ஒரு சிறிய சேவை பெரிய நரகத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும். அதற்கு உதாரணம் ஹஜ்ரத் மாலிக் இப்னு தினார் என்பவரின் வரலாறு. இவர் ஒரு மகான். சிப்பாயாக பணிபுரிந்த தினார் தீயபழக்கம் கொண்டவராக இருந்தார். போதையில் உழன்ற அவர் ஒரு அடிமைப் பெண்ணுடன் நட்பு கொண்டிருந்தார். அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதன் மீது தினாருக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. தினார் மது அருந்த ஆரம்பித்தால் அக்குழந்தை கோப்பையை பிடுங்கி எறியும். ஆனாலும் அவர் திட்டுவதில்லை. நோய்வாய்ப்பட்ட அக்குழந்தை திடீரென இறந்தது. இது தினாரை கடுமையாகப் பாதித்தது. ஒரு ஷாபான் மாதம் 15ம் நாள்... அன்று தொழுகை முக்கியம். அன்றிரவு அதிகமாக குடித்த தினார் தொழாமல் உறங்கச் சென்றார். ஒரு கனவு வந்தது. அதில் தினாரின் இறுதிக்காலம் நெருங்கியது. அவர் இறந்தவர்கள் நுழையும் ’மஹஷர்’ என்ற மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது பெரும் சப்தம் எழவே தினார் திரும்பிப் பார்த்தார். கருநாகம் ஒன்று அவரை விரட்டியது. தினார் ஓடினாலும் அது துரத்தியது. வெண்ணிற ஆடை அணிந்த பெரியவர் ஒருவர் எதிர்பட தினார், “ ஐயா...எனக்கு உதவி செய்யுங்கள்”என்றார். “ வலிமை மிக்க நாகத்தை எதிர்க்க சக்தி இல்லை. இதோ! அந்த மலை மீதேறு. ஒருவேளை தப்பிக்கலாம்” என சொல்லிவிட்டு போனார்.
தினார் மலையில் ஏற அங்கே நரகம் இருந்தது. அதன் விளிம்பைத் தொட்டபோது, “ நீ நரகவாசிகளில் ஒருவன் அல்ல” என குரல் ஒலித்தது. திரும்பி ஓடினார் தினார். பாம்பும் துரத்தியது.. மீண்டும் பெரியவர் எதிர்ப்பட்டார். இப்போதும் தன்னைக் காப்பாற்ற வேண்டினார் தினார். “நான் பலவீனமானவன். என்னால் காப்பாற்ற இயலாது. எதற்கும் இதோ தெரியும் இன்னொரு மலை மீதேறு,” என்றார் அவர். தினார் அந்த மலை மீது ஏறினார். அங்கு கதவு, திரைகள் தென்பட்டன. அங்கு மலக்குகள் (இறைவனுக்குரியவர்கள்) “கதவைத் திறங்கள், திரைகளை விலக்குங்கள். இதோ... ஓடிவரும் இந்த மனிதன் செய்த நற்செயல்களின் பலன் இங்கே இருக்கலாம், அது அபயமளிக்கும்”என்றனர். அதன்படி கதவு திறக்கப்படவே, உள்ளிருந்து குழந்தைகள் பலர் வந்தனர். அவர்களில் தினாரின் இறந்த மகளும் வந்தாள். தினாரைக் கண்ட அவள், “இவர் என் தந்தை” என்றாள். தினாரும் மகளைக் கட்டியணைத்தார். அவள் பாம்பை விரட்ட அது ஓடியது. தினார் அவளிடம், ‘என்னைத் துரத்திய பாம்பு எங்கே?” எனக் கேட்டார். “தந்தையே! செய்த பாவத்தின் வடிவமான கருநாகமே உங்களைத் துரத்தியது” என்றாள். “நான் பார்த்த முதியவர் யார்?” எனக் கேட்டார் “அவர் உங்களின் நற்செயல்களின் வடிவம். இருந்தாலும் பாவச்செயல்கள், நீங்கள் செய்த நல்லதை பலவீனமாக்கி விட்டது. இருப்பினும் அவை பாவத்தில் இருந்து தப்பிக்க வழி காட்டியது” என்றாள். “நீங்கள் இந்த மலையில் என்ன செய்கிறீர்கள்?”என்ற தினாரின் கேள்விக்கு, “உங்களின் இறுதிக்காலம் வரும் வரை இங்கு காத்திருப்போம். மஹ்ஷர் மைதானத்திற்குள் நீங்கள் நுழைந்தவுடன் இறைவனிடம் உங்களுக்காக சிபாரிசு செய்வோம்”என்றாள். இத்துடன் கனவு கலைந்து எழுந்தார் தினார். அதன் பின் தீயபழக்கங்களை விட்டு மகானாக மாறினார். ஒரு சிறுநன்மை கூட நம்மை நரகத்தில் இருந்து காப்பாற்றும் என்பதை தினாரின் வாழ்க்கை சரிதம் காட்டுகிறது.