சொற்பொழிவாளரான அவர் அபார ஞாபகசக்தியால் மேற்கோள்களை அடுக்கடுக்காகச் சொல்லி பிரமிப்பில் ஆழ்த்துபவர். திடீரென மறதி நோயால் சிரமப்பட்டார். பேச்சு தடைப்பட்டது. சில நேரம் தொடக்கத்தில் சொன்னதையே மீண்டும் சொல்லத் தொடங்கினார். சொற்பொழிவில் கிடைத்த வருமானத்தில் தான் குடும்பம் நடந்தது. செய்வதறியாமல் குடும்பத்தினர் கலங்கினர். பேச்சாளரை அழைத்துக் கொண்டு மகாபெரியவரை தரிசிக்க வந்தனர்.
ஆன்மிகத்தை மக்களிடம் சேர்க்கும் பேச்சாளரின் பணி சிறக்க ஆசிதரும்படி வேண்டுகோள் வைத்தனர். “கவலை வேண்டாம். இன்றே குணமாகும்” என்றார் மகாபெரியவர். சந்திரமவுலீஸ்வரர் சன்னதிக்கு போய், சரஸ்வதி ஸ்லோகங்களைச் சொல்லும்படி கூறினார். அங்கு சென்ற பேச்சாளரும் ஸ்லோகங்கள் சொல்லத் தொடங்கினார். என்ன ஆச்சரியம்! கடகடவென ஸ்லோகங்கள் ஞாபகம் வந்தன. முன்போலவே, தன்னால் மேடையில் பேச முடியும் என நினைத்த மகாபெரியவர் மீது கொண்ட நம்பிக்கைக்கு பலன் கிடைத்ததை உணர்ந்தார்.
ஆனந்தக் கண்ணீருடன் பெரியவரை வணங்கினார். அவரும், அவரது குடும்பத்தினரும் சூழ்ந்திருக்க மகாபெரியவர், “ நான் மாதம் தோறும் மூலநட்சத்திர நாளில் மவுனவிரதம் இருக்கிறேன். ஏன் தெரியுமா? சரஸ்வதிக்கு உரிய நட்சத்திரம் மூலம். நாம் எப்போதும் எதையாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். அது மற்றவர்களுக்கு நல்லதா, கெடுதலா என்று யோசிப்பதில்லை. ’இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ என்கிறது திருக்குறள். கனி போல் இனியதைச் சொல்லாமல், காய் போல் புளிப்பானதை ஏன் பேச வேண்டும்? உன் மொழியை விட என் மொழி தான் உயர்ந்தது என்றெல்லாம் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதை பார்த்தால் மனிதனுக்கும் விலங்கு போல பேசும் ஆற்றல் இல்லாமல் போனால் நல்லது என்று கூடத் தோன்றுகிறது. கண்டதைப் பேசி பிறரைத் துன்புறுத்தியதற்குப் பிராயச்சித்தமாக அவ்வப்போது நாம் மவுன விரதமிருக்க வேண்டும். பேசுவதாக இருந்தால் நல்லதை பேச வேண்டும். சொற்பொழிவாளர்கள் நல்ல தர்மங்களை மட்டுமே மக்கள் மத்தியில் பேச வேண்டும்” என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியதோடு அட்சதை கொடுத்து ஆசியளித்தார்.