பதிவு செய்த நாள்
13
செப்
2018
12:09
விநாயகர் சதுர்த்தி விழா, சென்னையில் களைகட்டியுள்ளது.ஆண்டுதோறும், ஆவணி மாத வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், 5,600 விநாயகர் சிலைகள் வைக்க, ஹிந்து அமைப்புகள் முடிவு செய்திருந்தன. ஆனால், நேற்று வரை, 2,520 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரி, காவல்துறைக்கு மனுக்கள் வந்துள்ளன.மேலும், 3 அடி முதல், 13 அடி உயரம் வரை மட்டுமே சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அனுமதி பெற்றவர்கள், ஆங்காங்கே விநாயகர் சிலைகள் வைத்து வருகின்றனர். சில இடங்களில் லட்டு விநாயகர், பருப்பு விநாயகர், பழ விநாயகர் உள்ளிட்ட வித்தியாசமாக சிலைகள் வைத்துள்ளனர்.திருவொற்றியூர், நீலாங்கரை உள்ளிட்ட, ஐந்து இடங்களில் கரைக்க, காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், சென்னை நகரில் அனைத்து பகுதிகளிலும், களிமண் விநாயகர் சிலை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. 50 - 500 ரூபாய் வரை, சாலையோரங்களில், விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன.விநாயகர் சிலைக்கான குடை, 20 முதல் 100 ரூபாய்; அருகம்புல், எருக்கம் பூ மாலை, 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.இந்த ஆண்டு, கொழுக்கட்டை தயாரிப்புக்கான, அச்சு இயந்திரங்களின் விற்பனை அமோகமாக உள்ளது. அவை, 30 - 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. சென்னை நகரில் உள்ள விநாயகர் கோவில்களில், கணபதி ஹோமத்துடன் சிறப்பு வழிபாடுகள், நேற்று முதல் துவங்கின. இன்று, விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன.விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, மூன்று, கூடுதல் கமிஷனர்கள் தலைமையில், 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சிலைகள் கரைக்க அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில், பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது.
சாலைகளில் நெரிசல்: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, ஒரு நாள் விடுப்பு எடுத்தால், தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடலாம்.இதை கருத்தில் கொண்டு, சென்னையில் தங்கி பணிபுரியும், வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், நேற்று காலை முதலே, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். இதனால், அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில், கூட்டம் அதிகளவில் இருந்தது. சொந்த கார்களிலும், பலர் பயணத்தை துவக்கினர். இதனால், சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும், திருச்சி, கோல்கட்டா, பெங்களூரு, சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வானகரம், சூரப்பட்டு, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதுார் சுங்கச்சாவடிகளில், வாகனங்கள், இரண்டு புறங்களிலும் அணிவகுத்து நின்றன. கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட, சென்னையில் உள்ள முக்கிய வர்த்தக பகுதிகளில், சரக்கு ஏற்றி வந்த வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.