ட தாடியையும் கண்டோர் மயங்குதற்குக் காரணமான அழகிய கூந்தலையும் பவளம் போன்று சிவந்த வாயினையும் வெள்ளிய ஒளி தவழும் எயிறுகளையும்; ஒள் அரி நெடுங்கண் வெள்ளி வெள் தோட்டுக் கருங் கொடி புருவத்து-ஒள்ளிய செவ்வரி படர்ந்த நீண்ட கண்ணையும் மிகவும் வெண்மையான சங்கினாற் செய்த தோடணிந்த செவியினையும் கரிய ஒழுங்குபட்ட புருவத்தையும்; மருங்குவளை பிறைநுதல்-இருபக்கத்தும் வளைந்த பிறைத்திங்கள் போன்ற நெற்றினையும்; காந்தன் அம் செங்கை ஏந்து இள வன முலை அம் நுண் மருங்குல் அகன்ற அல்குல்-காந்தள் மலர் போன்ற அழகிய சிவந்த கையினையும் அணந்துநிற்கும் இளமையும் எழிலுமுடைய முலையினையும் அழகோடு நுணுகிய இடையினையும் அகலிதாகிய அல்குலையும்; இகந்த வட்டுடை எழுது வரிக்கோலத்து-மகளிர்க்கியன்ற ஆடை மரபினைக் கடந்த முழந்தாளளவிற்றாகிய வட்டுடையினையும் தோளினும் முலையினும் எழுதிய பத்திக் கீற்றின் அழகினையுமுடைய; பேடிக்கோலத்து-ஆண்மையழிந்து பெண்மையவாவிய பேடியின் கோலம் பூண்டு; ஆடிய பேடு காண்குநரும்-ஆடியருளிய பேடு என்னும் புறநாடகமாடுவார் ஆடுங்கூத்தினைக் கண்டு களிப்போரும் என்க.

(விளக்கம்) சுரியல்-சுருண்ட. கண்டோர் மருள்படும் கூந்தல் என்க. நகை-எயிறு. அரி-செவ்வரி. தோடு-ஒருவகைக்காதணி. கொடி-புருவம். மகளிர் உடுக்கும் ஆடை மரப்பினை இகந்த வட்டுடை. இகத்தல்-கடத்தல். வட்டுடை-முழந்தாள் அளவிற்றாகிய ஒருவகை உடை. வாணன் பேரூர்-வாணாசுரன் நகரம்; இதற்குத் சோநகரம் என்பது பெயர். நிலமளந்தோன்-திருமால்; ஈண்டுக் கண்ணன் மேற்று. அவன் மகன் பிரத்தியும் நன். இவன் மகன் அநிருத்தன் சிறையிடப்பட்டான். அவனை மீட்கச் சென்றுழி, பிரத்தியும்நன் அந் நகரமறுகில் பேடிக்கோலங்கொண்டு கூத்தாடினான். அக்கூத்திற்குப் பேடு என்று பெயர் இதனைப் புறநாடகம் பதினொன்றனுள் ஒன்று என்ப. வாணன் பேரூரில் ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக் காமன் ஆடிய பேடியாடலும் (சிலப்-6-54-5 என்பர் இளங்கோ. பிரத்தியும்நன் காமனின் அவதாரம் ஆதலின் காமர் என்றார், இனி இதனோடு

சுருளிடு தாடி மருள்படு பூங்குழல்
அரிபரந் தொழுகிய செழுங்கய னெடுங்கண்
விரிவெண் டோட்டு வெண்ணகைத் துவர்வாய்ச்
சூடக வரிவளை ஆடமை பணைத்தோள்
வளரிள வனமுலைத் தளரியன் மின்னிடைப்
பாடகச் சீறடி ஆரியப் பேடி

எனவரும் இளங்கோ வாக்கு (27:181-6) ஒப்புக்காணத் தகும்.

