ராவணனைக் கொன்ற பாவத்தால் ராமருக்கு மூன்று தோஷங்கள் உண்டாயின. விச்ரவஸ் என்ற மகரிஷியின் மகன் என்பதாலும், ராவணன் பிராமணன் என்பதாலும் அவனைக் கொன்ற பாவத்தால் பிரம்மஹத்தி தோஷம் (கொலைக்கான பாவம்) உண்டானது. அந்தப் பாவம் தீர ராமர் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். கார்த்தவீர்யார்ஜுனன், வாலி ஆகிய இருவரைத் தவிர தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன் ராவணன். பலமிக்க வீரனைக் கொன்றதால் ராமருக்கு வீரஹத்தி என்னும் தோஷம் பிடிக்கும். அதைப் போக்க, ராமர் வேதாரண்யம் கடற்கரையில் சிவபூஜை செய்தார். வீணை இசைப்பதில் வல்லவனான ராவணனின் புகழ் எங்கும் பரவியிருந்தது. புகழ் மிக்கவனைக் கொன்றால் ‘சாயாஹத்தி’ என்ற தோஷம் பிடிக்கும். அதனைப் போக்க, ராமர் பட்டீஸ்வரத்தில் சிவபூஜை செய்து வழிபட்டார். இந்த மூன்று தலங்களிலும் உள்ள சிவனை ‘ராமலிங்கம்’ என்பர். இவ்வளவு கொடிய பாவங்களே இந்த தலத்தில் தீர்ந்ததென்றால், இத்தலங்களுக்குச் சென்று ராமலிங்கத்தை வழிபட்டால், இதர பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.