காரைக்குடி அருகே மழை வேண்டியும் கிராமம் செழிக்க புலி எடுப்பு வினோத திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2024 04:05
காரைக்குடி; காரைக்குடி அருகேயுள்ள கலிப்புலி மணப்பட்டி, காயாவயல் கிராமத்தார் சார்பில் புலி எடுப்பு திருவிழா விமரிசையாக நடந்தது.
தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் மழை வேண்டியும் கிராமம் செழிக்க வேண்டியும் புரவி எடுத்து திருவிழா நடைபெறுவது வழக்கம்: இந்நிலையில் காரைக்குடி அருகேயுள்ள கலிப்புலி மணப்பட்டி, காயாவயல் கிராமத்தார் சார்பில், மாயாண்டி அய்யனாருக்கு புலி எடுப்பு திருவிழா விமரிசையாக நடந்தது. ஏராளமான கிராம மக்கள் மண்ணால் செய்யப்பட்ட புலிகளை எடுத்துச் சென்று மாயாண்டி அய்யனார் கோயிலில் செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிராம மக்கள் கூறுகையில்: முற்காலத்தில் மாயாண்டி அய்யனார் கோயிலில் புலிகள் வந்து தங்கும். பூஜை செய்ய குதிரைகளில் வரும் பூசாரிகள் அதனை துரத்தி விட்டு பொங்கல் வைத்து வழிபடுவர். நாளடைவில் புலிகள் இல்லாத நிலை ஆனது. புலிகளுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் குழந்தை இல்லாதவர்கள் குழந்தை வேண்டியும் உடல் நலம் வேண்டியும், புலி எடுத்துச் சென்று மாயாண்டி அய்யனாருக்கு செலுத்துவார்கள். பெண்கள பூரான், பாம்பு, பல்லி, மதலை எடுத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். 2 ஆண்டுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும். புலிக்குத்தி கிராமத்திலிருந்து புலி புறப்பட்டு கலிப்புலி மாரியம்மன் கோயிலில் இரவு தங்கும். தொடர்ந்து இன்று காலை கோவிலில் இருந்து புறப்பட்டு மாயாண்டி அய்யனார் கோயிலை சென்றடையும்.