பதிவு செய்த நாள்
16
நவ
2018
12:11
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பூதத்தாழ்வார் திருத்தேரில் வீதியுலா சென்றார். மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம், கடந்த 7ல் துவங்கி, தினமும் மாலை சிறப்பு திருமஞ்சனம், வீதியுலா, இரவு திருவாய்மொழி என நடந்து, நாளை முடிகிறது.
முக்கிய உற்சவமாக, நேற்று, பூதத்தாழ்வார், தேரில் வீதியுலா சென்றார். கோவிலில், தின வழிபாட்டைத் தொடர்ந்து, அவர், சிறப்பு அலங்காரத்தில், அலங்கார தேரில் எழுந்தருளி, ஸ்தலசயன பெருமாள், அவருக்கு பரிவட்ட மரியாதை அளித்து வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து, 8:45 மணிக்கு, நிலையிலிருந்து புறப்பட்ட தேரை, கோவிந்தா... கோவிந்தா என, பக்தர்கள் முழங்கி, வடம் பிடித்து இழுத்தனர். தேர் புறப்பட்டதும், திடீரென மழை பெய்ய, உடனே இடி இடித்து, மழையும் நின்று, பக்தர்கள், பரவசத்துடன் தேரை இழுத்தனர். வீதிகளில், சுவாமியை தரிசித்து வழிபட்டனர். ஆளவந்தார் அறக்கட்டளை நிர்வாகம், உற்சவம் நடத்தி, அன்னதானம் வழங்கியது.