கண்கவர் ஓவியம்

126-131: வம்ப.........நிற்குநரும்

(இதன் பொருள்) வம்பமாக்க-இந்திர விழாக் காண்டற் பொருட்டு அந் நகரத்திற்கு வந்துள்ள புதிய மாந்தர்; கம்பலை மூதூர்-ஆரவார மிக்க பழைய அப் பூம்புகார் நகரத்திலே காட்சி பலவும் கண்டு வருபவர் அத்தேர்வீதியின் இருமருங்கும் அமைந்த; சுடுமண் ஓங்கிய நெடுநிலை மனைதொறும்-செங்கல்லாலியன்ற உயர்ந்து நிற்கின்ற நெடிய ஏழடுக்கு மாளிகை ஒவ்வொன்றினும்; மை அறு படிவத்து வானவர் முதலா எவ்வகை உயிர்களும் உவமம் காட்டி-குற்றமற்ற வடிவத்தையுடைய எத்தகைய உயிர்களுக்கும் அவ்வவற்றிற்கு உவமையாமாறு தங்கலைத்திறத்தைக் காட்டி; விளக்கத்து வெள்சுதைதீற்றிய விளக்கமான வெண் சாந்தினையுடைய சுவரின் கண்; வித்தகர் இயற்றிய-ஓவியக்கலை கற்றுத் துறை போகிய வித்தகப் புலமையோர் வரைந்துள்ள; கண்கவர் ஓவியம் கண்டு நிற்குநரும்-காண்போர் கண்களைத் தம் அழகாலே கவருமியல் புடைய ஓவியங்களைக் கண்டு வியந்து நிற்போரும் என்க.

(விளக்கம்) சுடுமண்-செங்கல். நெடுநிலைமனை-எழுநிலை மாட மாளிகை. படிவம்-வடிவம். வானவர் முதலா எவ்வகையுயிரும் என்றது அறுவகைப் பிறப்பினையும் உடைய உயிர்களையும் என்றவாறு. ஓவியங் காண்போர்க்கு இப்படித்தான் இந்திரன் இருப்பான்; இப்படித்தான் திருமகள் இருப்பாள் என அவ்வோவியங்கள் உவமமாகும்படி கலைத்திறத்தால் காட்டி என்க. பன்னிறங்கொண்டு வரையவேண்டுதலின் வெண்சுதை வேண்டிற்று. விளக்கத்து வெண்சுதை என மாறுக. விளக்கத்து இயற்றிய என இயைப்பினும் ஆம். எவ்வகைச் செய்தியும் உவமங்காட்டி நுண்ணிதினுணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் என,(மதுரை-556)பிறகும் ஓதுதல் காண்க.

தளர்நடை தாங்காக் கிளர்பூண் புதல்வர்

132-145: விழாவாற்று.......நிற்குநரும்

(இதன் பொருள்) விழா ஆற்றுப்படுத்த கழிபெரு வீதியில்-இந்திரவிழா இனிது நிகழுமாறு அணி செய்து அதன்வழிப் படுத்தப்பட்ட மாபெருந் தெருவிடத்தே; பொன் நாண் கோத்த நல்மணிக் கோவை ஐயவி அப்பிய நெய்மணி முச்சி-பொன்னாலியன்ற நாணிலே கோக்கப்பட்ட அழகிய மணிக் கோவையும் சிறுவெண் கடுகினை அப்பிய நெய்யணிந்த உச்சியில் அமைந்த; மயிர்ப்புறம் சுற்றிய கயில் கடை முக்காழ் பொலம் பிறை-மயிரைக் கொண்டையாகக் கட்டி அதைச் சுற்றிக்கட்டப்பட்ட கோக்கியை நுனியிலுடைய முப்புரியாகிய முத்துமாலையும் அதனோடு கட்டிய பொன்னாற் செய்த பிறையும்; சென்னி நலம் பெறத்தாழ-தலை அழகு பெறுமாறு தாழ்ந்து கிடப்பவும்; செவ்வாய்க்குதலை மெய் பெறு மழலை சிந்துபு சில்நீர் ஐம்படை நனைப்ப-பொருள் விளங்காததும் எழுத்துருவம் பெறாததும் ஆகிய மழலை மொழியோடு சிந்தித் தம் வாயூறல் தம் மார்பிடைக் கிடக்கும் ஐம்படைப்பூந்துகில்-மறைக்க வேண்டிய உறுப்பை மறைத்துக் காக்கும் கருத்தாலன்றி வாளாது அழகின் பொருட்டு இடையிலே சுற்றிவிடப்பட்ட உடையாகிய அழகிய துகிலானது; தொடுத்த மணிக் கோவை உடுப்பொடு துயல்வர-தொடுக்கப்பட்ட மணிக்கோவையாலியன்ற உடையினோடு சேர்ந்து அசையா நிற்பவும்; தளர் நடை தாங்காக் கிளர்பூண் புதல்வரை-இயல்பாகவே தளர்ந்து நடக்கும் அவர்தம் நடை தாங்கா வண்ணம் மிகுதியாக அணிந்துவிடப்பட்ட விளங்குகின்ற அணிகலன்களையுடைய தத்தம் மக்களை; பொலம் தேர்மிசைப் புகர்முக வேழத்து-பொன்னாலியன்ற தேரின்மீது அமைத்தமையால் மேலும் உயர்ந்துள்ள புள்ளிகளையுடைய முகத்தையுடைய பொன்னாலியன்ற யானையினது பிடரிடத்தே; இலங்கு தொடி நல்லார் சிலர் நின்று ஏற்றி ஆலமர் செல்வன் மகன் விழாக் கால் கோள் காண்மினோ என-விளங்குகின்ற பொன் வளையலணிந்த மகளிர் சிலர் தரைமீதும் தேரின்மீதும் நின்று ஏற்றி வைத்து ஆலமர் செல்வனாகிய நம் இறைவன் மகன் முருகன் இதோ வீதிவலஞ் செய்தல் ஆகிய விழாவைத் தொடங்குகின்றான். எல்லீரும் வந்து காணுங்கோள் என்று ஏனைய ஆயமகளிர்க்குக் காட்ட; கண்டு நிற்குநரும்-அங்ஙனமே வந்து அக் காட்சியைக் கண்டு மகிழ்ந்து நிற்போரும் என்க.

