பதிவு செய்த நாள்
21
நவ
2018
10:11
சபரிமலை : சபரிமலையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாது என, கேரள உயர் நீதிமன்றம் கண்டித்தும், போலீசின் கெடுபிடி கொஞ்சமும் குறையவில்லை. அனைத்து வயது பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில், கேரளாவில், பினராயி விஜயன் தலைமையிலான, மார்க்சிஸ்ட் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு எதிராக பக்தர்கள், சரண முழக்க யாத்திரை போராட்டம் நடத்தினர்.
கட்டுப்பாடுகளால் அவதி: ஐப்பசி, சித்திரை ஆட்ட திருநாள் பூஜையின் போது நடந்த இந்த போராட்டங்களை கருத்தில் வைத்து, மண்டல கால பூஜையில், பக்தர் களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பெருமழையால் பம்பை சேதம் அடைந்ததால், நிலக்கல் வரை மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. அங்கிருந்து, அரசு பஸ்சில், பம்பை செல்ல வேண்டும்.ஆனால், இங்கு பஸ் போக்குவரத்தும் போலீசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் தரிசனத்துக்கு, ஆன்லைன் முன் பதிவு செய்தவர்களும் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேர முடியவில்லை. பம்பையில் இருந்து மலை ஏறவும், நேர கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால், 18-ம் படியில், பக்தர்களுக்காக போலீசார் காத்து நிற்கின்றனர்.கடந்த ஆண்டு வரை பக்தர் களை துாக்கி விட்டபடி இருந்த போலீசார், தற்போது வேலை இல்லாமல் நிற்கின்றனர். முன்பெல்லாம், நடைஅடைத்தாலும்,பக்தர்கள், 18-ம் படியேறி,வடக்கு வாசல் வழியாக வெளியே அனுப் பப்பட்டு, தரிசனம் செய்யலாம். தற்போது, இதற்கும் போலீசார் அனுமதிக்க வில்லை. இரவில் பக்தர்கள் பொது இடங்களில் தங்க முடியவில்லை. போலீசார் விரட்டுகின்றனர்.
இதை எதிர்த்து, இரண்டு நாட்களாக இரவில், பா.ஜ., இளைஞரணியினர் சன்னிதானத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்பிரச்னையில் போலீசின் நடவடிக்கையை, கேரள உயர் நீதிமன்றம் வன்மை யாக கண்டித்தும், எந்த மாற்றமும் இல்லை.மாறாக, ஆறு மணி நேரத்துக்கு மேல் சன்னிதானத்தில் தங்க அனுமதிக்க முடியாது என, போலீசார் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. போலீஸ் மூலம், திருவிதாங்கூர் தேவசம்போர்டை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பதாகவும், போலீசின் கட்டுப்பாடுகளுக்கு முன், தேவசம்போர்டு கைகட்டி நிற்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பம்பை சென்ற உம்மன்சாண்டி: சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டுள்ள, 144 போலீஸ் தடை உத்தரவை திரும்ப பெற கேட்டு, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குழுவினர், நேற்று பம்பை சென்றனர். நிலக்கல்லில் இருந்து காரில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பஸ்சில் பம்பை சென்றனர்.கேரள சட்டசபை எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா தலைமையில், முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உட்பட, ஏராளமான, காங்., கட்சி தொண்டர்கள் நிலக்கல் வந்தனர். அங்கு இவர்களை, போலீசார் தடுத்தனர். ஒரு மணி நேரத்துக்கு பின், பஸ்சில் செல்ல, அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து பஸ்சில் பம்பை சென்றனர். பம்பை யில் செய்யப்பட்ட வசதிகள் மற்றும் பக்தர் களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை, கேட்டு அறிந்தனர்.
எருமேலியுடன் திரும்பிய பக்தர்கள்: போலீசாரின் கட்டுப்பாடுகளால், மும்பை பக்தர்கள் எருமேலியுடன் திரும்பிய அவலம் அரங்கேறி உள்ளது.மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து, 110 பக்தர்கள் சபரி மலைக்கு புறப்பட்டனர். நேற்று எருமேலி வந்த அவர்கள், சன்னிதானத்தில் போலீசாரின் கட்டுப்பாடுகளை அறிந்து தயக்கம் அடைந்தனர். எருமேலியில் நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழிபாடுகளை செய்தனர். சபரிமலை யில் கட்டுப்பாடுகளால் இந்த முடிவை எடுத்துள்ளதாக, அவர்கள் தெரிவித்தனர்.