பதிவு செய்த நாள்
24
அக்
2018
10:10
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. அன்னையோடு அறுசுவை உண்டிபோம் என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது.
அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ‘ ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். உடல்நிலைக்கேற்ப ஒருவருடைய ஜீரணசக்தி மாறும். அவரவர் தன்மைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். இதைத் தான் ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்.‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம். அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
பகவானும் பழைய சாதமும்: சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்கிறார்கள். இதுபோல் பெருமாளையும் பழைய சாதத்துடன் ஒப்பிடுவார்கள். பழையது சாப்பிடும் பழக்கம் இப்போதும் சிலரிடம் இருக்கிறது. கிராமங்களுக்குப் போனால், முதல்நாள் மீந்துபோன சோறை, தண்ணீரில் போட்டு விடுவார்கள். காலையில் எழுந்ததும், சோறு ஊறிய நீரைக் குடிப்பார்கள். இதற்கு ‘நீராகாரம் என்று பெயர். பின், பழைய சாதத்தை சாப்பிடுவார்கள். இது காலை வெயிலைத் தாங்கும் சக்தியைத் தரும். ‘பழையதும் பகவானும் ஒண்ணு தான். எப்படி தெரியுமா? பழையதும் விடிய விடிய ஜலத்தில் கிடக்கிறது. நாராயணன் கடலிலேயே படுத்திருக்கிறார். பழையதை காலையில் சாப்பிட வேண்டும். பகவானையும் காலையில் வணங்க வேண்டும். பழையதைப் போல நாராயணனும் நாரம் (தண்ணீர்) சூழ இருக்கிறார். நாரம் சூழ உள்ளதால் தான் அவனை ‘நாராயணன் என்கிறோம்.