(விளக்கம்) விழா வாற்றுப்படுத்த வீதி என்றது விழா நிகழ்த்துதற்குத் தகுந்ததாக அணிமுதலியவற்றான் நெறிப்படுத்தப்பட்ட வீதி என்றவாறு. அது தேர்வீதியாதலின் கழிபெருவீதி என்றார். ஐயவி-வெண்சிறு கடுகு. இது பேய் முதலியவற்றால் துன்பம் வாராமைப் பொருட்டு சிறுவர் தலையில் அப்பிவிட்டபடியாம். புதல்வர்க்குக் காவற் பெண்டிர் கடிப்பகை எறிந்து தூபம் காட்டித் தூங்குதுயில் வதியவும் எனப் பிறாண்டும் ஓதுவர்(7:57-9)முச்சியில் கொண்டை யாகப் புனைந்த மயிர்ப்புறஞ் சுற்றி என்க. கயில்-கோக்கி;(கொக்கி) கயிற்கடை-கோக்கியில்.கடை: ஏழாவதன் உருபு கயிற் கடைப்பிறை என்க. நலம்-அழகு. குதலை-பொருள் விளக்காச் சொல். மெய்-எழுத்துருவம். சின்னீர் என்றது வாயூறலை. ஐம்படை-திருமாலுடைய சங்கு முதலிய ஐந்து படைகளின் வடிவமாகச் செய்து மகவிற்கு மார்பின்கண் அணியும் ஒருவகை அணிகலன். அற்றம்-சோர்வு; இடக்கரடக்கு. மறைக்க வேண்டிய உறுப்புக்களை மறைத்து மானங்காத்தற் பொருட்டன்றி வாளாது அழகின் பொருட்டுச் சுற்றிய பூந்துகில். மணிக் கோவைகளைத் தூங்கவிட்டு ஆடைபோல அற்றங் காத்தற்கு அரையிற் கட்டும் அணியை உடுப்பு என்றார். தம்முடம்பையே தாங்காது தளரும் நடைக்கு மேலும் பொறையாக அணியப்பட்ட பூண் என்பார் நடைதாங்காப்பூண் என்றார். தேர்-பொற் சிறுதேர் அதன் மிசை பொன் யானையை ஏற்றி அதன் பிடரில் புதல்வரை ஏற்றிவைத்து முருகன் விழாத்தொடங்குகின்றார்கள் காண்மினோ என்றவாறு. ஆலமர் செல்வன் மகன்-முருகன்.

