கருடவாகனத்திலும், அனுமன் வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளும்போது பகவானின் திருவடிகளே நமக்குத் தஞ்சம் என்பதை நமக்குக் காட்டும் விதத்தில் கருடனுக்கும் ஆஞ்நேயருக்கும் ‘திருவடி’ என்று பெயர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு ‘பெரியகோயில்’ என்ற சம்பிரதாயப் பெயருண்டு. அதற்காக மற்ற கோயில்களைச் சிறிய கோயில்கள் என்று சொல்வதில்லை. மகிமை மிக்க ஒருவரை ‘பெரிய’ என்று அடைமொழியிட்டுக் குறிப்பிட்டால் மற்றவர்களைச் ‘சிறிய’ என்று அடைமொழியிட்டு சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆஞ்ச நேயரைச் சிலர் ‘சிறிய திருவடி’ என்கின்றனர். இவ்வாறு சொல்வது தவறாகும். அமரர் ஸ்தானீகம் எஸ்.பார்த்தசாரதி அய்யங்கார் வெளியிட்டுள்ள ‘திவ்ய பிரபந்த அகராதி’யில் 665 பக்கத்தில் ‘பெரிய திருவடி’ என்ற பதத்திற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. “கருடன் பெருமாளுக்கு வாகனமாய் இருப்பதோடு அவருடைய திருவடிகளையும், கைகளில் தாங்குகையால் கருடன், ஹனுமான் இருவருக்கும் ‘திருவடி’ என்று சம்பிரதாயப் பெயராயிற்று. இருவரில் பெரியவராகையாலே கருடன், ‘பெரிய திருவடி”. ஹனுமானுக்கு ‘சிறிய திருவடி’ என்ற பெயரில்லை. ‘திருவடி’ மட்டுமே.