மன்னர் சாலமோன் தன் நாட்டு மக்களை பக்கத்து நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கமாட்டார். ஏன் என்பதை அறிவதற்காக பக்கத்து நாட்டு மன்னர்கள் சாலமோனைக் காண வந்தனர். அப்போது அரண்மனையில் வழக்கு ஒன்றின் விசாரணை நடந்தது. முதியவர் ஒருவர் நிலத்தை ஒரு இளைஞனுக்கு விற்று விட்டார். வாங்கியவன் உழுத போது பொற்காசுகள் நிறைந்த பானை புதையலாக கிடைத்தது. இளைஞன் அதை முதியவரிடம் ஒப்படைத்தான். “நிலத்தை விற்ற பின் அதிலுள்ள எல்லாப் பொருளும் உனக்கே சொந்தம்” என்றார் முதியவர். “இல்லை. நீங்கள் விற்றது நிலத்தையும் அதிலுள்ள மரங்களையும் மட்டுமே. பொன்னை அல்ல” என்றான் இளைஞன். மன்னர் அவர்களிடம், “சரி, நீங்கள் இருவரும் ஆறு மாதம் வெளிநாடு போய் வாருங்கள். பிறகு தீர்ப்பளிக்கிறேன்” என்றார். இதற்கிடையில் பக்கத்து நாட்டு மன்னர்களும் தங்களின் எண்ணத்தை தெரிவிக்க அவர்களையும் ஆறுமாதம் கழித்து வந்தால் உண்மை தெரியும் என அனுப்பி வைத்தார்.
ஆறுமாதம் கழித்து அனைவரும் அரண்மனையில் கூடினர். அப்போது முதியவரும், இளைஞனும் ஒரே குரலில்“மன்னா! பொற்பானை எனக்கே சொந்தம்” என்றனர். சாலமோன் மற்ற நாட்டு மன்னர்களிடம்,“என் நாட்டு மக்களை சூதுவாது தெரியாமல் வாழ கற்றுக் கொடுத்துள்ளேன். மற்ற நாடுகளில் இந்த வழக்கம் இல்லை. இவர்கள் அங்கே சென்றதும், அங்குள்ள பழக்கத்தைக் கற்று வந்து விட்டனர். இதனால் தான் என் நாட்டு மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதில்லை” என்றார். நம்மைச் சுற்றி நல்லவர்கள் இருந்தால் அவர்களின் நல்ல குணம் நம்மையும் தொற்றிக் கொள்ளும் என்பதே இதன் பொருள்.