மணிமேகலை மலர் கொய்யப் போவாளைக் கண்டு

மாந்தர் பெரிதும் மனம் மறுகுதல்

146-158: விராடன்.......இனைந்துக

(இதன் பொருள்) விராடன் பேரூர் விசயன் ஆம் பேடியைக் காணிய சூழ்ந்த கம்பலை மாக்களின்-விராடனுடைய தலை நகரத்து வீதியிலே செல்லாநின்ற விசயனாகிய பேடியைக் காணுதற்கு அவாவிச் சூழ்ந்துக்கொண்ட ஆரவாரமுடைய அந்நகரத்து மாந்தரைப் போன்று; மணிமேகலைதனை வந்து புறஞ் சுற்றி சுதமதியோடு மலர் கொய்ய அவ்வீதியிலே செல்லாநின்ற மணிமேகலையைக் கண்ட அந்நகரத்து மக்கள் பலரும் அவள் பக்கலிலே வந்து சூழ்ந்துகொண்டு; அணி அமை தோற்றத்து அருந்தவப் படுத்திய தாயோ கொடியள் தகவு இலள் செய்யாக் கோலத்தோடு இவளைச் செயற்கரிய தவநெறியிலே செலுத்திய மாதவியும் ஒரு தாய்மையுடையள் ஆவாளோ? அவள் தாயல்லள் பெரிதும் கொடியவள், பண்பற்றவள்! ஈங்கு இவள் மலர் வனம்தான் புகின்-இவற்றே இவள் மலர்ப் பொழிலினூடே புகுந்தக்கால்; ஆங்கு உள நல் இள அன்னம் மடந்தை தன் நடை நாணாது வல்லுந கொல்லோ- அப் பொழிலில் வாழ்கின்ற அழகிய அன்னப் பறவைகள் இவள் நடையைக் கண்டு நாணி ஓடுவதல்லது நாணாமல் அங்கு வாழ வல்லமையுடையன ஆகுமோ? ஒருதலையாய் ஓடியேபோம்; ஆங்குள மாமயில் தையல் முன் வந்து நிற்பன தன்னுடன் சாயல் கற்பன கொலோ- அப் பொழிலிடத்தே வாழ்கின்ற அழகிய மயில்களுள் வைத்து நாணாது துணிந்து வந்து நிற்கின்ற மயில்கள் ஒரோவழி இவளிடத்தேயுள்ள சாயலைத் தாமும் கற்க விரும்புவன ஆதல் வேண்டும்; உள பைங்கிளிகள் தாம் பாவை தன் கிளவிக்கு எஞ்சல கொல்லோ இசையுந அல்ல-அப் பொழிலிலே மழலை பேசித்திரிகின்ற பச்சைக்கிளிகள் தாமும் இனிமையினாலே இவளுடைய மொழி தரு மினிமையை விஞ்சி விடமாட்டா ஏன்? ஒப்பாவனவும் இல்லை; என்று இவை சொல்லி-என்று இவையும் இவை போல்வனவும் தத்தம் வாய்தந்தனவெல்லாம் பரிந்து சொல்லி யாவரும் இனைந்து உக- எத்தகையோரும் இவள் பொருட்டுப் பெரிதும் நெஞ்சழிந்து ஒழுகுமாறு வருந்த என்க.

(விளக்கம்) பன்னிரண்டாண்டு காட்டிலுறைந்த பின்னர் ஓராண்டு பிறர் அறியாவண்ணம் கரந்துறைதல் வேண்டும் என்று துரியோதனனுடன் உடன்படிக்கை செய்துகொண்ட பாண்டவர் விராடநகரத்தில் உள்வரிக்கோலம் பூண்டுறைந்தனர் என்பது மகாபாரதம். அப்பொழுது அருச்சுனன் பேடியுருத்தரித்து அந்நகரத்திற் செல்ல அப்பேடியைக்காண நகரமாந்தர் ஆரவாரத்துடன் வந்து அப் பேடியைச் சூழ்ந்தது ஈண்டுத் துறவோர் பள்ளியினின்றும் மலர்வனம் புகச்செல்லும் மணிமேகலையை மாந்தர் சூழ்ந்தமைக்குவமை.

கம்பலை-ஆரவாரம். அணியமை தோற்றம்- அணிகலன் இல்லாமலும் திகழும் இயற்கை அழகு. இதனைச் செய்யாக்கோலம் என்பர் இளங்கோ. தாயோ என்னும் வினா எதிர்மறைப் பொருளை வற்புறுத்தி நின்றது. வல்லுந-பொறுக்கும் வன்மையுடையன. ஓ:எதிர்மறை கற்பன கொல்லோ என்புழி, கொல்லும் ஓவும் அசைச்சொற்கள். வினாவாக்கி-கற்கவியலா தெனினுமாம். எஞ்சல-விஞ்சா; மிகா. இசையுநவும் அல்ல எனல் வேண்டிய எச்சவும்மை தொக்கது. இசையுந ஒப்பாவன. இவை என்றது தாயோ கொடியள் என்பது முதலியவற்றை.

