பதிவு செய்த நாள்
13
நவ
2018
05:11
துாத்துக்குடி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற பலலட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் ஆணவம் கொண்டு போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்தார்.
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடப்பாண்டு சஷ்டி விழா, 8ம் தேதி, யாகசாலை பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. அதிகாலை, 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அதிகாலை, 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. 2:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை மற்றும் மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன், தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளித்தார். மாலை, 4:30 மணிக்கு, கோவில் கடற்கரையில் லட்சணக்கான பக்தர்கள் முன்னிலையில், கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷமெழுப்பினர். பின்னர், சேவல் உருவத்தில் போரிட்ட சூரனை, சுவாமி தன்னுடைய சேவற்கொடியாகவும், மாமரமாகவும் ஆட்கொண்டார். ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர். தமிழகம் முழுவதும் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்துாரில் குவிந்தனர்.