பதிவு செய்த நாள்
15
அக்
2018
10:10
வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே, குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.பழமையான இக்கோவில், அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, 12:30 மணிக்கு, கோவிலில் அபாய எச்சரிக்கை இயந்திரம் ஒலித்தது. காவலாளிகள் இருவர் சென்று பார்த்தனர். அப்போது மடப்பள்ளி அருகே, ஒயர்கள் உரசி தீப்பொறி ஏற்பட்டது. இதனால் மின் இணைப்பை துண்டித்தனர்.
நேற்று காலையில், கோவிலை திறந்த போது, ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள், ஸ்ரீனிவாச பெருமாள் உற்சவ ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டிருந்தன. கோவில் சுவரை ஒட்டிய மரக்கிளை வழியாக, கொள்ளையர்கள் கோவிலுக்குள் இறங்கியது தெரிய வந்தது.கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இருவர் உலவும் காட்சிகள் இருந்தன. மடப்பள்ளி அருகே ஒயர்கள் உரசி தீப்பொறி ஏற்பட்டது வரை மட்டுமே காட்சிகள் பதிவாகி இருந்தன.மின் இணைப்பை துண்டித்தவுடன் கோவிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், பெருமாள் சன்னிதி கதவுகளின் பூட்டை உடைத்து, சிலைகளை திருடி சென்றுள்ளனர். ஒயர்களில் தீப்பொறியை கொள்ளையர்களே ஏற்படுத்தி இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. ஒன்றரை அடி உயரம் உடைய சிலைகளின் மதிப்பு, பல லட்ச ரூபாய். போலீசார் விசாரிக்கின்றனர்.