அழகர்கோவில், அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. இங்கு நவ., 8 துவங்கிய இவ்விழாவையொட்டி தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று முன் தினம் சூரம்ஹாரம் நடந்தது. நேற்று சஷ்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்ஸவம் யாகசாலை பூஜைகளுடன் நடந்தது. மலர்களால் மணவிழா மேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான சீர் வரிசைகள் இடம் பெற்றன. சிறப்பு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம் சேர்ந்த திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டன. மாலை ஊஞ்சள் சேவை, மஞ்சள் நீர் உற்ஸவத்துடன் விழா நிறைவுற்றது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்தனர்.