மணிமேகலையும் சுதமதியும் மலர்வனம் புகுதல்

159-171 :செந்தளிர்......மணிமேகலையென்

(இதன் பொருள்) செந்தளிர்ச் சேவடி நிலம் வடுவுறாமல்-சிவந்த தளிர்போன்று சிவந்த அடியினாலே நிலத்தில் சுவடு தோன்றாதபடி நடந்து; குரவமும் மரவமும் குருந்தும் கொன்றையும் திலகமும் வகுளமும் செங்கால் வெட்சியும் நரந்தமும் நாகமும் பரந்தலர் புன்னையும்-குராமரமும் வெண் கடப்ப மரமும் குருந்தும் கொன்றையும் திலகமரமும் வகுள மரமும் சிவந்த காலையுடைய வெட்சியும் நரந்த மரமும் நரகமரமும் பரந்து மலரும் புன்னையும்; பிடவமம் தளவமும் முடமுள் தாழையும் குடசமும் வெதிரமும் கொழுங்கால் அசோகமும்-குட்டிப்பிடவங் கொடியும் செம்முல்லையும் வளைத்த முள்ளையுடைய தாழையும் வெட்பாலையும் செருந்தியும் மூங்கிலும் வளவிய காலையுடைய அசோக மரமும்; செருந்தியும் வேங்கையும் பெருஞ்சண்பகமும் எரிமலர் இலவமும்-செருந்தி மரமும் வேங்கை மரமும் பெருஞ்சண்பக மரமும் நெருப்புப் போன்ற மலரையுடைய இலன மரமும் ஆகிய இவையெல்லாம்; விரிமலர் பரப்பி-மலர்ந்த மலர்களைப் பரப்பியிருத்தலாலே; வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செங்கைப்படாம் போர்த்ததுவே ஒப்பத் தோன்றிய-ஓவியப் புலவர் வரைந்த விளக்கமான கைத் தொழிலாகிய சித்திரங்கள் அமைந்த செய்கையையுடைய படா அத்தினால் போர்க்கப்பட்டதை ஒத்துக்காணப்பட்ட; உவவனம் தன்னை தொழுதனள் காட்டிய சுதமதி தன்னொடு-உவவன மென்னும் அத் தெய்வப் பூம்பொழிலை அணுகியவுடன் அதனைக் கைகூப்பித் தொழுது இதுதான் அம்மலர் வனமென்று தனக்குக் காட்டிய சுதமதி என்பாளொடு; மணிமேகலை மலர் கொய்யப் புகுந்தனள்-மணிமேகலை மலர் கொய்தற்கு அவ்வனத்தினுள் புகுந்தனள் என்பதாம்.

(விளக்கம்) குரவமுதலாக இலவ மீறாக் கூறப்பட்ட மரங்களும் கொடிகளும் பிறவும் பகவனதாணையால் ஒரு சேர மலர்ந்து பரப்பித் தோன்றுதற்கு ஓவியப்புலவர் திறம்பட வரைந்த சித்திரங்களையுடைய துகில் உவமை.

தொழுதனள்: தொழுது முற்செற்றம். பகவனதாணையிற் பன்மரம் மலர்தலும் மயனிழைத்த பீடிகையை உடையதாதலும் ஆகிய தெய்வத் தன்மைபற்றிச் சுதமதி அதனை அணுகியவுடன் கைகூப்பித் தொழுது காட்டினள் என்க.

இனி இக் காதையை மாதவியுரைத்த வுரைமுன் தோன்றி மணிமேகலைக்கு ஏது நிகழ்ச்சி எதிர்ந்துளதாகலின் வெதுப்பக் கலங்கி அழித்துருட்டி நீர் ஆட்ட மாதவி நோக்கிக் கொணர்வாயென்றலும் சுதமதி கூறும் காமன் நடுங்கும் ஆடவர் அகறலும் உண்டோ நின்றிடிற் பேடியர் அன்றோ அன்றியும் யான் வரும் காரணங் கேளாய் கொய்வேனை எடுத்தனன் எழுந்தனன் படுத்தனன் ஆயினேன் நீங்கினன் ஆதலால் நின்மகள் செவ்வியிலள் போகின் ஆங்குளர் செல்லார் எய்தார் உவவனம் ஒன்றுண்டு யானும் போவல் என்று செல்வுழி நிற்குநரும் காண்குநரும் நிற்குநரும் இனைந்துகக் காட்டிய சுதமதியோடு மணிமேகலை கொய்யப் புகுந்தனள் என இயைத்திடுக

மலர்வனம் புக்க காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple news
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 
ஐந்தாவது மணிமேகலை உதயகுமரன்பால் உள்ளத்தாள் என மணிமேகலை தனக்கு மணிமேகலா தெய்வம் வந்து தோன்றிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar